Sunday, October 25, 2015

பெண்களைப் புகழ்ந்து பேசிப் பேசியே

முகநூல்:
 தோழி சுலேகா 
பெண்களைப் புகழ்ந்து பேசிப் பேசியே
உண்மையில் பெண்களை பேச விடாத தந்திரக்கார சமூகமிது.
பூமியை “பூமாதேவி’ என்று
புகழ்ந்து பாடியது மதம்.
எதற்கு?
காலந்தோறும் அவளை
காலில்போட்டு மிதிப்பதற்கு.

“வம்சவிளக்கு’ என்று
பெண்ணை வருடிக்கொடுக்கும் சாதி.
எதற்கு?
கடைசிவரைக்கும் அவளை
கொளுத்தி, கொளுத்தியே கருக்கிப் போடுதற்கு.
ஆணின் ஒடுக்குமுறையோ நுட்பமானது
’’நீ பேசினால் என்னையே மறந்து விடுகிறேன்’’
-இது காதலிக்கும் போது.
’’இனி பேசினால் கொன்னே போடுவேன்’’
-இது கல்யாணத்திற்குப் பின்.
ஒரே அடியாகக் கொல்லக்கூடாது!
பெண்களும் பேசலாம்தான்,
பிடித்தமான தொலைக்காட்சி தொடர்கள் பற்றி..
’மானாட, மயிலாடா’ வில்
ஊனாடும் உருவம் பற்றி. . .
ஆலுக்காஸ் கடையின்
நகைகள் பற்றியும் ஏழுமாடி சரவணா ஸ்டோரின்
வகைகள் பற்றியும்…
அடுத்துவீட்டுப் பெண்ணிடம்
அசந்துபோய் பேசலாம்தான்…
இரண்டு வட்டிக்கு வங்கியில் வாங்கி ஐந்து வட்டிக்கு விடும்
மகளிர் சுய உதவிக்குழுவின்
மகிமைப் பற்றியும் பேசலாம்…
ஏன்?
போட்டு வந்த வளையலை வாங்கி
தங்கைத் திருமணத்திற்கு அடகு வைத்ததை மீட்டுத் தரத் துப்பில்லை என்று
கணவனிடம் கூட கலகம் செய்யலாம்.
மற்றபடி
கலைஞர் போடும் ஒரு ரூபா அரிசியைப் பாரு
உன் முகரையைப் போல,
அடுப்புக்கு நெருப்புமில்ல – சத்தாய்
ஆக்கித் திங்க பருப்புமில்ல
என்ன நாடு இது? ஆட்சி இது?
இதை எதிர்த்துக் கேட்கத் துப்பில்லாத
என்ன ஆம்பிள்ளை நீ?
என்று பெண் பேச ஆரம்பித்தால்
ஏற்குமோ இல்லற தர்மம்!
’’ஆம்படையான் எக்கட்சிக்கு ஓட்டோ
அடியேனும் அக்கட்சிக்கே ஓட்டு’’ எனப் பெண்களைப் பெரும்பாலும் பழக்கியுள்ள ஆம்பிளை சிங்கங்களுக்கு
பிடித்தமானது பெண்களின் அடுப்படிச் சுதந்திரமே
அரசியல் சுதந்திரமல்ல..

No comments: