Thursday, December 17, 2015

சிம்பு, அனிருத் குடும்பத்தினருக்கு ...... ஒரு திறந்த மடல் நிர்மலா கொற்றவை

நிர்மலா கொற்றவை kotravaiwrites@gmail.com

 http://www.vadhini.com/2015/12/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/


 934746_10152570184935575_1968681438325238458_n

DEC 13, 2015

 சிம்பு, அனிருத் குடும்பத்தினருக்கு ......    ஒரு திறந்த மடல்  நிர்மலா கொற்றவை

உஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்

ஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப்படுற வழியப்பாருலே “பு..டை” நாயம் பேசிட்டு திரியுறவ” என்று சொல்வார்கள். ஓர் உயிரை பிறப்பிக்கும் பெண்ணின் உடல் உறுப்பிற்கு இந்த ஆணாதிக்க சமூகத்தில் இவ்வளவுதான் மரியாதை என்றோ அல்லது பெண் பித்து பிடித்து அலையாமல் வாழ்க்கையில் உருப்படும் வழியைப் பார் என்றோ சொல்வதாகவும் நாம் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், இன்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் “பு..டை” நியாயம் பேச வைத்த பெருமை உங்கள் மகன்கள் மற்றும் சகோதரர்களாகிய அனிருத்துக்கும், சிம்புவுக்கும் போய்ச் சேரும்.
இதை எண்ணி உண்மையில் நீங்கள் பெருமைப்பட வேண்டும். ஏனென்றால் ஒட்டுமொத்த தமிழகமும் மழை வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டும், உயிரையும் உடைமையையும் இழந்தும் துன்புருகையில் இவர்கள் “பு..டை” ஆராய்ச்சி செய்திருப்பதோடு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அவ்வாராய்ச்சியில், அதாவது அந்தச் சொல் உண்மையில் எதைக் குறிக்கிறது எனும் ஆராய்ச்சியில் ஈடுபட வைத்துள்ளார்கள். அடடா! ஆண் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றியிருக்கும் இம்மாபெரும் தொண்டைநினைத்து நீங்கள் நிச்சயம் பெருமைப்பட வேண்டும்.
மாண்புமிகு அம்மாக்களே, சகோதரிகளே,
உங்கள் மகண்களும், சகோதரர்களும் பாடி இசையமைத்து ‘லீக்’ ஆகிவிட்டதாகச் சொல்லப்படும் பீப் பாடலை நீங்களும் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நாடும் நாட்டு மக்கள் உணவுக்கும், உயிருக்கும், இருப்பிடத்திற்கும் செத்துப் பிழைக்கும் வேளையில் உங்கள் மகன்கள் மற்றும் சகோதரர்களாகிய அனிருத்துக்கும், சிம்புவுக்கும் தலை போகும் பிரச்சினையாக எது இருக்கிறது? “என்னா பு..டைக்கு லவ் பண்ணுகிறோம்” என்பதுதான். இதைத் தெளிவு படுத்தும் கடமை பு..டையோடு பிறந்த அனைத்துப் பெண்களுக்கும், குறிப்பாக பு..டையின் வழியாக அவர்கள் இருவரையும் ஈன்ற தாய்மார்களாகிய உங்களுக்கும் இருப்பதாக நான் எண்ணுகிறேன்.
அதன் முதல் பகுதியாக, பு…டை என்று பொறுக்கிகள் உடைத்து சொல்லியிருக்கும் அந்தச் சொல்லின் எழுத்தாக்கம் புண்டை என்பதாகும். அச்சொல்லின் பொருளை அவ்வுறுப்பைக் கொண்டவர்களாகிய நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். பெண்ணின் பிறப்புறுப்பான புண்டை க்கு  தமிழில் அல்குல்*, யோனி, பாலுறுப்பு என்று பல்வேறு சொற்கள் உள்ளன. ஆனால் இந்த புண்டை என்ற சொல்லானது ஒரு வசைச் சொல்லாக, அதிலும் குறிப்பாக பெண்களை இழிவுபடுத்தும் விதமாகத்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள், இல்லையா? ஆங்கிலத்தில் இச்சொல்லை  cunt என்பார்கள், உலகளாவிய அளவில் அச்சொல் வசைச்சொல்லாகத்தன் பயன்படுத்தப்படுகிறது. ஆணாதிக்க சமூகம் அதை அப்படித்தான் பயன்படுத்தும், ஆனால் ஒரு பெண்ணாக அந்த அல்குலின் மகத்துவத்தை நீங்கள் அறிவீர்கள்தானே. அறிந்து என்ன பயன், பிள்ளைகளுக்கு அதைச் சரியாக சொல்லிக் கொடுத்து வளர்க்கத்  தவறிவிட்டீர்கள் போலும், ஆகவே இப்போது உங்களுக்கும் சேர்ந்த புண்டையுள்ள அனைத்து தமிழ்நாட்டுப் பெண்களும் பாடம் எடுக்கும் நிலை வந்துவிட்டது.
முதலில்,
உஷா, அப்பாடல் குறித்து உங்கள் மகனாகிய சிம்பு என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? (படிக்க: http://tinyurl.com/hbl8b8pநாங்கள் தனிப்பட்ட முறையில் இசையமைத்து வைத்திருந்தோம் அது லீக் ஆகிவிட்டது என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். உங்கள் மகனுக்கு பண்பு இருக்கிறதோ இல்லையோ நல்ல சாதுரியம் இருக்கிறது. (ஆனால் அதுவும் அரைகுறை என்பதைப் பின்னர் பார்ப்போம்). போகட்டும்! அவர் சொன்னது போல் அது அவரது படுக்கையறைக்குள் மட்டுமே ஒலித்திருந்தால் இன்று தமிழகம் புண்டை நியாயம் பேச வேண்டி வந்திருக்காது. ஆனால், இப்போது (திட்டமிட்டோ, திட்டமிடாமலோ) அவரது படுக்கையறையில் அவரும் அனிருத்தும் சேர்ந்து சுய-மைதுனம் செய்த முனகல்கள் தெருவுக்கு வந்துவிட்டது. சுய-மைதுனம் தவறில்லை என்றாலும், அச்செயலினால் வெளிவந்த விந்துவை அவர்கள் ஒரு குப்பியில் பிடித்து ஜன்னலுக்கு வெளியே கசியும்படி வைத்ததன் விளைவாக, அதிலிருந்து தெரிக்கும் அமில விந்துவானது இன்று விசம் போல் பரவி ஏற்கணவே ஆணாதிக்க சிந்தனைகளால் செல்லறித்துப் போயிருக்கும் பல ஆண்களின் மூளையை மேலும் விஷமாக்கிவிட்டதுஇனி தெருவில் நடக்கும் ஒவ்வொரு பெண்களையும் பார்த்து ஆண்கள் அந்த அமிலத்தைக் கக்குவார்கள் என்பதாலும் நாங்கள் பேச வேண்டியுள்ளது.
சிம்பு வேறொன்றும் கேட்டிருக்கிறார், “என்னைக் கேள்வி கேட்பவர்கள் வீடுகளில் நான் கேமராவை வைத்து அவர்கள் பண்ணும் விஷயங்களைப் பார்த்து நீங்கள் ஏன் இப்படி எல்லாம் பண்ணுகிறீர்கள்” என்று கேட்டால் என்னவாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.” முதலில், அவருடைய வீட்டுப் படுக்கையறையை யாரும் எட்டிப் பார்க்கவில்லை என்றும், அவராக ஜன்னலைத் திறந்து வைத்திருந்தாலே ஒழிய உள்ளே நடப்பது வெளியே தெரியாது என்பதையும் அந்த மரமண்டைக்கு தெளிவுபடுத்துங்கள். மேலும், உங்கள் தவப்புதல்வனுக்கு மற்றொன்றையும் சொல்லிக் கொடுங்கள், ஒருவேளை அவர் சொல்வது போல் யாரோ எட்டிப் பார்த்து ‘கசிய’ விட்டுவிட்டார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், தனக்கு நேர்ந்த துன்பம் மற்றவருக்கு நேரக்கூடாது என்று எண்ணி, அப்படிச் செய்யாதீர்கள் என்று சொல்வதுமே பண்புள்ள செயலாக இருக்க முடியும்.  மேலும், உண்மையிலேயே அவர் கூற்றில் உண்மையிருக்கும் எனில், நாங்கள் தனிப்பட்ட முறையில் பாடலிசைத்துக் கொண்டிருந்தோம் அது எப்படியோ கசிந்து விட்டது, பெண்களை இழிவுபடுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை, இது ஒரு தனிப்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பு இப்படி ஏதேனும் சொல்லி இருப்பார், ஆனால் திட்டமிட்டு வெளியிட்டு, இதுபோன்ற எதிர்வினைகள் வந்தால் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று முன்பே பதிலையும் தயாரித்து வைத்திருந்தாரோ  என்றுதான் இப்போது எண்ணத்தோன்றுகிறது. அதிலும், இதுபோன்ற ஆடியோக்களை ‘லீக்’ செய்வதில் உங்கள் மகன் கை தேர்ந்தவர் என்பதை நீங்களே அறிவீர்கள், இல்லையா.
பெண்களைத் தொட்டு நடிப்பது கூட தவறு என்று கருதும் திரு. டி.ராஜேந்தர் அவர்களே, இந்தப் புண்டை பாடல் பற்றியும், தொடர்ந்து உங்கள் மகன் பெண்களை இழிவுபடுத்தும் விதமான வசனங்களையும், பாடல்களையும் கொடுப்பது பற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்துள்ளதா?
லக்‌ஷ்மி, ராகவேந்தர் நீங்கள் இருவரும் கலைஞர்கள். (அனிருத் யார் என்று ஆராயும் துர்பாக்கிய நிலைக்கு இன்று உள்ளானேன்). அனிருத் தொடர்ந்து இதுபோல் பொறுக்கித்தனமான பாடல்களைப் படைப்பது பற்றி உங்கள் இருவரது கருத்து என்ன? அதிலும் கலை என்பது சரஸ்வதி கடாட்சம், கலை என்பது தெய்வீகமானது என்றெல்லாம் சொல்லும் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர்கள் நீங்கள், சொல்லுங்கள் அனிருத் இசையமைக்கும் கொல வெறி, புண்டை பாடல்களும் சரஸ்வதிதேவியின் கடாட்சத்தினால் பிறந்ததுதானா? இதுவும் இசைதான், கலைதான் என்றால் தியாகராயர் தொடங்கி பாலமுரளி கிருஷ்ணா போன்றோர் வரை எவரேனும் இப்படி புண்டைப் பாடல்களை பாடியிருந்தால் சொல்லவும்.  நீங்கள் வணங்கிப் பின்பற்றும் நாட்டிய சாஸ்திரத்தில் இப்படிப்பட்ட பாடல்களும் கலையென எங்கேனும் குறிப்பிடப்பட்டுள்ளதா? இல்லையென்றால், உங்கள் முன்னோர்கள் கலையென்று ஒன்றை வரையறுத்திருக்க, நீங்களும் உங்களது வாரிசுகளும் ஆச்சார அனுஷ்டானங்களை மீறி வேறு ஏதோ ஒன்றை கலை என்று வியாபாரம் செய்கிறீர்கள் என்று நாங்கள் புரிந்துகொள்ளலாமா? உங்கள் மத நம்பிக்கைப்படி இது பாவத்தில் சேர்த்தியா அல்லது புண்ணியத்திலா?
அதேபோல், ராகவேந்தர் ஒரு பேட்டியில் அனிருத்தின் திறமை அந்த கடவுளர்கள் அருள் பாலியது என்றெல்லாம் காலாட்டிக்கொண்டே பெருமை பேசியிருக்கிறார். சொல்லுங்கள், உங்கள் கடவுளர்களும் இப்படி சதா சர்வ காலமும் புண்டை ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள்தானா? யார் அந்தக் கடவுளர்கள், அவர்கள் இசையமைத்த மற்றும் அவர்களது பத்தினிகள் நடனமாடிய புண்டைப் பாடல்கள் இருந்தால் பகிரவும். பார்க்க, கேட்க ஆவலாக உள்ளோம். இருபிள்ளைகளில் எவர் முதலில் பு..டையை வெல்வது எனும் போட்டிகள் நடந்த புராணங்கள் ஏதேனும் இருக்கிறதா?
இத்தருணத்தில் எனக்கொரு வேண்டுகோள் உள்ளது, இப்போது டிசம்பர் மாதம், மன்னிக்கவும், தமிழ்நாட்டுக்கு மட்டும் அது பார்ப்பன ஆதிக்க மாதம். அது எம் தலையெழுத்து, போகட்டும். இந்த மார்கழி மாத குளிருக்கு இதமாக நான் ஒரு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யவிருக்கிறேன். அதில் ஒப்பனிங் சாங் இந்தப் புண்டை பாடல்தான் இதற்கு லக்‌ஷ்மி நீங்கள் நடனமாட வேண்டும். அதற்கு சம்பளம் எவ்வளவு என்று தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.   அதற்கு முன்னர் எனக்கொரு சந்தேகம், இந்தப் புண்டை எனும் சொல்லுக்கு நீங்கள் எப்படி முத்திரை பிடிப்பீர்கள் என்பதை ஒரு முன்னோட்டமாக உங்கள் அலைபேசியில் படம்பிடித்து வாட்ஸப்பில் அனுப்பினால், அது பொறுத்தமாக இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்த்து, தேவைப்பட்டால் சில இம்ப்ரூவ்மெண்டுகளை செய்துகொள்ளலாம். அதேபோல் “உண்ணை டார் டாரா கிழிச்சு ஓத்துட்டுப் போனவள” எனும் வரிக்கு நீங்கள் எப்படி அபினயம் பிடிப்பீர்கள் என்றும் ஒட்டுமொத்தமாக அந்தப் பாடலுக்கு எப்படி நடனம் அமைப்பீர்கள் என்றும் பார்க்க ஆவலாக உள்ளது. அதுமட்டுமின்றி “மூடிட்டு சும்மா இரு” என்பதில் எதை மூடச் சொல்கிறார்கள், எப்படி மூடச் சொல்கிறார்கள், ஏன் மூடச் சொல்கிறார்கள் என்பதும் ஐயமாக உள்ளது, இதையெல்லாம் உங்கள் நடனம் மூலம் தெளிவுப்டுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன். முடிந்தால் இதனை ஒரு வீடியோ ஆல்பமாகவும் கொண்டு வருவோம்.
கச்சேரி நடக்கும் அரங்கத்தில் வைஷ்ணவிக்கும், இலக்கியாவிற்கும்தான் முதல் வரிசையில் இடம். விருப்பப்பட்டால் அவர்களும் மேடை ஏறி ஆடலாம். அவர்களுக்குப் பெண் குழந்தை இருப்பின், அல்லது இனி பிறப்பின் அவர்கள் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலை பாடுவதற்கு நான் வாய்ப்பு வாங்கித் தருகிறேன். ஆனால் அவர்கள் பீப் இன்றி என்னா புண்டைக்கு  லவ் பண்றோம் என்றும், டார் டாரா கிழிச்சு ஓத்துட்டுப் போனவள என்று முழு வார்த்தைகளையும் உடைக்காமல் பாட வேண்டும்.
லதா, நீங்கள் நடத்தும் பள்ளியில் இப்பாடலை தினம் தினம் காலையில் அசெம்ப்ளியில் ஒளிபரப்பி உங்கள் அண்ணன் மகனின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் நீங்கள் உதவலாம்.  உங்களது பேத்திகளும் சூப்பர் சிங்கரில் இப்பாடலைப் பாடியோ அல்லது அவர்களை வைத்து இந்தப் பாடலை ஒரு வீடியோ ஆல்பம் செய்வது குறித்தும் நாம் யோசிக்கலாம்.
சிம்புவும், அனிருத்தும் செய்த ஒரு செயலுக்கு எங்களைப் பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது? ஆண்கள் செய்யும் தவறுக்குப் பெண்களைப் பழிக்கும் வழக்கமான செயலை நான் செய்ததாக நீங்கள் குற்றம் சாட்டக் கூடும். மன்னிக்கவும், அது போன்ற அறம் சார் அனுகுமுறை உங்களது குடும்பங்களுக்குப் பொருந்தாது என்பதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். சமூகத்தின் பெரும்பாலான குடும்பத்தில் உள்ள பெண்களின் நிலை போல் அல்ல உங்களது நிலை. ஏனென்றால், உங்கள் மகன்களின் ‘தெய்வீகத் திறன்கள்’ குறித்து கலைக் குடும்பமாக நீங்கள் அனைவரும் பெருமை பேசியுள்ளீர்கள், அவர்களின் படைப்பை கலை என்று நீங்கள் சத்தியம் செய்வதாலும் உங்களிடம் முறையிடுகிறோம்.
மேலும், உங்கள் அனைவருக்கும் திரைத்துறையோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ளது எனும் அடிப்படையில், திரைத்துறையின் ஆணாதிக்க வக்கிரம் குறித்து உரையாட வேண்டியுள்ளது. ஏனென்றால் ஏற்கனவே ஒரு தலைமுறை செய்த ‘கலைச் சேவை’ பத்தாதென்று அடுத்த தலைமுறையாக சிம்புவும் அனிருத்தும் கலைச் சேவையை கொலை வெறியுடன் ஆற்ற வந்திருக்கிறார்கள். கண்டிப்பாக அடுத்த தலைமுறையையும் நீங்கள் தயார்படுத்தி விடுவீர்கள். அதற்குள்ளாகவாவது கடவுளர்கள் அருள் பாலித்திருக்கும் உங்கள் மூளைகளுக்கு கலையோடு கலையாக சிறிதேனும் சமூகப் பொறுப்புணர்வை ஊட்டிவிட முடியுமா எனும் ஒரு எளிய முயற்சியே இது.
ஆணாதிக்க சமூகத்தின் அனைத்து மட்டங்களும், படைப்புகளும் ஆணாதிக்க சிந்தனயோடே இருக்கும். ஆனால் அதையும் தாண்டி சமூகத்திற்கு விழிப்புணர்வும், அறிவும் ஊட்டும் படைப்புகளையே கலை என்று சொல்ல முடியும், அதுவல்லாத எது ஒன்றும் வியாபாரமே. அந்த வகையில் இந்த திரைத்துறை ஒரு தொழில் நிறுவனம் என்பது நிதர்சனம். அதில் கடைந்தெடுத்த அயோக்கியர்கள்தாம் சிம்பு, அனிருத், தனுஷ் உட்பட பெரும்பாலான கதாநாயகர்கள் மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள். இந்தப் பட்டியலில் தற்போதைய வரவு நீ எனக்குப் பிட்டுப் படம் என பாடிய ஜி.வி. பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் படைப்பதில் தொடங்கி பெண்களை பழித்தும், இழிவு செய்தும், ஆதிக்கம் செலுத்தியும், ஆபாசப் பாடல்கள் வழியாக பாலியல் ரீதியாக சுரண்டியும்தான் திரைப்படங்கள்  வெளி வருகின்றன. இதையெல்லாம் பார்க்கும்பொது பெண்களாக நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?  ஐஷ்வர்யா, சௌந்தர்யா என்று உங்கள் குடும்பத்தில் பெண் இயக்குனர்கள் வந்தார்கள் திரைத்துறையின் வக்கிரத்திற்கெதிராக புரட்சிகரப் படைப்புகள் கொடுப்பார்கள் என்று பார்த்தால் அவர்களின் இலட்சியமும் மிகத் தெளிவாக இருக்கிறது.
இப்படி உங்களது குடும்பங்களால் பாதிக்கப்பட்ட பெண்களாகிய எங்களுக்கும், எங்களது குடும்பத்தாருக்கும்  உங்கள் படைப்புகளை காசு கொடுத்துப் பார்க்கும் நுகர்வோர் என்ற உரிமையில் கேள்வி கேட்கும் உரிமை உண்டல்லவா?
ஓரளவுக்கு ‘அடக்கத்தோடு’ ஆடிக்கொண்டிருந்த ஆணாதிக்கத் தடித்தனத்தை  கொலைவெறிடி பாடல் மூலம் தறிகெட்டு ஓடும்படி கட்டவிழ்த்து விட்டு இந்த சீரழிவிற்கு பலமான உரம் போட்டவர் உங்கள் குடும்ப வாரிசான ஐஷ்வர்யா தனுஷ் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட அனிருத்.  அவரைத் தொடர்ந்து அட்றா அவளை, வெட்றா அவளை என்று கொலை வெறியைத் தொடர்ந்தவர் அவரது கனவரான தனுஷ், அதற்கு இசையமைத்தவர் பிட்டுப் பட ஜி.வி. பெண்களைப் பழிக்கும் பாடல்கள் இல்லாத படங்களே இல்லை எனும் நிலை தற்போது வந்துவிட்டது.
ஒரு பக்கம் ஆண்கள் ரவுடிகளாக, பொறுக்கிகளாக, அடியாட்களாக, சைக்கோக்களாக எப்படி இருந்தாலும், பெண்கள் அவர்களை காதலித்தே ஆக வேண்டும் என்று கட்டளையிடுகின்றன திரைப்படங்கள். அப்படி காதலிக்காத பெண் பேராசை பிடித்தவள், திமிர் பிடித்தவள். அல்லது காதலித்த பின்னர் அவனது செயல்கள் பிடிக்காமல் அவனை விட்டு நீங்க விரும்பினால், அவள் வேசி, இதுதான் திரைப்படங்கள் பெண்கள் மீது குத்தும் முத்திரை. ஆனால் அப்படி ஒழுக்கம் பேசும் ஆண்கள்தான் கதாநாயகியின், நடனப் பெண்களின் தொப்புளை நக்காத குறையாக பெண்களின் உடலை அங்குலம் அங்குலமாக தடவியபடி ஆடிப் பாடி மகிழ்ந்து, ஊரிலுள்ள பெண்கள் அனைவரையுமே ஒரு பாலியல் பண்டமாகக் காணும்படி கற்றுக்கொடுக்கிறார்கள். இதனால் ஏற்படும் பின்விளைவுகளை அறியாதவர்களா நீங்கள். பெண்கள் மீது திரைத்துறை நிகழ்த்தும் வன்முறை கண்டு உங்களுக்கெல்லாம் கோபமே வரவில்லையா? இரத்தம் கொதிக்கவில்லையா?
“அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கையில நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல” என்று உங்கள் குடும்பத் தலைவர் ரஜினிகாந்த் சொல்லிவிட்டதால் நீங்களெல்லாம் அடக்க ஒடுக்கமான பெண்களாக இருக்க முடிவு செய்துவிட்டீர்களா? ஆனால் மானமும், அறிவும் உள்ள பெண்களாகிய நாங்கள் அப்படி இருக்க முடியுமா என்ன? உங்களைப் போன்ற கலைக் குடும்பங்களுக்கு நாங்கள் கொடுக்கும் காசு மட்டும் வேண்டும் ஆனால், நாங்கள் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது, விமர்சிக்கக்கூடாது, கண்டிக்கக்கூடாது, அப்படித்தானே? இது பாசிசமாகத் தோன்றவில்லையா உங்களுக்கு.
எல்லா விஷயங்களிலும் ஒழுக்கம் பேசுபவர்களாகவும், விதிகளை உருவாக்குபவர்களாகவும் இருப்பது பார்ப்பனர்களே, அதேபோல் அதை உடைத்து, கலாச்சாரத்தை சீரழித்து, அதற்கும் கலை, சுதந்திரம் என்று பேசி நன்றாக காசு பார்ப்பவர்களாக இருப்பவர்களும் நீங்கள்தானே. பெண்களுக்கு கல்வி கூடாது, 9 வயதில் திருமணம் செய்து வையுங்கள், பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது என்றெல்லாம் மனு சாஸ்திரங்களை எழுதி வைத்துவிட்டு, கொல்லைப் புறம் வழியாக உங்கள் வீட்டுப் பெண்களை மட்டும் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் செய்தவர்கள் உங்கள் இனம்தானே? இப்படி நீங்களும், உங்களுக்கு ஆதரவாக இயங்கும் ஆதிக்க சாதியினரும் உருவாக்கும் அநீதிக்குறிய விதிகளையும், கேவலமான முன்மாதிரிகளையும் எதிர்ப்பதும், கண்டிப்பதும், முறியடிப்பதுமாகவே எங்கள் பொழுதுகள் கழிகின்றன. இப்போது திரைத்துறையிலும் உங்களது வாரிசுகள் அராஜகம் செய்து வருகின்றனர். அதை சரஸ்வதி கடாட்சம் என்று ஒரு பெண்ணின் பெயராலேயே நியாயப்படுத்துகிறீர்களே, வெட்கமாக இல்லை?
திரைத்துறையில், ‘கலைத்துறையில்’ பணிபுரிபவர்களான உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். பெரும்பாலான திரைப்படங்களில் (அநேகமாக எல்லாம்) ஆண்கள் மட்டுமே உண்மையாக காதலிப்பவர்களாக, காதலால் பாதிக்கப்படுபவர்களாக காட்டுகிறார்கள். அவர்களுக்கு மட்டுமே சோகப் பாடல்களும், சூப் சாங்குகளும் உள்ளன. தண்ணி அடித்துவிட்டு சாலைகளில் ‘பாலுறவுக்கான’ உடல் அசைவுகளை  காட்டி காட்டி ஆடுகிறார்கள். ஏன்? பெண்கள் யாருமே உண்மையாக காதலிப்பவர்கள் இல்லையா? அல்லது ஆண்களால் அவர்கள் பாதிக்கப்படுவதே இல்லையா? காதல் தோல்விகள் பெண்களுக்கு இல்லையா? என்ன இது? ஏன் இப்படி என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?
ஏதாவது கேள்வி கேட்டால் கருத்து சுதந்திரம்.
எது கருத்து சுதந்திரம்? சமூகத்தை சீரழிப்பதா?
அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பது கருத்து சுதந்திரம். அதிகாரத்தின் முகத்திரையைக் கிழிப்பது கருத்து சுதந்திரம். சமூகத்தை முன்னேற்றுவதற்காக முன்வைக்கும் கருத்துகள் விமர்சனங்கள் கருத்து சுந்தந்திரம். அவை முடக்கப்படும்போதும், விளிம்பு நிலை மக்களின் குரல்கள் நசுக்கப்படும்போதும் அதற்குக் குரல் கொடுப்பது கருத்து சுதந்திரம். மாறாக, நினைப்பதையெல்லாம் பேசுவதும், வக்கிரங்களைப் பரப்புவதும், இன,மத, சாதி, பால் அடையாளம், பாலியல் மற்றும் உடலியல் மாற்றங்களை இழிவு செய்வதுமா கருத்து சுதந்திரம்? நீங்களெல்லாம் ஆறறிவுள்ள மனிதர்கள்தானே? சிந்திக்கத் தெரியாதா உங்களுக்கு?
இல்லையேல் இன்னொரு பதில், மக்கள் ரசிக்கிறார்கள் என்பது. சிம்பு, அனிருத், தனுஷ், ஜி.வி மற்றும் திரைத்துரையின் இதர ஆண்களே, இந்த சமூகத்தின் ஆண்கள் உங்கள் வீட்டுப் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களையும், அந்தரங்கக் காட்சிகளையும்  , ஆபாச நடனங்களையும் கூடத்தான் ரசிப்பார்கள் நீங்கள் ஏன் உங்கள் அம்மாக்களையும் சகோதிரகளையும் ஆடவைத்து பாடவைத்து அதுபோன்ற காட்சிகளை வெளியிடக்கூடாது. பிடித்தால் பாருங்கள், பிடிக்காவிட்டால் அணைத்துவிட்டு போங்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். செய்வீர்களா?
சிம்பு மற்றும் அனிருத் குடும்பத்துப் பெண்களே, இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை, திரைத்துறையில் உங்களது வாரிசுகளின் வக்கிரத்தைக் கண்டித்தும், பெண் உடல் சுய-மரியாதை மீட்பிற்கும் களமிறங்க உங்களுக்கு இப்போதும் வாய்ப்புள்ளது. அதை முதலில் உங்கள் வாரிசுகளுக்கெதிராக தொடங்குவோம்.  திரைப்படங்கள், ஊடகங்கள் இவற்றில் பெண் உடல் சித்தரிப்பு மற்றும் ஆபாச பாடல்வரிகளை எதிர்த்து ஓர் ஆர்பாட்டம் செய்ய விழைகிறோம், அதற்கு உஷாவாகிய நீங்களும், லக்‌ஷ்மியாகிய நீங்களும்தான் தலைமை தாங்க வேண்டும்.
இது குறித்துப் பேச நேரம் தருவீர்களா?

