Sunday, November 8, 2015

பெண்ணியம் என்றால்... தோழர் கொற்றவை நேர்காணல்

Nirmala Kotravai kotravaiwrites@gmail.com
பெண்கள் ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் காலடி எடுத்து அசத்தி வந்தாலும் ஆங்காங்கே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், உரிமை மீறல்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆண்களுக்கு இணையான சமத்துவம் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது பெண்ணிய முற்போக்கு சிந்தனையாளர்  களின் குரலாக இருக்கிறது. அவர்கள் பெண்களுக்கான தங்கள் கருத்துக்களை எழுத்திலும், பேச்சிலும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்   களில் ஒருவர், நிர்மலா கொற்றவை. 

பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷன் படித்திருக்கும் இவர், ‘மாசஸ்’ எனும் அமைப்பை ஏற்படுத்தி பெண் உரிமைக்காக குரல் கொடுத்து வருகிறார். 

‘‘சினிமா, விளம்பரங்களில் பெண்கள் ஆட்சேபகரமாக சித்தரிக்கப்பட்டால் அதனை எதிர்த்து எங்கள் அமைப்பின் மூலம் குரல் கொடுத்து வருகிறோம். இணைய தளங்கள் மூலமும் விழிப்புணர்வு போராட்டங்களையும் அரங்கேற்றி வருகிறோம்’’ என்று கூறும் அவருடன் நமது கலந்துரையாடல்! 

பெண்ணியம் என்றால் என்ன?

‘‘பெண் என்ற காரணத்திற்காகவே அவளுக்கென்று சமூகம் சில விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறது. அதன்படிதான் நடக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. அது பெண்மைக்கும், பெண்களின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. பெண்களின் உண்மை நிலை, தேவைகள், உரிமைகள் பற்றி மக்களிடம் எடுத்துவைக்கும் சிந்தனைதான் பெண்ணியம்’’

நீங்கள் பெண்ணிய சிந்தனையாளராக உருவாக என்ன காரணம்?

‘‘நான் வாழ்க்கையை நன்றாக புரிந்துகொண்ட பின்பு, 35 வயதில் இருந்துதான் இந்த செயல்பாட்டில் இறங்கியிருக்கிறேன். எவ்வளவு திறமைகள் இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு பல பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்படும் நிலைதான் இருக்கிறது. உறவுகள் இருந்தாலும் புகுந்த வீட்டினர் அவளை ஒரு தனித்தீவுபோல் ஆக்கிவிடுகிறார்கள். வெளியே வேலைக்கு சென்றாலும், வீட்டிலும் உழைக்கும் இரட்டை உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கிறது. வீட்டில் இருப்பவர்கள் அத்தனை பேரையும் திருப்திபடுத்தும் பொறுப்பு அவளுக்கு வந்துவிடுகிறது. ஆடை அணிவதிலும் அவளுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன.

ஒரு பெண் எந்த தவறு செய்தாலும், அவள் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் அவளுடைய ஒழுக்கம் சார்ந்ததாக இருக்கிறது. ஆனால் ஆண் தவறு செய்தால், ‘அவன் பொறுப்பில்லாமல் இருக்கிறான். கல்யாணத்திற்கு பிறகு சரியாகிவிடுவான்’ என்கிறார்கள். பொறுப்பில்லாதவர் என்று முத்திரைகுத்தப்  படும் ஆணையும், பெண் திருமணம் செய்துகொண்டு சுமந்து, திருத்தவேண்டியதிருக்கிறது. அவள் குழந்தையை பெற்றெடுத்தபிறகு வேலையை விடவேண்டியதாகிவிடுகிறது. ஆணுக்கும் குழந்தை வளர்ப்பில் பங்கு இருப்பதை சமூகம் புரிந்து கொள்ள மறுக்கிறது. பெண் மட்டும் ஏன் இத்தகைய நிர்பந்தத்திற்கு ஆளாக வேண்டும்? என்று எனக்குள் எழுந்த கேள்வியே பெண்ணியத்தை பற்றி என்னை பேசவும், எழுதவும் தூண்டியது’’    

பெண், ஆணை சார்ந்திருக்கும் நிலையை எப்படி மாற்றப்போகிறீர்கள்?