Thursday, November 26, 2015

தாலி பெண்ணுக்கு அழகா? அடிமைச்சங்கிலியா? – வினோத் களிகை


in சமூகம், சாதியம், சிறப்புக் கட்டுரைகள், பண்பாடு, பெண்ணுரிமை April 1, 2015 0

மார்ச்-8 பன்னாட்டு உழைக்கும் பெண்கள் நாளை ஒட்டி ஒரு செய்தித் தொலைக்காட்சியில் நடந்த ’தாலி’ பற்றிய விவாதத்தில் தொடங்கி, அது இந்துத்துவ பயங்கரத்தின் ”டிபன் பாக்ஸ்” வெடிகுண்டு என தொடர்ந்து, இன்று பல கட்டங்களைத் தாண்டி தி.க. இயக்கம் அறிவித்துள்ள தாலி அகற்றும் நிகழ்ச்சி, ’தாலி’ தமிழர் பண்பாடு என்று இந்நிகழ்வை எதிர்ப்பது என போய்க்கொண்டே இருக்கிறது…
தாலி பற்றி சிந்திப்பதற்கு முன் நடக்கும் சில பிழையான விவாதங்களைக் காண்போம்…
1) தமிழ்ச் சமூகத்தில் தாலி ஆரம்ப காலகட்டத்தில் இருந்து குடும்பத் தலைவியால் திருமணத்தின் குறியீடாக அணியப்பட்டு வருகிறது. அது தமிழர் பண்பாடு, பாரம்பரியம் என்று சொல்வது.
2) அன்பும் அறனும் நிறைந்த இல்லறத்தில் குடும்பத் தலைவன்-தலைவிக்கு இடையே குடும்பத் தலைவிக்கு மட்டும் குடும்ப உறவின் புனிதக் குறியீடு தாலி, இது மிகவும் அவசியமானது என்று பேசுவது.
3) ஒரு பெண்ணிற்கு குடும்ப அமைப்பில் மட்டுமல்ல சமூக அமைப்பிலும் பொருளாதார வலிமையில்லாததை, எந்த முடிவையையும் தானாக எடுக்க முடியாததை, சம்மற்ற தன்மையைப் பற்றி பேசாமல் ஒரு பக்கம் தாலி அணிவது குடும்பப் பெண்ணுக்கு புனிதம் என்றும், இன்னொரு பக்கத்தில் தாலி மறுத்தல்தான் முற்போக்கு என்றும் பேசுவது.
எப்படியாயினும் இன்றைக்கு எதார்த்தத்தில் பெண்கள் தாலியை குடும்ப உறவின் அடையாளமாக அணிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது எப்படி? என்ற கேள்வி எழுகிறது… மனித சமூக வளர்ச்சியை ஒப்பிட்டு அறிந்தால் எப்படி என புரிவது எளிது.
ஆதிப் பொதுவுடைமைச் சமூகமும், குடும்பமும்:
ஆரம்பத்தில் சிறு சிறு கூட்டமாக வேட்டையாடி நாடோடியாக அலைந்து திரிந்த மனித சமூகம் விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கூட்டத்தை பெருக்கியது. பின்னர் புதுப்புது வேட்டைக்கருவிகளை கண்டறிந்து முன்னேறி உற்பத்தி கருவிகளை கண்டுபிடித்த மனித சமூகம் நீர் உள்ள பகுதிகளில் நிலையான உணவு உற்பத்தியில் ஈடுபட்டதும் கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு முறையும் சில ஒழுங்குமுறைகளையும் உருவாக்கியது.
உற்பத்தி செய்த உணவு தானியங்கள், கால்நடைகள், செல்வங்கள் பொதுவில் தாயின் கட்டுப்பாட்டில் நுகரப்பட்டன. இத்தகைய இனக்குழு சமூக அமைப்பில் உறைவிடமும் பொதுவாகவே இருந்தது. அதனால் இந்த தாய்வழிச் சமூகத்தில் குழந்தைகள் தாயின் வழிப்படுட்டு மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டனவேயன்றி தந்தை வழிப்பட்டல்ல, அதற்கான கேள்வியும் இங்கே எழவில்லை. குடும்பம் என்ற அமைப்பும் தோன்றவில்லை அல்லது அதற்கான தேவையில்லை. தாய்வழிச் சமூக அமைப்பிலிருந்து தந்தைவழி சமூக அமைப்பாக மாறிய பின்னர் குடும்ப அமைப்பு முறையும், தனிக்குடும்பத்திற்கென உறைவிடமும் தோன்றியது. இந்த மாற்றத்திற்கான அடிப்படை காரணம் முன்பு சமூகத்திடம் இருந்த சொத்து, இப்பொழுது தனி நபர்களிடம் கைமாறியதே.
இதனால் தன்னிடம் உள்ள சொத்து அடுத்த தலைமுறையில் யாருக்கு? என்ற வினா எழுந்தபோது தந்தை வழி குழந்தைகளுக்கு என்றானது. தந்தை வழி சமூக அமைப்பின் வளர்ச்சியிலேயே குடும்ப அமைப்பில் பெண்ணுக்கு கற்பு, தாலி என்பது முக்கியமாக ஆனது. அதே சமயம் ஆண்கள் முன்பு போலவே பலதார மணத்திலும், பொது மகளிர் முறையிலும் தொடர்ந்தனர். இது இன்று வரை தொடர்கின்றது, அதாவது பெண்களுக்கு மட்டும் தான் கற்பு , தாலி போன்ற வரையறைகள் உருவாக்கப்பட்டன, ஆண்களுக்கல்ல. ஏனென்றால் இவற்றை உருவாக்கியது ஆண்கள்.
GA6703_1i_MG_8577
சாதிய நிலவுடைமை தனிச்சொத்து சமூகமும் குடும்ப அமைப்பும் தாலியும்:
தொடர்ச்சியான உற்பத்திக் கருவிகள், உற்பத்தியின் வளர்ச்சியால் உருவான மிகையான பொதுச் சொத்தை தன்னுடைய ஆயுத பலத்தால் வசப்படுத்தி உழைக்காமல் அந்த இனக்குழுவை கட்டுபடுத்தும் தலைமைப் பொறுப்பிற்கு ஒரு பிரிவு வந்தது. மற்றவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து ஒடுக்கி பெரும்பான்மையினரை உழைக்கும் பிரிவினராக மாற்றியது. பொதுச்சொத்து இப்போது இவர்களின் தனிச்சொத்தானது. அடிமை வர்க்கத்தை உருவாக்கியதன் மூலம் ஓய்வு பெற்ற ஒரு பிரிவினர் கலை, அறிவியல், வரலாற்றியல் என்பது போன்ற புதிய பிரிவுகளை உருவாக்கத்தளைப்பட்டனர். தனிச்சொத்துப் பிரிவினரைப் பாதுகாக்கவும், உழைப்புப் பிரிவினரை அடக்கி ஒடுக்கவும் சமூக நிர்வாகத்தை கவனிக்கவும் அரசு உருவாகியது.
இப்படியான பல்வேறு இனக்குழுக்களின் சிறுசிறு கூட்டங்கள்தான் பிற்காலத்தில் ஒரு சிற்றரசின் கீழ் ஒரே ஊரில் பல்வேறு சாதியினராக சேர்ந்து சாதிய நிலவுடைமைச் சமூகமாக வாழ்ந்துவருகின்றனர். அதனால் இனக்குழுத்தன்மை சாதியச் சமூகத்திலும் நீடிக்கிறது. செல்வத்தின் மீதான பங்கீடு சாதி வாரியான‌ ஏற்றத்தாழ்வோடு உள்ளது. இந்த தனிச்சொத்து சமூக அமைப்போடு தொடர்புடைய குடும்ப அமைப்பின் இறுக்கமும் அதிகமாகியுள்ளது. இதனால் பண்பாட்டுத்தளத்தில் கதைகள், வழக்காறுகள் குடும்ப அமைப்பை மிக முக்கியம் என்று வலியிறுத்துகின்றன. இதற்காக சில கடவுளர்களும் கூட தோன்றி குடும்பத்தலைவி கற்புக்கரசியாக இருக்க வேண்டும், தாலி மிகவும் புனிதம் என்று கூட சொல்லிவருகின்றார்கள்…
முதலாளிய வளர்ச்சியும் குடும்ப அமைப்பில் நடந்த மாற்றமும்
தொழிற்புரட்சி காலத்திற்கு பின் உற்பத்தி கருவிகளின் அதிதீவிர வளர்ச்சியால் ஐரோப்பிய சமூகம் பெருவளர்ச்சியை நோக்கி முன்னேறியது. தனிச்சொத்தும் செல்வமும் பெருகி மூலதனம் பலமடங்காக திரண்டது. மூலதனமே அங்கு அரசன். அதற்கு முன் ஆண்-பெண் வேறுபாடு முக்கியமல்ல. பெண்கள் உற்பத்தியில் மட்டுமின்றி அரசியலிலும் பங்கெடுக்க ஆரம்பித்தனர் அல்லது அதற்கான தேவையேற்பட்டது. அதனால் குடும்ப அமைப்பிலும் மாற்றம் வர ஆரம்பித்தது. ஆணும் பெண்ணும் சமமாக இருவருமே மோதிரம் மாற்றிக் கொள்வதும், திருமணம் பண்ணிக்கொள்ளாமலே இணையர்களாக வாழ்வதும் இன்றைய நிலையில் மேலைத்தேய நாடுகளில் நடந்து வருகிறது.
புதிய தொழில் வளர்ச்சியினால் உருவான முன்னேறிய ஐரோப்பிய அரசுகள் மேலும் செல்வங்களையும் மூலதனத்தையும் பெருக்க ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்க நாடுகளை பிடிக்கும் போட்டியில் ஈடுபட்டன. அப்படித்தான் ஆங்கிலேயப் பேரரசு தெற்காசியா முழுவதும் பிடித்து அடிமையாக்கி அந்த நாட்டின் வளங்களையும், செல்வங்களையும் சுரண்டியது. இது நம்முடைய சாதிய சமூக பொருளியல் அமைப்பில் உள்ளீடாக சில மாற்றங்களை ஏற்படுத்தியது.
நிலத்தில் அடிமை உழைப்பாளிகளாக இருந்த பலர் இப்போது சுதந்திரக் கூலிகளாக நகர்ப்புறத்தில் குடியேறினார்கள். இந்த மாற்றம் தான் பண்பாட்டுத்தளத்தில் நமது குடும்ப அமைப்பிலும் மாற்றத்தை கோரி நின்றது. நிலத்தில் வேலை பார்த்தோ வீட்டு வேலைகளை மட்டும் பார்த்தோ அதுவரைப் பொருளாதார வலிமை இல்லாமல் குடும்ப அமைப்புக்குள் சிக்கிய இருந்த நம் பெண்கள் பொருளாதாரத்தில் ஆண்களை மட்டும் சார்ந்து வாழ வைக்கப்பட்டார்கள். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் சீர்திருத்த பரப்புரைகளும், செயல்பாடுகளும் பெண்களுக்கு தன்மான உணர்வைத் தூண்டியது, சமூக அமைப்பில் சம உரிமைக்காக போராடினார்கள். குடும்ப அமைப்பில் ஆணும் பெண்ணும் சமத்தன்மையை வலியுறுத்தி பெண்களுக்கு தாலி அணியாத சுயமரியாதைத் திருமணங்களைச் செய்துகாட்டி அதில் வெற்றியும் பெற்றது திராவிட இயக்கம்.
ஆக பொருளியல் அடிப்படையிலான உற்பத்தி மற்றும் சமூக அமைப்பின் வளர்ச்சிப் போக்கில்தான் குடும்ப அமைப்பும் மாற்றத்திற்கு உட்பட்டு வளர்ச்சியடைகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கென்று தனியாக பெரிய வளர்ச்சி என்று எதுவும் இல்லை. இந்த பண்பாட்டு அசைவு சமூக அரசியல் பொருளியலில் நடக்கும் மாற்றத்தைப் பொருத்தே வெகுவாக மாறுகிறது. அதேவேளை இப்பண்பாடு அந்தப் பொருளியலை காக்கப் பயன்படும் வேலியாகவும் இருக்கும்.
11102745_767117680053457_8228579895938062067_n
தமிழர் பண்பாட்டில் தாலி:
தமிழர் பண்பாடு கோலோச்சி இருந்த சங்க காலத்தில் மட்டுமல்ல ‘தாலி’ என்ற அணிகலன் குடும்ப உறவின் குறியீடாக 10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் எந்தப் பெண்ணும் அணியவில்லை என்பது சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை கற்றுணர்ந்த தமிழ் ஆய்வறிஞர்களும், கல்வெட்டு செப்பேடுகள், பல தரவுகள் அடிப்படையில் அறிவியல்ப்பூர்வமாக ஆய்வு செய்யும் வரலாற்றியல் ஆய்வாளார்களும் ஏற்கனவே மெய்ப்பித்த உண்மை. தாலி எனும் வார்த்தை தொங்கும் அணிகலனை குறிக்கிறது. கழுத்தில், காதில், அரைஞான் கயிற்றில் என ஆணும் பெண்ணும் தொங்கவிடும்படி அணிந்த அணிகலன்களைத்தான் ‘தாலி’ என்று குறிப்பிட்டுள்ளார்கள் நம் முன்னோர்கள். 10ம் நூற்றாண்டுக்கு பின்னரே தாலி நம் சமூகத்தில் திருமணச் சடங்கில் அணிய ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுவும் சாதிக்கு ஒரு சடங்கும் தாலியும் இங்குண்டு.
துணைவனை இழந்த இளம் விதவைப் பெண்களை ”தாலி அறுத்தவள்”, ”முண்டச்சி” என்ற சாதிகளும் இங்குண்டு (”விதவை”, ”முண்டச்சி” போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் ஆண்பால் சொற்களே கிடையாது), துணைவனுடன் கருத்து வேறுபாடென்றால் பிரித்து தாலியை ”அறுத்து கட்டும்” சாதிகளும் இங்குண்டு. தாலி புனிதமானது என்றால் தான் விரும்பிய வேறு சாதி ஆணை ஒரு பெண் திருமணம் செய்து கொண்டதற்காக அதே தாலியை அறுத்து சாதி கவுரவத்திற்காக அவர்களை கொலை செய்யும் அளவிற்கு செல்வது ஏன்?  சாதியோடு பண வலிமை பிரதானமாக உள்ள சமூகத்தில் தாலியின் புனிதமும், கற்பும் அதற்கு துணைசெய்யத்தான் என்பது கண்கூடு. தாலியை கற்போடு பிணைத்து “பண்பாட்டை” காப்பாற்ற நினைப்பவர்கள் சாதியை காப்பற்ற நினைப்பவர்கள் என்பதும் தெளிவு. பார்ப்பனிய சாதிய ஒடுக்குமுறையில் வெளியேற நினைத்து கிறித்தவம், இசுலாம் தழுவியவர்களும் கூட வேறெங்கும் இல்லாத தாலியை அணிவது சாதிய பொருளியல் சமூக கட்டமைப்புக்குள் தான் அவர்களும் இருக்கிறார்கள் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
பெண்கள் தாலியை அகற்றுவது தவறா?
பெண்கள் தாலியை வைத்துதான் குடும்ப உறவில் துணைவனிடம் அன்பையும் உண்மையையும் காட்ட வேண்டுமா என்ன? அது இல்லாமலேயே அன்போடும் அறனோடும் இல்லறம் நடத்தினால், குடும்ப அமைப்பில் சமமற்ற தன்மையை வலியுறுத்தும் தாலி வேண்டாம் என்றால் தடுப்பதற்கு சனநாயக நாட்டில் வேறுயாருக்கு உரிமை இருக்கிறது? பெண்கள் தன்மானத்தோடும், பொருளாதார வலிமையோடும், சுதந்திரத்தோடும், பொது வாழ்விலும் சமத்துவத்தோடு சகமனிதனாக வாழ்வதற்கு தாலி என்ற அணிகலன் மட்டும் எப்படி தடையாக இருக்க முடியும்? யோசிப்போம்… இன்றைய நவீன காலகட்ட்த்தை விட்டுவிட்டு காட்டுமிராண்டி நாடோடி கால காட்டத்திற்கு பின்னோக்கி செல்ல விரும்புவோர் யாருமுண்டோ… அதுபோல சமூக வளர்ச்சிற்கேற்ப ஆரோக்கியாமன மாற்றங்களும் பிறக்க வேண்டாமா…?? சிந்திப்போம்…
இறுதியாக சமூக அமைப்பில் நடக்கும் மாற்றம் தான் குடும்ப அமைப்பில் மாற்றத்தை, குடும்பத்தில் சமத்துவத்தை கோரி நிற்கிறது. ஆக பெண்கள் ”தாலி அகற்றல்” போன்ற போராட்டங்கள் மூலம் குடும்ப அமைப்பில் சமத்துவத்தை அடையப் போராடுவது சமூக அமைப்பில் ஏற்படப்போகும் சமத்துவத்தின் வெற்றியில் தான் முழுமையடைய முடியும்… சாதிய ஏற்றத்தாழ்வான பொருளியல் கட்டமைப்புக்கு மாற்றாக சமூக சமத்துவத்தை நோக்கிய நம் போராட்டங்களையும் வீரியமாக முன்னெடுப்போம்… அதற்கான சனநாயகப் பண்பாட்டை வளர்த்தெடுப்போம்…
தாலிதான் பொண்ணுக்கு வேலியா?
காக்க வாரான் காவிப்பயல் போலியா
சமூகநீதி மண்ணிது வெளியேநீ போறீயா…
- வினோத் களிகை.
http://www.visai.in/2015/04/01/mangal-sutra-is-women-beauty-or-slave-chain/

Tuesday, November 10, 2015

தேவை, பாலின சமத்துவம் ----- பூமா சனத்குமார்


 

 

தில்லியில் டிசம்பர் 16ஆம் தேதி இரவு ஓடும் பேருந்தில் கொடூரக் கும்பலால் வன்புணர்ச்சிக்கு ஆளாகிச் சிதைந்த 23 வயதான மருத்துவ மாணவி பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களையும் விவாதங்களையும் தொடங்கி வைத்தபடி, சிகிச்சைகள் பலனின்றி இறந்தாள்.கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களில் அரசியல் மயமாக்கப்பட்ட தில்லி இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோர் இச்சம்பவத்தால் கொதிப்படைந்து தன்னிச்சையாகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். தில்லியில் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்துவரும் நிலைமை பெண்களையும் இப்போராட்டங்களில் பங்கேற்கத் தூண்டியது. போலீஸ் தடியடி, கண்ணீர்ப்புகை, தடுப்பு அரண்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் அடக்குமுறைகளையும் மீறி மாணவர் அமைப்புகளும் பெண்கள் அமைப்புகளும் பங்கேற்றதால் எதிர்ப்புப் போராட்டங்கள் மேலும் வலுவடைந்தன.
கோபம் கொப்பளித்த இப்போராட்டங்களின் முக்கியத்துவத்தைத் தனியார் செய்தி ஊடகங்கள் உடனடியாக உணர்ந்தன. போராட்டங்கள் குறித்த செய்திகளையும் விவாதங்களையும் ஊடகங்கள் தங்கள் TRP தரவரிசைக்கான சந்தை உத்திகளாக வழங்கியிருப்பினும் அவை மக்களிடையே பரந்த அளவில் விவாதங்களையும் விழிப்புணர்வையும் தோற்றுவித்தன.சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா உள்ளிட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் வெளியிலும் எதிர்ப்புகளைச் சந்தித்துக்கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் போராட்டக்காரர்களுக்குப் பதிலளிக்கச் சில நாட்கள் பிடித்தன. பிரதமர் மன்மோகன் சிங்கின் வார்த்தைகளில் சொல்வதானால் மாபெரும் தேசிய அவமானம் எனக் கருதத்தக்க தில்லி மாணவி வன்புணர்ச்சிக் கொடுமை தொடர்ந்து மக்களிடையே நிலவிவரும் எதிர்ப்புணர்வைத் திசைமாற்றியதில் ஆட்சியாளர்கள் சற்று ஆசுவாசம் அடைந்திருக்கக்கூடும். தில்லிப் போராட்டங்களைத் தொடர்ந்து பிறநகரங்களிலும் போராட்டங்களும் விவாதங்களும் பரவி வலுவடைந்துவந்த நிலையிலும் ஐ.மு.கூட்டணி ஆட்சியாளர்கள், பலரது விமர்சனங்களுக்குள்ளானதும் மக்களை - குறிப்பாகப் பெண்களையும் குழந்தைகளையும் - பெருமளவில் பாதிக்கக்கூடியதுமான, ஆதார் அட்டை அடிப்படையிலான நேரடிப் பணமாற்றுத் திட்டத்தைச் சமூக நலத் திட்டங்களுக்கு மாற்றாகத் தொடங்கியதைத் தீவிரமாக விரிவுபடுத்திக்கொண்டிருந்தனர். பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதைவிடப் புதிய தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதே ஆட்சியாளர்களுக்குப் பிரதானமாக உள்ளது.
வன்புணர்ச்சிக் குற்றவாளிகள் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும், தூக்கிலிடப்பட வேண்டும் எனக் கோரிக்கைகள் வலுத்துவந்த நிலையில் தில்லி மாநகரக் காவல் துறையை நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள மத்திய அரசும் தொடர்ந்து பிறமாநில அரசுகளும் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் நடைமுறைகளையும் செயல்படுத்துவதாக அறிவித்தன. தில்லி மாணவி வன்புணர்ச்சிச் சம்பவத்தை விசாரிக்கவும் தில்லியில் பாதுகாப்புக் குறைபாடுகளைக் களைந்து உறுதிப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கவும் நீதிபதி உஷா மேரா தலைமையிலான ஒரு குழுவையும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்குத் தண்டனைகளைக் கடுமையாக்கும் விதமாகச் சட்டங்களை மறு பரிசீலனை செய்வதற்காக நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் மற்றொரு குழுவையும் மத்திய அரசு நியமித்தது. தமிழக முதல்வர் உடனடியாக முன்வந்து வன்புணர்ச்சிக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, ஆண்மை நீக்கம், குண்டர் சட்டம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகள், விரைவு நீதிமன்றங்கள் எனத் தனது செயல்திட்டத்தை அறிவித்தார். ஆனால் தமிழக அரசு திருக்கோவிலூர் இருளர் பெண்கள் வன்புணர்ச்சி வழக்கை விரைவுபடுத்துவதில் அக்கறையின்றிச் செயல்படுகிறது. தில்லி மட்டுமின்றி வேறு சில நகரங்களிலும் கிராமங்களிலும் அச்சமயத்தில் நிகழ்ந்த பாலியல் வன் கொடுமைகள் ஊடகங்களில் முதன்மைச் செய்திகளாயின. உலகளவில் மரண தண்டனைக்கு எதிரான கருத்தாக்கங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில் உணர்வுமேலிட்ட இத்தருணத்தை அதற்கான ஆதரவாக மாற்றச் சிலர் முயன்றனர். பா.ஜ.க. தவிர்த்த பிற கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் பாலின வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை தவிர்த்துப் பிற கடுமையான தண்டனைகளை நீதிபதி ஜே.எஸ். வர்மா குழுவிடம் பரிந்துரைத்தன.
போலீஸ் கண்காணிப்பை அதிகமாக்குதல், தண்டனைகளைத் தாமதிக்காமல் வழங்குதல், கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்துதல், ஏற்கனவே உள்ள சட்டங்களைத் திருத்துதல், பாலியல் வன் கொடுமைகளைப் புதியதாக வரையறுத்தல், ஆதிக்க வர்க்கத்தின் தலையீடின்றி விரைவு நீதிமன்றங்கள் செயல்படுதல் என ஆலோசனைகள் குவியத் தொடங்கின. ஆட்சியாளர்களுக்கு இது குறித்து உண்மையிலேயே கவலையிருந்தால் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாகச் சட்டமாக்க வேண்டும் என The Hindu தலையங்கம் எழுதியது. நிலுவையில் உள்ள வன்புணர்ச்சி வழக்குகளை விரைந்து முடிக்குமாறு உயர் நீதிமன்றங்களை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.பலரது கவனத்திற்கு உட்பட வேண்டிய பரிந்துரையை இடைநிலைக் கல்விக்கான மத்தியக் குழு (CBSE) வழங்கியது. மனித உரிமை மற்றும் பாலினம் குறித்த கல்வியை அறிமுகப்படுத்தப்போவதாக அது அறிவித்தது. ஆசிரியர்களின் பாலியல் வன்கொடுமைக்கு மாணவிகள் ஆளாகிவரும் நிலையில் மாநில அரசுகளின் கல்வித் துறைகளும் செயல்படுத்த வேண்டிய பரிந்துரை இது. ஆணாதிக்க மதிப்பீடுகளுக்கு மாற்றாகச் சமநிலைக்கான விழுமியங்களை இளம் வயதிலேயே கற்பிப்பது அவசியமானதாகும்.
இவையாவும் திறம்படச் செயல்படுத்தப்பட்டால் குற்றங்களையும் பாலியல் வன்கொடுமைகளையும் ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்பதில் மறுப்பில்லை. இவை ஒருவகையில் ஆணின் ஆணாதிக்கப் பாலியல்பை ஒழுங்குபடுத்தலுக்கான முயற்சியும்கூட. இருப்பினும் அடிப்படையான சமூகக் காரணங்களைக் களைவதற்கான செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து முன்னெடுப்பது அவசியம்.பாலியல் வன்கொடுமைகளுக்கான தீர்வுகளாகப் பெண்கள் நவநாகரிக உடைகளை அணியக் கூடாது, இரவுகளில்
வெளியே நடமாடக் கூடாது, பள்ளி, பணி முடிந்ததும் தாமதிக்காமல் வீட்டிற்குத் திரும்ப வேண்டும், தனிப் பேருந்துகள், தனிப்பள்ளிகள் எனப் பெரும்பான்மையோர் அறிவுறுத்திப் பெண்களை மத்திய காலத்திற்கு இழுத்துச் செல்ல முயன்றனர். ஊடக விவாதங்களில் பங்கு பெற்றவர்களில் ஒரு சிலரே குறிப்பாக சல்மா, அருள்மொழி, வ. கீதா போன்றோர் சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்தை நோக்கிக் கவனத்தைக் குவித்தனர்.நுண் அதிகாரச் செயல்பாடுகளை ஆராய்ந்த மிஷேல் ஃபூக்கோ தனது The History of Sexualityஇல் பாலியல்பு கட்டமைக்கப்படும் வரலாற்றையும் தன்னிலைகளுக்கான சுய உருவாக்கச் சாத்தியப்பாடுகளையும் விவரிக்கிறார். தன்னிலைகளிலும் பாலியல்புகளிலும் செயல்படும் அதிகாரத்திற்கான ஒழுங்குபடுத்தும் தொழில்நுட்பங்களாகவே நமது சமூக உறவுகள் நிலவுகின்றன. குடும்பம் முதல் நாடாளுமன்றம் வரையிலான அதிகார அமைப்புகள், உற்பத்தி முதல் நுகர்வுவரையிலான பொருளாதார நிறுவனங்கள், இவற்றுக்கு இடைப்பட்ட சாதிய, வர்க்க, இன, மத நிலைகளினூடான சமூகத்தின் அதிகார உறவுகளில் எங்கும் பிணைந்திருக்கும் ஆணாதிக்கம் பெண்மையையும் பெண் பாலியல்பையும் தொடர்ந்து ஒழுங்குபடுத்திவருகிறது.
‘நமது சமூக வரிசையில் ஆண்கள் பெண்களை ஆளுதல் என்பது பிறப்புரிமையாக இருப்பதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்; ஒத்துக்கொள்ளத் தயங்குகின்றனர். இந்த ஒழுங்கமைவின் மூலம் அறிவார்ந்த உள்முகக் காலனியாக்கம் பெறப்படுகிறது. இதற்குக் காரணம் நமது சமூகம் எல்லா வரலாற்று நாகரிகச் சமூகங்கள் போலவே தந்தையுரிமைச் (ஆணாதிக்கச்) சமூகமாக இருப்பதுதான். ஆதிகாரப் பிரிவுகள் - ராணுவம், தொழிற்சாலை, தொழில்நுட்பம், பல்கலைக்கழகங்கள், அறிவியல், அரசியல், நீதி - எல்லாம் முற்றும் ஆண்கள் கைகளில் இருப்பதே இந்த உண்மையை நீருபிக்கப் போதுமானதாகும்’. (Sexual Politics, Kate Millet. 1969, தமிழில் சுருக்கம்: பாலியல் அரசியல் பற்றிய கோட்பாடு, அருணா, மேலும் - 12, 1991).பொதுவாகக் குடும்பங்களில் குடும்பத் தலைவனாக, வருமானத்தை ஈட்டுபவனாக, சொத்துரிமை உடையவனாக, அறிவு வலிமை கொண்டவனாக ஆணையும் வீட்டினுள் சமைத்துப் பரிமாறுபவளாக, சேவை செய்பவளாக, கற்புடையவளாகப் பெண்ணையும் இன்றும் அடையாளப்படுத்துகிறார்கள். இவற்றில் சமீப காலமாகச் சற்றுத் தளர்வு ஏற்பட்டிருப்பினும் ஆணுக்கே முதலிடம் என்பது இன்றும் நடைமுறையாகவே உள்ளது. சொத்தில் சம உரிமை பெண்களுக்குச் சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் பெரும்பாலான குடும்பங்களில் அதை முழுமையாக நடைமுறைபடுத்துவதில்லை. பெண்கள் சமநிலை அடைவதற்கான பொருளாதார அடிப்படை இன்றும் பலவீனமாகவே உள்ளது.
சாதிக் கலப்புத் திருமணத்திற்கு எதிரான வன்முறைகளின்போதும் கௌரவக் கொலைகளின்போதும் சாதிய மேலாதிக்கமும் ஆணாதிக்கமும் பிணைந்து செயல்படுவதை அறிய முடியும். சமீபத்தில் தர்மபுரியில் நடந்த சாதிய மேலாதிக்க வன்முறைகளும் அதற்கு முன்பும் பின்புமான சாதித் தலைவர்களின் அறிக்கைகளும் மிரட்டல்களும் பெண்கள்மீதான அதிகாரத்தையே மையமாகக் கொண்டிருந்தன. (கருப்பையில் இருந்து தொடங்கும் சாதி ஒழிப்பு, மாலதி மைத்ரி, தீராநதி, ஜனவரி 2013). பெண்கள்மீதான வன்கொடுமைகளின் போது ஆணாதிக்கத் திமிர் மட்டுமின்றிச் சாதிவெறியும் இணைந்து செயல்படுவதைப் போல மத, இன மேலாதிக்கத்திற்கான மோதல்களின்போதும் பெண்கள் மீதான வன்புணர்ச்சி என்பது வன்முறைகளுக்கான வடிவமாகவே செயல்படுகிறது. மத்திய கால மன்னர்களுக்கிடையிலான போர்களிலும் மொகலாயர்களின் படையெடுப்புகளின்போதும் சமீபத்தில் ஈழப்போரின் போதும் இந்து, முஸ்லிம் கலவரங்களின்போதும் புணர்ச்சி வன்முறைகள் போர்க்கோலம் பூண்டன.ஆணாதிக்கத்தையும் சாதிய மேலாதிக்கத்தையும் செயல்படுத்துவதற்கான களங்களும் கருத்தியல்களும் மதரீதியான சடங்குகளிலும் தொன்மங்களிலும் இயைந்துள்ளன. (தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு (1994), அறம், அதிகாரம் (1997), ராஜ் கௌதமன்). இந்து, இஸ்லாமிய, கிருஸ்துவச் சமூகங்களின் தொல்கதையாடல்களில் வம்சத் தொடர்ச்சி, வம்ச விருத்தி என்பன ஆண்களையே மையமாகக் கொண்டுள்ளன. மகள் என்பவள் மற்றொரு வம்சத்திற்கு, குடும்பத்திற்குத் தானமாக (கன்னியாதானம்) கொடுக்கப்பட வேண்டியவள். குடும்பத்தினரின் இறுதிச்சடங்குகள் வம்சத்தைத் தொடரும் ஆண்களுக்குரியன; வாழவந்த பெண்களுடையவையல்ல.
சமூகத்தில் காலந்தோறும் அரசியல் பொருளாதார உறவுகள் மாற்றமடையும்போது அதன் அறவியலும் மாற்றமடைகிறது. இதனடிப்படையில் மதங்களின் வரலாற்றில் மதிப்பீடுகளும் வழக்கங்களும் மாற்றமடைகின்றன. மாற்றம் அடைவதன் மூலம் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் இழக்கநேரிடுபவர்கள் மாற்றங்களை எதிர்த்துப் பழமைகளை வலியுறுத்துகின்றனர். ஆனைத்து மத, சமூகங்களின் பழமைவாதிகள் மாற்றங்களை வன்முறையுடன் ஒடுக்கத் தயங்குவதில்லை. எனினும் மாற்றங்களை முன்னெடுத்துச் செல்லும் மக்கள் வெற்றியடைந்தேவருகிறார்கள். காலந்தோறும் அடைந்துவரும் மாற்றங்களே இதற்கு சாட்சி.இந்துச் சமூகத்தில் நவீன கால மாற்றங்கள் ராஜாராம்மோகன் ராய் சதி வழக்கத்திற்கு எதிராக மறுமலர்ச்சி அடிப்படையிலான அறவியலைப் புகுத்துவதிலிருந்து தொடங்குகிறது. பால்ய விவாக மறுப்பு, பெண் கல்வி, பெண் விடுதலை என நவீனமடைந்துவரும் சூழலில் பழைமைவாதிகள் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மத்திய காலப் பழமைகளை வலியுறுத்தத் தவறுவதில்லை.