‘‘பெண் என்பவள் ஆணுக்கு சேவை செய்ய பிறந்தவள் என்று காலம் காலமாக நம்ப வைத்து வளர்த்து வந்திருக்கிறார்கள். ஆணை சார்ந்தே அவளுடைய வாழ்க்கை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அதேவேளையில் பெண்கள் கேட்கும் உரிமைகள் நியாயமானது என்பதை ஆண்களும், ஒட்டுமொத்த சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும். பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். பொருளாதார, அரசியல், சமூக விழிப்புணர்வு பெற வேண்டும். ஒருவர் மற்றொருவரை சார்ந்திருப்பது அன்பினால் மட்டுமே நிகழ வேண்டும். அதிகாரத்தால் அந்த உறவு பிணைக்கப்பட்டிருக்கக்கூடாது. இதை பெண்கள் புரிந்துகொள்ளத்தொடங்கிவிட்டார்கள். அதனால் பெண்கள், ஆண்களை சார்ந்திருக்கும் நிலை மாறிக்கொண்டிருக்கிறது. இனியும் நிறைய மாற வேண்டும்’’

பெண்கள் முன்னேற்றத்திற்கு பெண்களே தடையாக இருக்கிறார்கள் என்று கூறப்படுவது பற்றி..?

‘‘பெண்ணுரிமை பற்றி பேசினால் பெண்களை தூண்டி விடுவதாக                     குற்றம்சாட்டுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மேலும் பெண் 
உரிமைக்காக குரல் கொடுக்கும் பெண்கள் ஒழுக்க ரீதியாக விமர்ச்சிக்கப்படும் நிலையையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. பெண்  விடுதலைக்கு குரல் கொடுக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். அதனால் சமூகம்தான் தடையாக இருக்கிறது. ஆணாதிக்கம் என்று கூறுவதைவிட சமூக அமைப்பு சார்ந்த பிரச்சினையாகவே இதை கருதவேண்டும். பெண் முன்னேற்றத்திற்கு பெண்ணே தடை என்று கூறுபவர்கள்தான் பெண்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பார்கள்’’ 

பெண்ணியம் பற்றிய பேச்சு எப்போது முடிவுக்கு வரும் என்று நினைக்கிறீர்கள்?

‘‘குழந்தையை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு கணவனுக்கும் இருக்கிறது. அந்த பொறுப்பை ஆண்கள் தட்டிக்கழிக்கக்கூடாது. பெண்கள் சம்பாதிப்பவர்களாக இருந்தாலும் அந்த பணத்தை தன் விருப்பப்படி செலவு செய்யும் உரிமை அவளுக்கு இல்லை. தன்னுடைய படிப்பு, எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் உரிமையும் முழுமையாக அவளுக்கு கிடைப்பதில்லை. பெண் என்பதாலேயே பிரித்து பார்க்கும் நிலை மாறும்போது பெண்ணியம் பற்றி நிறைய பேசவேண்டியதும், எழுதவேண்டியதும் இருக்காது’’

இளைய தலைமுறையினரிடம் பெண்ணிய சிந்தனைகள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது? 

‘‘இன்றைய படித்த பெண்கள் அரசியல், சமூக விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்கிறார்கள். நான் சில இடங்களில் பெண்ணியம் பற்றி பேச சென்றபோது, ‘பெண்களுக்கு இப்போது என்ன பிரச்சினை இருக்கிறது. அவர்கள் படிக்            கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு என்ன குறை?’ என்று சிலர் கேட்கிறார்கள். பெண்களுக்கான சம உரிமை, பாதுகாப்பு பற்றி அவர்கள் யோசிப்ப தில்லை. தனியாக ஒரு பெண் சென்றால் ஒருவித பய உணர்வுடன்தான்         பயணிக்க வேண்டியதிருக்கிறது. எந்தவித அச்சமுமின்றி சுதந்திரமாக செல்லும் நிலை வர வேண்டும். இதைதான் நாங்கள் கேட்கிறோம். இளைய தலைமுறை பெண்கள், பெண்ணியத்தை கண்ணியத்தோடு வரவேற்கிறார்கள்’’ 

பெண்ணியவாதிகள் நிறைய உருவாக என்ன காரணம்?