தில்லி மாணவி வன்புணர்ச்சி குறித்த விவாதங்களில், அறிவுறுத்தல்களில் பா.ஜ.க.வினர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மட்டுமின்றிச் சமூகத்தில் எல்லாத் தரப்புப் பழமைவாதிகளும் ஆணாதிக்கவாதிகளும் பெண்கள் நாகரிக உடைகளை அணியக் கூடாது, இரவு நேரங்களில் பொது இடங்களில் நடமாடக் கூடாது என மத்திய கால மதிப்பீடுகளைத் திணிக்க முயன்றனர். மத்தியப் பிரதேச அமைச்சர் ஒருவர் பெண்கள் லட்சுமணன் கோட்டைத் தாண்டக் கூடாது எனக் கட்டளையிட்டார். சத்தீஷ்கர் மாநிலப் பெண்களுக்கான ஆணையத்தின் தலைவராகப் பதவிவகிக்கும் பெண்மணியோ வன்புணர்ச்சிகள் அதிகரித்துவருவதற்குப் பெண்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றார். வன்புணர்ச்சிகள் மேற்கத்திய நாகரிகத் தாக்கமடைந்த நகரங்களில் மட்டுமே நிகழ்கின்றன பாரதப் பண்பாடுடைய கிராமங்களில் அல்ல எனக் கூறும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திற்குக் கௌரவக் கொலைகளும் தலித் பெண்கள்மீதான ஆதிக்கச் சாதியினரின் வன்புணர்ச்சிகளும் குற்றங்களல்ல போலும். மேலும் மனைவி கணவனுக்குக் கட்டுப்பட்டவள் எனப் பெண் அடிமைத் தனத்தைப் புதுப்பிப்பதற்கும் அவர் தயங்கவில்லை. பெண்களின் பாலியல் சுதந்திரம் குறித்த குஷ்புவின் கருத்திற்கு எதிராகத் தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள் திரண்டது இங்கு நினைவுகூரத்தக்கது.இஸ்லாமியச் சமூகங்களிலும் பெண்பாகுபாடு இன்றும் நீடித்தேவருகிறது. உத்திரப்பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் உள்ள இந்துக்களிடையே சில சாதிப் பஞ்சாயத்துகள் செல்போன் உபயோகிக்கவும் ஜீன்ஸ் உடை அணியவும் பெண்களுக்குத் தடைவிதித்ததைப் போல ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்ப்பூருக்கருகில் அன்ஜுமன் முஸ்லிம் பஞ்சாயத்து, தன் சமூகப் பெண்களுக்குச் செல்போன் உபயோகிக்கவும் திருமண விழாக்களில் பாடுவதற்கும் ஆடுவதற்கும் தடையிட்ட செய்தி சமீபத்தில் வெளியானது. (The Hindu, January 12, 2013). சட்டரீதியான உரிமையிருந்தும் இந்துப் பெண்கள் சொத்தில் சமபங்கு பெற முடியாததைப் போல முஸ்லிம் பெண்களும் Muslim Personal Lawவின்படி குறைந்த பங்கையே பெறுகிறார்கள். ஷாபானு வழக்கில் ஜீவனாம்ச உரிமையை உச்ச நீதிமன்றம் வழங்கினாலும் இஸ்லாமியப் பழமைவாதிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆக, மதவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட, பெண்களுக்கான உரிமைகள் என்ற அடிப்படையில் பொதுக் குடிமைச் சட்டம் (Common Civil Code) அனைத்து நிலைகளிலும் உள்ள பெண்களுக்குப் பாரபட்சமற்ற உரிமைகள் பெற வழிவகுக்கும் என வலியுறுத்துகிறார் ராமசந்திரா குஹா (Parliament and Patriarchy, Ramachandra Guna, The Hindu, December 31, 2012). ஷரியாவைக் குறிப்பிட்டுப் பலதார மணத்தை உரிமை கோரிய வழக்கொன்றில் தில்லி உயர் நீதிமன்றம் அளித்த முற்போக்கான விளக்கங்களை Islamic Forum for the Promotion of Moderate Thought என்ற அமைப்பின் பொதுச்செயலாளரான பேசூர் ரஹ்மான் வரவேற்கிறார் (The Hindu, January 11, 2013).
கௌரவக் கொலைகளை இன்றைய நவீன காலச் சட்டங்களைக் கொண்டு எதிர்கொள்வதைப் போல அனைத்து மதங்களிலும் நீடித்துவரும் மத்தியகால மதீப்பீடுகளையும் பழமையான மரபுகளையும் நவீனயுக அறவியலின் அடிப்படையில் மறுவரையறை செய்வதின் மூலமாகவே பெண்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்த முடியும்.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், பகுத்தறிவு, ஜனநாயகம் என முழங்கும் நவீன யுகம் இவற்றின் அடிப்படையில் நவீன அறவியலையும் கட்டமைக்கிறது. நவீன யுகத்தில் சமூகப் பொருளாதாரத்தின் மையவியக்கமாக ஆதிக்கம் செலுத்திவரும் நவீன முதலீட்டியமானது, நவீன அறவியலை உருமாற்றுவதாக, முன்நவீன முடியாட்சி அதிகாரங்களுடன் மதநிறுவனங்கள் கொண்டிருந்த அதிகாரத்துவ உறவுகளை முறித்துத் தனக்கான ஜனநாயக அமைப்புகளாக மீட்டெடுத்ததுடன் தனது மேலாதிக்கத்தைச் செயல்படுத்தக்கூடிய சமூகத் தன்னிலைகள், பாலியல்பு, அறிவியல், உடைமை உறவுகள், உற்பத்தி முறைமைகள் ஆகியவற்றைக் கட்டமைப்பதாகவும் இருக்கிறது. இவற்றின் விளைவாக, மிகவும் நவீனமடைந்ததாகவும் வளர்ச்சியடைந்ததாகவும் சொல்லப்படும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஏகாதிபத்தியங்களாகவும் சமூகக் குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் நீடிக்கும் சமூகங்களாகவும் இருக்கின்றன.
இந்தியாவில், தேசியக் குற்றங்கள் பதிவு ஆணையத்தின் (NCRB) புள்ளியியலின்படி 1995க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்தத் தொடங்கிய வருடங்களில், வன்புணர்ச்சிக் கொடுமைகள் 50 சதவீதமும் கடத்தல் சம்பவங்கள் 100 சதவீதமும் வரதட்சணைக் கொலைகள் 50 சதவீதமும் குடும்ப வன்கொடுமைகள் மூன்று மடங்காகவும் பாலியல் இழிவுபடுத்தல் இருமடங்காகவும் அதிகரித்தன. எல்லாத் துறைகளிலும் முன்னேறிவரும் இந்தியப் பெண்கள் பொதுவெளிகளில் பங்கேற்பது அதிகரித்துவருகிறது. இச்சூழலில் பெண்களுக்கான பாதுகாப்பற்ற நிலை அதிகரித்துவருவது ஆட்சியாளர்கள் முழங்கிவரும் பொருளாதார வளர்ச்சியின் GDP வளர்ச்சியின் தோல்வியையே காட்டுகிறது.நாட்டின் முழுமையான வளர்ச்சிக்குப் பாலினச் சமத்துவம் அடிப்படையாக அமைய வேண்டுமென வலியுறுத்துகிறார் அமர்தியா சென். ஆனால் சமீபத்திய தரவுகளின்படி ஆண்களில் 82 சதவீதத்தினரும் பெண்களில் 65 சதவீதத்தினரும் எழுத்தறிவு பெற்றுள்ளார்கள். அமைப்புசார்ந்த பணிகளில் 20 சதவீதமாகவும் பொதுத்துறை நிறுவனங்களில் 17 சதவீதமாகவும் மத்திய அரசுப் பணிகளில் 10 சதவீதமாகவும் பெண்களின் பங்கேற்பு குறைவாகவே உள்ளது. மொத்தமுள்ள 634 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 54 பேர் பெண்கள். 74 மத்திய அமைச்சர்களில் 8 பேர் பெண்கள். இவ் விதமாகப் பொருளாதாரத்திலும் அரசதிகாரத்திலும் பெண்களின் பங்கு குறைவாகவே உள்ளது. தனியார்மயமாகும் கல்வியும் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் புதிய தாராளமயமும் காலிப் பணியிடங்களை நிரப்பாத அரசின் கொள்கையும் பெண்களின் பங்கேற்பை மேலும் ஊக்குவிப்பனவாக இல்லை (Frontline, January 25, 2013).
இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் சுதந்திரமாகச் செயல்படவும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேறவும் ஆணாதிக்க உறுப்பினர்கள் உதவுவதில்லை.பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்துதல், அதிகமான காவலர்களைப் பணியமர்த்துதல் உள்ளிட்ட காவல் துறைச் சீர்திருத்தத்திற்கும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக மேலும் நீதிபதிகளை அமர்த்துவது, விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது உள்ளிட்ட நீதித்துறை மேம்பாட்டிற்கும் பேருந்துகளை அதிகமாக்குதல், சாலைகளை மேம்படுத்துதல், பொதுப்போக்குவரத்துச் சேவைகளை அதிகமாக்குதல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் தேவையான நிதியை, ஏற்கனவே பொதுநலச் செலவுகளைச் சிக்கனப்படுத்திவரும் புதிய தாராளமய அரசுகள் எவ்விதம் திரட்ட முடியும்? புதிய தாராளமயத்தில் பொதுத்துறைச் சேவைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளிலும் PPPஇன் அடிப்படையில் ஈடுபட்டுவரும் முதலீட்டிய நிறுவனங்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதைவிடவும் சேவைகளைத் திறம்பட அளிப்பதைவிடவும் இலாபமீட்டும் நோக்கத்திலேயே செயல்படுகின்றன.
புதிய தாராளமயத்தில் உச்சநிலை அடையும் முதலீட்டியம் எல்லாவற்றையும் வணிகமயமாக்குகிறது. உடைகள், சிகை அலங்காரம், அழகு சாதனங்கள் என அனைத்தையும் கார்ப்பொரேட்டுகளே தீர்மானிக்கின்றன. இவற்றுக்கான விளம்பரங்களும் ஃபேஷன் ஷோக்களும் அழகுப் போட்டிகளும் அழகு பற்றிய புனைவுகளை உருவாக்குகின்றன. சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் ஆகியோரை உலக அழகிகளாகக் கார்ப்பொரேட்டுகள் தேர்ந்தெடுத்ததும், இந்தியாவில் அழகுச் சாதனப் பொருட்ளின் விற்பனை வேகமாக அதிகரித்தது. அழகிப் போட்டிகள் சிறு நகரங்களுக்கும் கல்லூரிகளுக்கும் பரவிய உடை வடிவமைப்பு, உணவு கட்டுப்பாடு, நடையுடைபாவனைகள், அங்க அமைப்புகள் எனப் பெண்களின் மனநிலையில் Fashion/Beauty Complex எனும் உளவியல் சிக்கலை உருவாக்குகிறது. பெண்னை அழகுமயமாக்குதலின் மூலம் பெண் ஆளுமை அழகுக்குரியதாக மட்டும் வரையறுக்கப்படுகிறது.கார்ப்பொரேட்டுகளின் வர்த்தகத்திற்கான விளம்பரங்களும் கார்ப்பொரேட்டாக வளர்ந்துவிட்ட திரை உலகமும் சமூகத்தில் நிலவும் ஆண்மையப் பெண் பாலியல்பை முதலீட்டியத் தொழில்நுட்பங்களில் ஒன்றாகவே கையாளுகின்றன. பாலியல்பை மிகையாக்குதல், பாலுறுப்புகளுடன் உடலின் பிற உறுப்புகளையும் பால்மயமாக்குதல் ஆகியவற்றின் மூலம் பெண் உடல் பாலியல்புக்குரியதாக மட்டுமே கட்டமைக்கப்படுகிறது.
காலனிய ஆதிக்கத்தின்போது ஆட்சி நிர்வாக அமைப்புகளிலும் முதலீட்டிய நிறுவனங்களிலும் இந்தியச் சமூகத்தின் பங்கேற்பானது மத்திய கால ஆணாதிக்கச் சாதியப் படிநிலையின் சிதைவடையாத நகர்வாகவே தொடக்கத்தில் இருந்தது. பார்ப்பனரல்லாதாரின் சமூகநீதி, இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டோரின் தலித் எழுச்சி ஆகியவற்றின் அடிப்படையிலான அடையாள அரசியல்கள் இந்தியாவின் நவீனச் சமூகத்தில், குடும்ப, சமூக, பொருளாதார நிலைகளில் சமநிலைகளை ஏற்படுத்தவில்லை. மாறாக, சாதிகளுக்கிடையிலான பூர்ஷ்வா வர்த்தகத்தையே தோற்றுவித்துள்ளது. மேல்சாதியினரின் ஆண்களே பெரும் முதலாளிகளாக வளர்ச்சி அடைந்தனர். இன்றைய நிலையில் வங்கிகளில் குவிந்துள்ள வைப்புத் தொகையில் பெண்களுடையது நான்கில் ஒரு பங்காகவே உள்ளது. ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் எனக் குறைவாகத் தொழில்நுட்ப அறிவு தேவைப்படும் பணிகளிலேயே பெண்களின் பங்கேற்பு அதிகமாக உள்ளது.முதலீட்டியம் பெண்களின் முன்னேற்றத்திற்கும் உரிமைகளுக்கும் தடைகளை ஏற்படுத்துவதுடன் பெண்களை அழகுக்கான, பாலியல்புக்கான பொருளாகவும் இழிவுபடுத்துகிறது.
ஆணாதிக்கம், சாதிய மேலாதிக்கம், மத நிறுவனங்களின் ஒடுக்குமுறைகள், அரசதிகாரம், முதலீட்டியச் சுரண்டல் எனப் பன்முக மேலாதிக்கங்கள் செயல்படும் களமாகப் பெண் உடல் இருப்பதால், பெண்களின் அரசியலும் பன்முகமாக, பல்வேறு எதிர் அரசியல்களுடன் இணைவதாக உள்ளது.பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகத் தில்லிப் போராட்டங்களில் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், கலைஞர்கள், ஊழலுக்கு எதிரான குடிமைச் சமுகத்தினர் எனப் பலதரப்பினரும் பங்கேற்றனர். குடிமக்களின் அடிப்படையான உரிமைகளை, வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்துவதிலிருந்து விலகும் அரசுகளுக்கு எதிராகக் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, தன்னெழுச்சியான குடிமை அரசியலின் எழுச்சி புதிய தாராளமயத்தின் தவிர்க்க முடியாத விளைவாகும்.
பிற எதிர் அரசியல்களுடன் இணையக்கூடிய பெண்ணிய அரசியலானது மேலாதிக்க அமைப்புகளில் சமமாகப் பங்கேற்பதற்கான அடையாள அரசியலாக இல்லாமல் அம்மேலாதிக்கங்களுக்கு எதிர்த் திசையில் குடும்ப, சமூக, பொருளாதார, அரசியல் உறவுகள் யாவற்றையும் மாற்றியமைக்கக்கூடிய மாற்றுக் கலாச்சார அரசியலாகச் செயல்பட வேண்டியதாகிறது. ஒடுக்கப்பட்டோரில் மற்றொரு பிரிவினரான தாழ்த்தப்பட்டோரின் தலித் அரசியலுக்கும் இது பொருந்தும். ஆணாதிக்க மதிப்பீடுகளுக்கு மாற்றாகச் சமநிலைக்கான விழுமியங்களைக் கட்டமைத்தல், சமநிலையான குடும்ப உறவுகளாக மாற்றுதல், பொருளாதார அடிப்படையாக வாழ்வாதாரங்களில் சம உரிமைகள் என்பதான பாலினச் சமத்துவம் என்பது மாற்றுக் கலாச்சாரத்திற்கான முன்நிபந்தனை அரசியலாகும்.




   

http://www.kalachuvadu.com/issue-158/page27.asp

“ஆண்மை” அழிந்தால்தான் பெண்விடுதலை சாத்தியம் - ஆர். சந்திரா


 

ஆர். சந்திரா
periyar  எடுத்துக் காட்டாக, விபச்சாரி, மலடி, ஓடுகாலி, கணவனையிழந்த பெண்கள் என பெண்களுக்குப் பொருந்தக்கூடிய சொற்களுக்கு மாற்றாக ஆண்களை குறிக்க சொற்கள் இல்லை என்பதை நாம் காண்கிறோம். மொழி கூட இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும்.
ஈ.வெ.ரா. பெரியார் 1934ஆம் ஆண்டு ‘பெண் ஏன் அடிமையானாள்?  என்ற நூலை எழுதினார்.; கடந்த 76 ஆண்டுகளில், ஏராளமானவர்கள் இந்நூலை பலமுறை வாசித்திருப்பார்கள். ஆய்வுகளுக்காக பயன்படுத்தியுள்ளனர். ‘‘பெரியாரிய பெண்ணியம் பலகல்லூரிகளில் மகளிரியல் துறைகளில் பாடமாகவே வைக்கப் பட்டுள்ளது. 64 பக்கங்களைக் கொண்ட இந்த சிறிய நூலில் பெண்ணடிமைத்தனத்தின் வேர்களை அடையாளம் காட்டியுள்ளார். பெரியார் இந்நூலில் கூறியுள்ள கருத்துக்களை மீண்டும், மீண்டும் வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
அத்தியாயங்களைக் கொண்ட இந்த சிறிய நூலை ‘கற்பு’ பற்றிய விளக்கத்துடன் துவங்கி, பெண்ணடிமைத்தனத்திற்கான காரணங்களை அலசி, ஆராய்கிறார். ‘கற்பு’ என்பதன் அர்த்தம் சொல் தவறாமை என்று நோக்குகையில், அது இருபாலாருக்கும் பொதுவானதாகத்தானே இருக்க வேண்டும்? பாரதியாரும் இதையேதான் வலியுறுத்துகிறார். நடைமுறையில் கற்பு ஒரு தலைபட்சமாக பெண்ணுக்கு மட்டும் பொருந்தும் வண்ணம் பார்க்கப்படுகிறது. ஆனால், ஆரிய மொழியில் பார்க்கும் பொழுது ‘கற்பு’ என்ற சொல்லுக்கு அடிமை என்ற கருத்து நுழைக்கப்பட்டதாக அவர் கருதுகிறார். அதற்கான வரலாற்று சான்று உள்ளதா என்பதை அவர் குறிப்பிடவில்லை. அதுமட்டுமல்ல. ஆண்கள் கற்புடையவர்கள் என்பதைக் குறிக்க நமது மொழியில் வார்த்தை இல்லை என்கிறார். பெண் குறித்த வேறுசில சொற்களுக்கும் பெரியாரின் இந்த கருத்து பொருந்தும். எடுத்துக் காட்டாக, விபச்சாரி, மலடி, ஓடுகாலி, கணவனையிழந்த பெண்கள் என பெண்களுக்குப் பொருந்தக்கூடிய சொற்களுக்கு மாற்றாக ஆண்களை குறிக்க சொற்கள் இல்லை என்பதை நாம் காண்கிறோம். மொழி கூட இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும். பெண்ணடிமைத்தன கருத்துக்களை பெண்களும் உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்கிறார்.
‘கற்பு’ பற்றி பெரியார் எழுதியதற்கு மறுப்பு எழுதியவர்க்கு பதிலளிக்கும் விதத்தில், ‘வள்ளுவரும் கற்பும்’ என்ற அத்தியாயத்தை எழுதியுள்ளார். வள்ளுவரின் குறள்களில் பிற்போக்கான, பெண்ணடிமை கருத்துக்களை எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகிறார். இடையே அவ்வையாரின் கருத்துக்களையும் பெரியார் விமர்சிக்கிறார். பெண் ஆணைச் சார்ந்தவள், ஆணைவிட தாழ்ந்தவள் என்பதை அவ்வையாரின் பாடல்களிலும், வள்ளுவரின் குறள்களிலும் காணமுடிகிறது. காலம் காலமாக ஆணுக்கும், பெண்ணுக்குமென பிரத்யேகமான குணங்கள் உள்ளன என்ற கருத்து ஆழமாக வேறூன்றி உள்ளது. (ஆண்-கோபம், வீரம், ஆளும்திறன். பெண் – சாந்தம், அமைதி, பேசும் திறன்) இந்த குணங்கள் ‘‘இருபாலாருக்கும் சமமாகவே இருக்க இயற்கையில் இடமும் இருக்கிறது’’ என்றும் ‘‘ஆண்களின் சுயநலத்தால் மாறுபட்டு வருகிறது’’ என்றும், ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
periyar
‘காதல்’ பற்றிய அத்தியாயத்தில் காதல் புனிதமானது, தனித்தன்மை வாய்ந்தது என்றெல்லாம் கூறப்படுகிறது. காதலுக்கு அன்பு, ஆசை, நட்பு என்ற பொருளைத்தவிர வேறு… தனித்தன்மை இல்லையென்கிறார் பெரியார். ஒருவருக்கு ஒருமுறை காதல் ஏற்பட்டுவிட்டால், அது எந்தக் காலத்திலும் மாறாது என்பதைச் சொல்லி, பெண்கள் விரும்பாவிட்டாலும், கணவனுடன் வாழ நிர்பந்திக்கப்படுகிறாள்.. காதல் முதல் பார்வையில் தோன்றுமா? காதல் உயர்வானதா? காதலும் காமமும் வேறுவேறா? என பல வினாக்களை எழுப்புகிறார். இறுதியில், காதல், காமம் பற்றி பொறுப்பில்லாமல் பேசுவதால், இதைப்பற்றி தான் எழுதியுள்ளதாக கூறுகிறார். அன்பு, ஆசை, நட்பு என எதுவானாலும், அது மன இன்பத்திற்கும், திருப்திக்கும்தான் என்ற தனது கருத்தை அழுத்தமாக வெளிப் படுத்தியுள்ளார்.‘‘கல்யாண விடுதலை’’ என்ற அத்தியாயத்தில், திருமணம் பற்றி பெரியார் எழுதியுள்ள ஒவ்வொரு, வாக்கியமும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றால் மிகையாகாது. ‘‘பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வதைத் தவிர்’’ நமது திருமணங்களில் எதுவுமில்லை என்றும் இதில் நமது நாட்டில் உள்ளது போன்ற கொடுமை உலகில் வேறெங்கும் இல்லையென்றும் கூறுகிறார்.
சடங்குகளை சாடுகிறார். விருப்பம் இல்லாவிடில் மணமுறிவு செய்து கொள்ளும் உரிமை ஆண் பெண் இருவருக்கும் வேண்டும் என்பதுடன் மறுமணம் தவறல்ல’’ என்ற அத்தியாயத்தில், மனிதவாழ்வில், மதம் ஆற்றும் முக்கியப் பங்கை விளக்குகிறார். மறுமணம் பற்றி எந்த மதத்திலும் ஆட்சேபணை இல்லை என்று கூறுவதுடன், எந்தப் பின்னணியில் மறுமணம் செய்து கொள்ளலாம் என்ற காரணங்களையும் விளக்குகிறார். இந்துக் கடவுள்களையும் முகமது நபியையும் மேற்கோள் காட்டத் தவறவில்லை. 10-12 வயதில் செய்விக்கப்படும் திருமணங்கள் திருமணமாகுமா? என்ற வினாவை எழுப்புகின்றார். அன்பும், ஆசையும் இன்றி இரண்டு பேர் எப்படி இணைந்து வாழ்வது? எதற்காக அப்படி வாழ வேண்டும்? சுயமரியாதைக் கொள்கைப்படி மறுமணம் விவாகரத்து பற்றிய கருத்துக்களையும் எடுத்துரைக்கிறார். திருமணம், மறுமணம், விவாகரத்து ஆகியவற்றில் ஆண்களுக்குரிய அனைத்து சௌகரியங்கள் உரிமைகள் பெண்களுக்கும் உண்டு என்று வாதிடுகிறார்.
‘விபச்சாரம்’ பற்றிய அத்தியாயத்தில், அதன் பொருள் அடிமை என்றுதான் கொள்ள வேண்டும் என்கிறார். இதில் பெண்ணே குற்றவாளியாக பார்க்கப்படுகிறாள். திட்டும்பொழுது கூட விபச்சாரியின் மகன் என்ற வசைவுகள் சாதாரணம். ஆண் இன்றி பெண் விபச்சாரம் செய்வதில்லை. ஆனால் இந்த சொல் பழக்கத்தில் பெண்களை குறிக்கும் சொல்லாகவே உள்ளது. கற்பு என்பதைப் போலவே இதுவும் பெண்களை அடிமை கொள்ள பயன்படுத்தப்படுகிறது. எந்த தொழிலானாலும், மற்றவர்க்கு கெடுதி கொடுக்கும் தொழில் நடக்கக்கூடாது என்பதுடன், இதனால், ஒழுக்கம் கட்டுப்பாடு கூடாது என்று கூற வரவில்லையென்றும் தெளிவுபடுத்துகிறார்.
கணவனையிழந்த பெண்கள் இந்தியாவில் அனுபவிக்கும் கொடுமைகளைப் பெரியார் சாடுகையில், மதம் ஆற்றும் பங்கையும் சுட்டிக்காட்டுகிறார். வுpதவைகள் உடல், மனரீதியில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பெரியாரின் தங்கை மகள் அம்மாயி சிறுவயதில் கணவனையிழந்துவிட்டாள். தனது குடும்பத்திற்குள்ளேயே பலரின் கடுமையான எதிர்ப்பையும் சந்தித்து, அந்த இளம் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்தார். இச்சமுதாயம், மனைவி இழந்த உடனேயே ஆணுக்கு மறுமணம் செய்வதை ஆதரிக்கிறது. ஆனால், ஒரு பெண் 10-12 வயதில் கணவனையிழந்தால் காலம் முழுவதும் கொடூரமான வாழ்க்கையை வாழ நேரிடுகிறது. பெண் விடுதலை பற்றி பேசுவோர் கூட, தங்கள் வீட்டுப் பெண்களை சிறையிலிட்டு கணவனையிழந்த தன்மையை காப்பாற்றுகின்றனர் என கடுமையாக சாடுகிறார். தவிர 1912ம் ஆண்டு கணக்கின்படி, வயதுவாரியாக
கணவனையிழந்த பெண்கள் எண்ணிக்கையை பெரியார் பட்டியலிட்டுள்ளார். மேலும், கணவனையிழந்த பெண்களின்  மறுமணத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறார்.
இந்தியாவில் பெண்ணடிமைத்தனத்திற்கும், பெண்ணின் தாழ்வான அந்தஸ்திற்கும், சொத்துரிமை இல்லாதது ஒரு முக்கிய காரணம் என்கிறார். சில மேலை நாடுகளை மேற்கோள் காண்பித்து, சொத்துரிமை கோரி பெண்கள் போராடுவது அவசியம், அவசரம் என்று கூறுகிறார்.
ஒன்பதாவது அத்தியாயத்தில் பெண் விடுதலைக்கு கர்ப்பத்தடை மிகவும் அவசியம். கர்ப்பம் பெண் விடுதலைக்கு பெரிய எதிரி என்கிறார். கர்ப்பத்தடைக்கான பிரச்சாரத்தை தமிழக சட்டசபைக்குள் சுகாதார மந்திரியே எதிர்த்தார். டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் மந்திரியை ஆதரித்தது ஏமாற்றமளித்தது என்று குறிப்பிடுகிறார். மதுவிலக்கு பிரச்சாரத்தைவிட தொத்து வியாதி ஒழிப்பு பிரச்சாரத்தைவிட கர்ப்பத்தடையை ஆதரித்து பிரச்சாரம் செய்வது மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார்.
ஆண்மை’ அழிந்தால்தான் பெண் விடுதலை சாத்தியம் என இறுதி அத்தியாயத்தில் வலியுறுத்துகிறார்.; ஆண்கள்  பெண் விடுதலைக்கு பாடுபடுவதென்பது சூழ்ச்சி என்று கூறி, பூனைகளால் எலிகளுக்கும், நரிகளால், ஆடு, கோழிகளுக்கும் விடுதலை கிட்டுமா என்று வினவுகிறார். இது முரண்பாடான கருத்து. தமிழகத்தில் பெண் விடுதலைக்கு குரல் கொடுத்த ஆண்கள் பட்டியலில் பெரியாரும். பாரதியாரும் மிகவும் முக்கியமானவர்கள் என்பதை மறுக்க இயலுமா? பெண்களே பெண்விடுதலைக்குத் தடையாக உள்ளனர் என்கிறார். பிறந்தது முதலே பெண்கள் பெண்ணடிமைக் கருத்துக்களை கேட்டு, உள்வாங்கி, வளர்கின்றனர். அதை வலியுறுத்தும் வகையில் மதம், மூட நம்பிக்கைகள் பெண்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெண்ணடிமை பெண்களை மட்டுமின்றி ஆண்களையும் பாதிக்கிறதென ஆண்கள் உணர்வதில்லை என்கிறார் பெரியார்.
எளிமையான நடை, பேசுவது போன்றே எழுதும் போதும் சொற்களை கையாளும் விதம், ‘நச்’ சென அழுத்தமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்துதல் பெரியார் எழுத்தின் சிறப்பம்சங்கள் அவரை வெறும் முற்போக்கு சிந்தனையாளர் என்று மட்டும் கூறினால் போதாது. பெண்ணடிமைத்தனம் வேறூன்றியுள்ள சமுதாயத்தில், பழமையில் ஊறிய சமுதாயத்தில், தைரியமாக தனது கருத்துக்களை கூறியவர். இன்றும் கருச்சிதைவு, கர்ப்பத்தடை போன்ற விஷயங்களை பேசத்தயக்கம் உள்ளது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில், ஆண்-பெண் சமத்துவம் பற்றி பேசுவதுடன், செயல்படுத்தும் துணிச்சல் பெரியாரிடம் இருந்தது.

http://www.oodaru.com/?p=3497

Sunday, November 8, 2015

பெண்ணியம் என்றால்... தோழர் கொற்றவை நேர்காணல்

Nirmala Kotravai kotravaiwrites@gmail.com
பெண்கள் ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் காலடி எடுத்து அசத்தி வந்தாலும் ஆங்காங்கே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், உரிமை மீறல்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆண்களுக்கு இணையான சமத்துவம் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது பெண்ணிய முற்போக்கு சிந்தனையாளர்  களின் குரலாக இருக்கிறது. அவர்கள் பெண்களுக்கான தங்கள் கருத்துக்களை எழுத்திலும், பேச்சிலும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்   களில் ஒருவர், நிர்மலா கொற்றவை. 

பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷன் படித்திருக்கும் இவர், ‘மாசஸ்’ எனும் அமைப்பை ஏற்படுத்தி பெண் உரிமைக்காக குரல் கொடுத்து வருகிறார். 

‘‘சினிமா, விளம்பரங்களில் பெண்கள் ஆட்சேபகரமாக சித்தரிக்கப்பட்டால் அதனை எதிர்த்து எங்கள் அமைப்பின் மூலம் குரல் கொடுத்து வருகிறோம். இணைய தளங்கள் மூலமும் விழிப்புணர்வு போராட்டங்களையும் அரங்கேற்றி வருகிறோம்’’ என்று கூறும் அவருடன் நமது கலந்துரையாடல்! 

பெண்ணியம் என்றால் என்ன?

‘‘பெண் என்ற காரணத்திற்காகவே அவளுக்கென்று சமூகம் சில விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறது. அதன்படிதான் நடக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. அது பெண்மைக்கும், பெண்களின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. பெண்களின் உண்மை நிலை, தேவைகள், உரிமைகள் பற்றி மக்களிடம் எடுத்துவைக்கும் சிந்தனைதான் பெண்ணியம்’’

நீங்கள் பெண்ணிய சிந்தனையாளராக உருவாக என்ன காரணம்?

‘‘நான் வாழ்க்கையை நன்றாக புரிந்துகொண்ட பின்பு, 35 வயதில் இருந்துதான் இந்த செயல்பாட்டில் இறங்கியிருக்கிறேன். எவ்வளவு திறமைகள் இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு பல பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்படும் நிலைதான் இருக்கிறது. உறவுகள் இருந்தாலும் புகுந்த வீட்டினர் அவளை ஒரு தனித்தீவுபோல் ஆக்கிவிடுகிறார்கள். வெளியே வேலைக்கு சென்றாலும், வீட்டிலும் உழைக்கும் இரட்டை உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கிறது. வீட்டில் இருப்பவர்கள் அத்தனை பேரையும் திருப்திபடுத்தும் பொறுப்பு அவளுக்கு வந்துவிடுகிறது. ஆடை அணிவதிலும் அவளுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன.

ஒரு பெண் எந்த தவறு செய்தாலும், அவள் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் அவளுடைய ஒழுக்கம் சார்ந்ததாக இருக்கிறது. ஆனால் ஆண் தவறு செய்தால், ‘அவன் பொறுப்பில்லாமல் இருக்கிறான். கல்யாணத்திற்கு பிறகு சரியாகிவிடுவான்’ என்கிறார்கள். பொறுப்பில்லாதவர் என்று முத்திரைகுத்தப்  படும் ஆணையும், பெண் திருமணம் செய்துகொண்டு சுமந்து, திருத்தவேண்டியதிருக்கிறது. அவள் குழந்தையை பெற்றெடுத்தபிறகு வேலையை விடவேண்டியதாகிவிடுகிறது. ஆணுக்கும் குழந்தை வளர்ப்பில் பங்கு இருப்பதை சமூகம் புரிந்து கொள்ள மறுக்கிறது. பெண் மட்டும் ஏன் இத்தகைய நிர்பந்தத்திற்கு ஆளாக வேண்டும்? என்று எனக்குள் எழுந்த கேள்வியே பெண்ணியத்தை பற்றி என்னை பேசவும், எழுதவும் தூண்டியது’’    

பெண், ஆணை சார்ந்திருக்கும் நிலையை எப்படி மாற்றப்போகிறீர்கள்?

‘‘பெண் என்பவள் ஆணுக்கு சேவை செய்ய பிறந்தவள் என்று காலம் காலமாக நம்ப வைத்து வளர்த்து வந்திருக்கிறார்கள். ஆணை சார்ந்தே அவளுடைய வாழ்க்கை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அதேவேளையில் பெண்கள் கேட்கும் உரிமைகள் நியாயமானது என்பதை ஆண்களும், ஒட்டுமொத்த சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும். பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். பொருளாதார, அரசியல், சமூக விழிப்புணர்வு பெற வேண்டும். ஒருவர் மற்றொருவரை சார்ந்திருப்பது அன்பினால் மட்டுமே நிகழ வேண்டும். அதிகாரத்தால் அந்த உறவு பிணைக்கப்பட்டிருக்கக்கூடாது. இதை பெண்கள் புரிந்துகொள்ளத்தொடங்கிவிட்டார்கள். அதனால் பெண்கள், ஆண்களை சார்ந்திருக்கும் நிலை மாறிக்கொண்டிருக்கிறது. இனியும் நிறைய மாற வேண்டும்’’

பெண்கள் முன்னேற்றத்திற்கு பெண்களே தடையாக இருக்கிறார்கள் என்று கூறப்படுவது பற்றி..?

‘‘பெண்ணுரிமை பற்றி பேசினால் பெண்களை தூண்டி விடுவதாக                     குற்றம்சாட்டுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மேலும் பெண் 
உரிமைக்காக குரல் கொடுக்கும் பெண்கள் ஒழுக்க ரீதியாக விமர்ச்சிக்கப்படும் நிலையையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. பெண்  விடுதலைக்கு குரல் கொடுக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். அதனால் சமூகம்தான் தடையாக இருக்கிறது. ஆணாதிக்கம் என்று கூறுவதைவிட சமூக அமைப்பு சார்ந்த பிரச்சினையாகவே இதை கருதவேண்டும். பெண் முன்னேற்றத்திற்கு பெண்ணே தடை என்று கூறுபவர்கள்தான் பெண்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பார்கள்’’ 

பெண்ணியம் பற்றிய பேச்சு எப்போது முடிவுக்கு வரும் என்று நினைக்கிறீர்கள்?

‘‘குழந்தையை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு கணவனுக்கும் இருக்கிறது. அந்த பொறுப்பை ஆண்கள் தட்டிக்கழிக்கக்கூடாது. பெண்கள் சம்பாதிப்பவர்களாக இருந்தாலும் அந்த பணத்தை தன் விருப்பப்படி செலவு செய்யும் உரிமை அவளுக்கு இல்லை. தன்னுடைய படிப்பு, எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் உரிமையும் முழுமையாக அவளுக்கு கிடைப்பதில்லை. பெண் என்பதாலேயே பிரித்து பார்க்கும் நிலை மாறும்போது பெண்ணியம் பற்றி நிறைய பேசவேண்டியதும், எழுதவேண்டியதும் இருக்காது’’

இளைய தலைமுறையினரிடம் பெண்ணிய சிந்தனைகள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது? 

‘‘இன்றைய படித்த பெண்கள் அரசியல், சமூக விழிப்புணர்வு பெற்றவர்களாக இருக்கிறார்கள். நான் சில இடங்களில் பெண்ணியம் பற்றி பேச சென்றபோது, ‘பெண்களுக்கு இப்போது என்ன பிரச்சினை இருக்கிறது. அவர்கள் படிக்            கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு என்ன குறை?’ என்று சிலர் கேட்கிறார்கள். பெண்களுக்கான சம உரிமை, பாதுகாப்பு பற்றி அவர்கள் யோசிப்ப தில்லை. தனியாக ஒரு பெண் சென்றால் ஒருவித பய உணர்வுடன்தான்         பயணிக்க வேண்டியதிருக்கிறது. எந்தவித அச்சமுமின்றி சுதந்திரமாக செல்லும் நிலை வர வேண்டும். இதைதான் நாங்கள் கேட்கிறோம். இளைய தலைமுறை பெண்கள், பெண்ணியத்தை கண்ணியத்தோடு வரவேற்கிறார்கள்’’ 

பெண்ணியவாதிகள் நிறைய உருவாக என்ன காரணம்?

‘‘முற்போக்கு சிந்தனையும், அரசியல், சமூக விழிப்புணர்வும் பெற்றவர்கள், நல்ல மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், பாதிக்கப்பட்டு போராட்ட களத்தில் இறங்குபவர்கள் பெண்ணியவாதிகளாக உருவாகுகிறார்கள். பெண்ணியவாதிகள் உருவாகிக்கொண்டே இருக்கவேண்டும்’’ 

பெண்ணிய கருத்துக்களிலும் அதி தீவிரம் காட்டுகிறவர்கள் இருக்               கிறார்களே?

‘‘நமக்கு தேவை சமூக மாற்றம்தான். அதை மிதமாக, மக்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் வழங்குவதே சரியானது. தீவிர கருத்துகொண்டவர்கள் ஆண்களை வெறுத்துப்பேசும் நிலையை அடைந்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையை நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஆண்கள் இல்லாமல் சமூகம் இல்லை. மிதவாதியாக இருந்து அவர்களிடம் கருத்துக்களை எடுத்துவைத்தால் போதும். நல்ல மாற்றங்கள் ஏற்படும்’’

பெண்ணியவாதிகளின் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்? ஆண்கள் அவர்களை திருமணம் செய்துகொள்ள தயங்குவார்களா?


‘‘முற்போக்கு சிந்தனையுடைய கணவனும், மனைவியும் வாழ்க்கையில் இணையும்போது பிரச்சினை ஏற்பட்டால் பேசி தீர்த்துகொள்வார்கள். ஆண்களும் அதே சிந்தனையுடன் இருந்தால் இணைந்து போராடுவார்கள். இருவருக்குமிடையே புரிதல் இல்லாதபோது பிரியும் சூழ்நிலை உருவாகிவிடும். பெண்கள் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை பெற்றோரிடம் தான் இருக்கிறது. திருமணம் என்பது அந்தஸ்து பார்க்கும் விஷயமாக மாறிக்கொண்டிருக்கிறது. அது இனிமையாக அமைகின்ற உறவாக இருக்க வேண்டும். இன்னொரு விஷயம் பெண்ணியவாதிகள் குடும்ப வாழ்க்கைக்கு எதிரானவர்கள் அல்ல. பெண்ணியவாதிகளின் மணவாழ்க்கையும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. உரிமையுள்ள மனைவியாக அவர்கள் குடும்ப வாழ்க்கை நடத்திவருகிறார்கள்’’

பெண்ணியவாதிகளால் சமூகத்திற்கு கிடைத்திருக்கும் பலன்கள்? 

‘‘பெண்ணியவாதிகள் நடத்திய பல போராட்டங்களால்தான் பெண்களுக்கு பாதுகாப்பும், பல்வேறு உரிமைகளும் கிடைத்திருக்கின்றன. பல சலுகைகள் கிடைக்கப்பெற்றிருக்கிறது. பெண்களை விழிப்புணர்வுமிக்கவர்களாக உருவாக்கியிருப்பதில் பெண்ணியவாதிகள் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள்’’ என்று கூறும்  நிர்மலா கொற்றவை கல்லூரிகள், சமூக அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து உரையாற்றி வருகிறார். விருதும் பெற்றுள்ளார். 40 வயதான இவர் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். புத்தகங்கள் மொழி பெயர்த்துள்ளார். இவருடைய கணவர் வசுபாரதி. மகள் வருணா. சென்னை அடையாறில் வசித்து வருகிறார்கள்.

இணையப் பிரதி http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/11/01122936/Feminism-Polite.vpf

Sunday, October 25, 2015

தாலி கட்டாம வெளில போனா

mukawUl:
Varshini Mehta Devaki
 ·
குடும்பப் பெண் , குங்குமம் வைக்கலைனா, தாலி கட்டாம வெளில போனா கேடுகெட்டவ, விபச்சாரி! - சமுகம்
அப்ப ஆண்களுக்கும் அதே தானே?

பெண்களுக்கு புத்தக படிப்பு மட்டும் போதாது

பெண்களுக்கு புத்தக படிப்பு மட்டும் போதாது உலக அறிவும் தேவை...
- தோழி.அருந்ததிராய்

கௌரவப்பசி

முகநூல்:
தோழி சுலேகா 
·
காசு பணத்துக்கு மட்டுமல்ல
கௌரவத்திற்கு நட்டம் என்றும்
கள்ளிப்பால் ஊற்றி
நடக்கின்றன கொலைகள்.
சொந்த சமூகத்தின் கௌரவப்பசிக்கு
தோள்சுமந்த பிள்ளையை
அறுத்துப் போடும் கசாப்புக்காரனுக்குப் பெயர்
‘மானஸ்தன்’.
‘காலில்’ விழுவதை
கௌரவமாய் ஏற்கும் சாதி
‘காதலில்’ விழுவதை
சமூகக் குற்றமாக்கி
உறவையே கொளுத்துவதற்குப் பெயர்
‘வீரம்’.
“தேசத்தின் கௌரவம்” காக்க
காதலர் தினத்து இளைஞர்களை
கைப்பிதுங்க
தாலியோடு துரத்தும்
காவிப்புழுக்கள்
கௌரவக் கொலையாளிகளின்
மீசைக் குகைக்குள்
பதுங்கிக் கொள்கின்றன.
சேரியை எரிக்கவும்
காதலைப் பிரிக்கவும்
செயல் ஊக்கத்தையே
சாதிக்கணக்கெடுப்புகள்
கூடுதலாய்த் தந்துள்ளன.
பள்ளிப் பதிவேட்டிலிருந்து
சாதியை நீக்கினால்
ஒழியுமா இந்தக்கொலைகள் ?
பிறப்பிலும் இறப்பிலும்
பேசும் மொழியிலும்
சாதியை தீண்டாமையை
நஞ்சாய்க்கலந்திட்ட பார்ப்பனியத்தை
சரித்திரத்திலிந்தே நீக்கவேண்டும்
சட்டம் செய்து அல்ல
யுத்தம் செய்து!...

பெண்களைப் புகழ்ந்து பேசிப் பேசியே

முகநூல்:
 தோழி சுலேகா 
பெண்களைப் புகழ்ந்து பேசிப் பேசியே
உண்மையில் பெண்களை பேச விடாத தந்திரக்கார சமூகமிது.
பூமியை “பூமாதேவி’ என்று
புகழ்ந்து பாடியது மதம்.
எதற்கு?
காலந்தோறும் அவளை
காலில்போட்டு மிதிப்பதற்கு.

“வம்சவிளக்கு’ என்று
பெண்ணை வருடிக்கொடுக்கும் சாதி.
எதற்கு?
கடைசிவரைக்கும் அவளை
கொளுத்தி, கொளுத்தியே கருக்கிப் போடுதற்கு.
ஆணின் ஒடுக்குமுறையோ நுட்பமானது
’’நீ பேசினால் என்னையே மறந்து விடுகிறேன்’’
-இது காதலிக்கும் போது.
’’இனி பேசினால் கொன்னே போடுவேன்’’
-இது கல்யாணத்திற்குப் பின்.
ஒரே அடியாகக் கொல்லக்கூடாது!
பெண்களும் பேசலாம்தான்,
பிடித்தமான தொலைக்காட்சி தொடர்கள் பற்றி..
’மானாட, மயிலாடா’ வில்
ஊனாடும் உருவம் பற்றி. . .
ஆலுக்காஸ் கடையின்
நகைகள் பற்றியும் ஏழுமாடி சரவணா ஸ்டோரின்
வகைகள் பற்றியும்…
அடுத்துவீட்டுப் பெண்ணிடம்
அசந்துபோய் பேசலாம்தான்…
இரண்டு வட்டிக்கு வங்கியில் வாங்கி ஐந்து வட்டிக்கு விடும்
மகளிர் சுய உதவிக்குழுவின்
மகிமைப் பற்றியும் பேசலாம்…
ஏன்?
போட்டு வந்த வளையலை வாங்கி
தங்கைத் திருமணத்திற்கு அடகு வைத்ததை மீட்டுத் தரத் துப்பில்லை என்று
கணவனிடம் கூட கலகம் செய்யலாம்.
மற்றபடி
கலைஞர் போடும் ஒரு ரூபா அரிசியைப் பாரு
உன் முகரையைப் போல,
அடுப்புக்கு நெருப்புமில்ல – சத்தாய்
ஆக்கித் திங்க பருப்புமில்ல
என்ன நாடு இது? ஆட்சி இது?
இதை எதிர்த்துக் கேட்கத் துப்பில்லாத
என்ன ஆம்பிள்ளை நீ?
என்று பெண் பேச ஆரம்பித்தால்
ஏற்குமோ இல்லற தர்மம்!
’’ஆம்படையான் எக்கட்சிக்கு ஓட்டோ
அடியேனும் அக்கட்சிக்கே ஓட்டு’’ எனப் பெண்களைப் பெரும்பாலும் பழக்கியுள்ள ஆம்பிளை சிங்கங்களுக்கு
பிடித்தமானது பெண்களின் அடுப்படிச் சுதந்திரமே
அரசியல் சுதந்திரமல்ல..

வரலாறு படைத்த பெண்குலத்தை வரவேற்று மதித்ததா எந்த மதமும்?

 முகநூல்:
தோழி சுலேகா ·
வரலாறு படைத்த பெண்குலத்தை
வரவேற்று மதித்ததா எந்த மதமும்?
இந்துமதம் என்பதைவிட – இத கெட்ட வார்த்தையில் கூறினால் கூட மிகையில்லை,
ஜெயேந்திரன் முதல் நித்யானந்தா வரை இதை நிரூபிக்கிறான் பொய்யில்லை.
’’பெண்-
குழந்தையில் தந்தைக்கும்,
இளமையில் கணவனுக்கும்,
முதுமையில் மகனுக்கும் கட்டுப்பட்டவள்’’
என்று பிறப்பிலேயே பெண்ணை
ஆணுக்கடிமையாய் ஆக்கியது இந்துமதம்.
’’பெண் பயங்கரமானவள்,
வஞ்சகமானவள், கேடானவள்,
நம்பத்தகாதவள்
போகத்துக்காக மாத்திரமே
பெண்களுடன் உறவு வேண்டும்’’
இவையெல்லாம் ’’அனுசாசன பர்வத்தில்’’
பெண்களைப் பற்றி
’’மகாபாரதம்’’ கொட்டிய குப்பைகள்,
இந்த மகா.. பாவத்தை
பெண்கள் சுமக்கலாமா?
குப்பை இராமாயணத்தையும் சேர்த்தல்லவா
நீ கொளுத்த வேண்டும் பெண்ணே!
கிறித்தவமும்
ஆணின் விலா எலும்பிலிருந்தே
பெண் வந்ததாய்
அடக்கி வைக்கவே
அவிழ்த்து விட்டது கதையை..
பெண்கள் பாவம் செய்ய
தூண்டுபவர்கள் என்றும்,
ஆண்களுக்கு
அலங்கார மாக்கப்பட்டவர்கள் என்றும்
பர்தாவை போட்டு ஆணாதிக்கத்தை
பாதுகாக்கிறது இஸ்லாமும்.
ஒரு தாய் வயிற்றில் பிறந்தும்
தன் புலனடைக்க முடியாமல்
பக்தி முக்தி பரத்தமையில் வழிந்த
அருணகிரிநாதனோ
தொழுநோய் வந்து தெருநாய் துரத்தியபோது
’’விடமொத்த விழியினர்’’
என பெண்களைப் போய்ப் பிராண்டினான்.
’’பெண் எனும் மாயப் பிசாசே’’
எனச் சித்தர்கள் சிலரும் எத்தர்களாயினர்.
பொதுவாகச் சொன்னால்
பொம்பளை விசயத்தில்
எல்லா மதமும் வீக்’’

ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதில் பெருமை என்ன?

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்
என்பதில் பெருமை என்ன?
ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னே பெரும்பாலும் ஆணிருக்காத மர்மமென்ன?
ஆணே ஒரு அடிமை ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி விடுதலை தர முடியும்?
ஆணுக்கும் உரைக்கும்படி
ஆர்த்தெழுந்து போராடு!
பெண்ணின் பேரழகு
அவள் விடுதலை உணர்வு என்பதை
ஆணுக்குப் புரிய வை!
போராடும் வர்க்கத்தோடு
சேராமல் பெண்ணுக்கு மகிழ்வேது!
தடுப்பவன் தந்தையாய், கணவனாய், தம்பியாய், மகனாய்,
எந்த வடிவில் வந்தாலும் எதிர்த்து நில்!
வர்க்க உறவே வாழ்க்கைத் துணையென
தெளிந்து கொள்!
இல்லறம் காக்கவே பெண் என்பது
முதலாளித்துவச் சுரண்டலின் தந்திரம் இணைந்து மக்களோடு போராடு! பெண்ணே...
போதும் உங்கள் பிரச்சாரம்!
புரட்சிக்கெல்லாம் பொம்பளை வரமாட்டாங்க என்று கதவைச்சாத்தும் நண்பா,
ஏன் நீ வாயேன்!
உனது மொழியிலேயே உரிமையுடன் கேட்கிறேன்..
’’நீ தைரியமுள்ள மீச வச்ச, வைக்காத ஆம்பிளையா இருந்தா
பொம்பளையை வெளியே அனுப்பு!..

" பெண் விடுதலையே சமூக விடுதலை "

மதங்கள், மூடநம்பிக்கைகள், சனாதனக் கோட்பாடுகள் மற்றும் இலக்கியங்கள் வாயிலாக பெண்களைப் பற்றி ஆண்கள் உருவாக்கிய போலியான கட்டுக்கதைகளின் முறைகள் வழக்கத்தில் உள்ள வரை இங்கு எந்த விடுதலைக்கும் சாத்தியமில்லை...
" பெண் விடுதலையே சமூக விடுதலை "