‘‘முற்போக்கு சிந்தனையும், அரசியல், சமூக விழிப்புணர்வும் பெற்றவர்கள், நல்ல மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், பாதிக்கப்பட்டு போராட்ட களத்தில் இறங்குபவர்கள் பெண்ணியவாதிகளாக உருவாகுகிறார்கள். பெண்ணியவாதிகள் உருவாகிக்கொண்டே இருக்கவேண்டும்’’ 

பெண்ணிய கருத்துக்களிலும் அதி தீவிரம் காட்டுகிறவர்கள் இருக்               கிறார்களே?

‘‘நமக்கு தேவை சமூக மாற்றம்தான். அதை மிதமாக, மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் வழங்குவதே சரியானது. தீவிர கருத்துகொண்டவர்கள் ஆண்களை வெறுத்துப்பேசும் நிலையை அடைந்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையை நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஆண்கள் இல்லாமல் சமூகம் இல்லை. மிதவாதியாக இருந்து அவர்களிடம் கருத்துக்களை எடுத்துவைத்தால் போதும். நல்ல மாற்றங்கள் ஏற்படும்’’

பெண்ணியவாதிகளின் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்? ஆண்கள் அவர்களை திருமணம் செய்துகொள்ள தயங்குவார்களா?


‘‘முற்போக்கு சிந்தனையுடைய கணவனும், மனைவியும் வாழ்க்கையில் இணையும்போது பிரச்சினை ஏற்பட்டால் பேசி தீர்த்துகொள்வார்கள். ஆண்களும் அதே சிந்தனையுடன் இருந்தால் இணைந்து போராடுவார்கள். இருவருக்குமிடையே புரிதல் இல்லாதபோது பிரியும் சூழ்நிலை உருவாகிவிடும். பெண்கள் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை பெற்றோரிடம் தான் இருக்கிறது. திருமணம் என்பது அந்தஸ்து பார்க்கும் விஷயமாக மாறிக்கொண்டிருக்கிறது. அது இனிமையாக அமைகின்ற உறவாக இருக்க வேண்டும். இன்னொரு விஷயம் பெண்ணியவாதிகள் குடும்ப வாழ்க்கைக்கு எதிரானவர்கள் அல்ல. பெண்ணியவாதிகளின் மணவாழ்க்கையும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. உரிமையுள்ள மனைவியாக அவர்கள் குடும்ப வாழ்க்கை நடத்திவருகிறார்கள்’’

பெண்ணியவாதிகளால் சமூகத்திற்கு கிடைத்திருக்கும் பலன்கள்? 

‘‘பெண்ணியவாதிகள் நடத்திய பல போராட்டங்களால்தான் பெண்களுக்கு பாதுகாப்பும், பல்வேறு உரிமைகளும் கிடைத்திருக்கின்றன. பல சலுகைகள் கிடைக்கப்பெற்றிருக்கிறது. பெண்களை விழிப்புணர்வுமிக்கவர்களாக உருவாக்கியிருப்பதில் பெண்ணியவாதிகள் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள்’’ என்று கூறும்  நிர்மலா கொற்றவை கல்லூரிகள், சமூக அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து உரையாற்றி வருகிறார். விருதும் பெற்றுள்ளார். 40 வயதான இவர் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். புத்தகங்கள் மொழி பெயர்த்துள்ளார். இவருடைய கணவர் வசுபாரதி. மகள் வருணா. சென்னை அடையாறில் வசித்து வருகிறார்கள்.

இணையப் பிரதி http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/11/01122936/Feminism-Polite.vpf

No comments: