Sunday, April 26, 2009

பூப்பு நீராட்டு - - - புதிய மாதவி (மும்பை)

புதிய உலகத்தில்
பெரியமனுசியாய்
கடமைகளுடன்
கால்தடம் பதிக்கிறாய்.
வா.
பெருமையுடனும்
மரியாதையுடனும்
வலிமை பொங்க
நடந்து வா.
இன்று முதல்
நீ -
நம் மக்களின் தாய்.
நம் தேசத்தின் தாய்.

பெண்ணின் பூப்படைதலைப் பெருமையுடன் பாடும் அப்பச்சி (Apache) இனக்குழு மக்களின் பாடல் இது.



பெண் பூப்படைதல் என்பது பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையில் கொண்டாட்டத்திற்குரிய சடங்காகவே இருந்து வந்துள்ளது. பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தாகதது என்று எதிர்மறையாகநோக்கப்படவில்லை. பூப்பு என்ற சொல் தொடர்ச்சியாக வண்டு நுகர்தல், பிஞ்சு, காய், கனி, என்ற பிம்பங்களை மட்டுமே உருவாக்கிஅதன் வழி இனவிருத்திக்கு காரணமான நேர்மறைச் செயலாகவே கருதப்பட்டது. ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கமும் வைதீகமும் ஆண் சமுதாயமும் கலந்து பெண்ணை அடிமைப்படுத்த முனைந்த காலத்தில் தான் பூப்பு என்ற செயல் "தீட்டாகிப்" போனது.
மனித வரலாற்றில் இனவிருத்தியின் நிலமாக இருந்தப் பெண்ணின் ஆளுமையைக் கண்டு வியந்து அச்சம் கொண்டு அவள் தலைமையை ஏற்றுக்கொண்ட இனக்குழு வாழ்க்கையில் பெண் தெய்வ வழிபாடே
இருந்தது என்பதும் இன்றும் சிவப்பு நிறமும் நெற்றியில் இடப்படும் குங்குமச் சிவப்பும் ரத்தப் பலியிடலும் ஆகிய சடங்குகளின் காரணத்தை ஆராயப் புகுந்தால் பூப்பு என்ற சடங்கின் வேர்களை அடையாளம் காண
முடியும். நிலமும் நிலம் சார்ந்த மருதமும் இனக்குழு வாழ்க்கையில் எற்படுத்திய மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது பெண் -இல்லாள் என்றும் மனைமாட்சி என்றும் மாற்றம் பெற்ற காலம். பூப்பு பெண்ணின் ஆளுமையாக இருந்தது மறைந்து இனவிருத்திக்கான அடையாளமாக மட்டுமே சுருங்கிய காலம்.


ஆண் -பூப்படைதல் சடங்கு...



ஆணுக்கான சடங்குகள் அனைத்தும் போர், வேளாண்மை, அரசாட்சி என்று சமூக ஆள்வினைக்கான சடங்குகளாகவும் பெண்ணுக்கான சடங்குகள் அனைத்தும் பாலியல் உடல் சார்ந்தும் அவ்வுடல் பாலுறவு, மகப்பேறு என்று இனவிருத்தி சார்ந்தும் அமைந்ததாக காணப்படுகின்றன.
அருந்தா இனக்குழு வாழ்க்கையில் ஆண் பூப்படைத்தல் சடங்கு கொண்டாடப்பட்டதைக் காணலாம். அதுவரை ஆடையின்றி அலைந்த ஆண்மகன் வயதுக்கு வந்துவிட்டான் என்பதை அறிவிக்கவும் கொண்டாடவும் அவன் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் சடங்கு இது. அக்குழுவின் வயதான முதியவர் இச்சடங்கை நிகழ்த்துவார்.
தன் தலையால் ஆண்மகனின் தலையை மோதி ரத்தம் சிந்த வைப்பார். எறும்பு கடிக்கும் குழிக்குள் அவனை தள்ளி உணவின்றி சில நாட்கள் வைப்பார்கள். வீரமும் வலி பொறுத்தலும் போர் வாழ்க்கையில் ஆணுக்கான அம்சங்களாக இருப்பதால் இச்சடங்கை ஆணின் "மறுபிறப்பு" என்று சொல்கிறார்கள். ஆண் பூப்படைதல் சடங்கை "பிணை அறுத்தல்" - க்யா மோட்டு டி செலி (kia motu te sele - to snap the tie)என்றும்
பெண் பூப்படைதல் சடங்கை "பாவாடை அணிதல்" ( hakatiti - titi skirt) என்றும் மேற்கத்திய நாடுகளின் இனக்குழு மக்களின் சடங்குகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.



பல்வேறு நாடுகளில் பூப்பு சடங்குகள்...



பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்துவிட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று சொல்வர். பெண்ணுக்கு முதலாவதாக நேரும் இந்தப் பூப்படைதல் நிகழ்ந்த பிறகே அவளுக்குப் பாலியல் சுகம் உண்டாகிறது என்பதில்லை. தனி நபரின் உடல் வளர்ச்சியைப் பொறுத்து பெண்ணின் பூப்புக்கு முன்போ பின்போ
அத்தகைய சுகத்தை அவள் உணரலாம். எனவே பூப்பு எனில் பெண் கருத்தரிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள் என்ற அளவில்தான் பொருள் கொள்ள வேண்டும். பெண் பூப்படைதல் சடங்கு பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

ரஷ்யாவில் பெண் பூப்படைந்த உடன் அவள் தாய் பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைவிடுவாளாம். அவள் அடித்த அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்துவிடுவதை நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியில் வரவோ சூரிய
ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதியுடையவளாகிவிட்டாள் என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.

ஆப்பிரிக்கா சுலு (Zulu) இனத்தில் பெண் பூப்படைந்த நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும் . அந்தப் பெண் அவள் ஒத்தப்
பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்தப் பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள்.
பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே
பூப்படந்தப் பெண்களும் பூப்படைந்தப் பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக்கொடுப்பார்கள்

ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்படைதல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது
விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும் பீன்ஸ்சும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்தப் பெண்ணின்
முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்தித்குமான காரணம் சொல்லப்படும்.

இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது."பூப்பு நன்னீராட்டல்" என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றுள்ளது.
இச்சடங்கு குறித்த பதிவுகளை தமிழ்த் திரைப்படங்கள் அளவுக்கு யாரும் பதிவு செய்திருக்க முடியாது.!தாய்மாமன் உரிமையிலிருந்து பூப்படைந்தவுடன் பாலியல் உணர்வு ஏற்படுவதாக காட்டப்படும் காட்சிகள் வரைஉண்மை, பொய் அனைத்தையும் "பூப்பு நன்னீராட்டில் கலந்து காட்டிய பெருமை நம் தமிழ்த் திரைப்படங்களுக்கே உண்டு.


சங்க இலக்கியத்தில் பூப்பு...




பெண் பூப்படைதல் சடங்குகள் குறித்த தகவல்கள் சங்க இலக்கியத்தில் விரிவாக இல்லை.தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியலில்
"பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீததகன் றுறையார் என்மனார் புலவர்
பரத்தையின் பிரிந்த காலையான" (நூற்பா 1133)

என்று மணமான பெண்ணோடு கணவன் புணரும் காலம் குறித்த தகவலைப் பதிவு செய்துள்ளது.
இவ்விடம் குறிக்கப்படும் பூப்பு குழந்தைப் பருவத்து பெண் கருத்தரிக்கும் பருவத்திற்கு மாறிவிட்டதைக் குறிக்கும் பூப்பன்று.

பெண்ணின் முதல் பூப்பு, அதனை ஒட்டிய சடங்குகள் குறித்து ஒரேயொரு புறநானுறு பாடல், ம்கட்பாற் காஞ்சித்துறைப்
பாடல் (337:6:12) குறிப்பிட்டுள்ளது.

"பாரி பறம்பின் பனிச்சுனை போல
காண்டற் கரியளாகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவோடு மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில் ஆர் நறும்புகை சென்றடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந்தனளே வாணுதல்"

பெயர் குறிப்பிடப்படாத ஒரு மறக்குடிச் சிற்றரசனின் மகள் பூப்பு அடைந்ததால் பிறரால் காண்பதற்கு அரியவளாக, பெண்மை நிரம்பிய பொலிவோடு நன்கு வெளுத்து மடித்த துகில் போல அகலின் நறும்புகை கமழும் கபிலநிற வீட்டிற்குள் மனைச் செறிக்கப்பட்டாள் என்று இப்பாடல் பதிவு செய்துள்ளது. காண்டற்கரிய பாலியல் பொலிவு, நுடக்கம், அகில் நறும்புகை, மனைச்செறிப்பு ஆகியவை சங்க காலத்தில் பூப்பு எய்தியதை
ஒட்டி நிகழ்த்தப்பட்ட சடங்குகள் எனலாம். வேறு விளக்கமாக அறிந்திட சான்றுகள் இல்லை..

சடங்குகளூம் சமூக மாற்றங்களும்...


"அறிவியலும் கலை இலக்கியமும் "உண்மைகளை" வெவ்வேறு மொழிகளில் பேசுகின்றன. சடங்குகளும் அவ்வாறே பேசுகின்றன. மானிட வாழ்க்கையின் இருத்தலில் ஓர்மை மனதுக்கு (conscious mind) எந்த அளவுக்குப் பங்கு உண்டோ அந்த அளவிற்கும் குறையாமல் ஓர்மையற்ற மனதுக்கும் (unconsciousmind) பங்கு உண்டு. ஓர்மை மனதை அறிவு, பகுத்தறிவு ஆகியவற்றொடு சம்பந்தப்படுத்துவதைப் போல ஓர்மையற்ற மனதை சடங்குகள், கலை இலக்கிய படிமம் ஆகியவற்றோடு
சம்பந்தப்படுத்த முடியும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து இனக்குழு நாகரிக வாழ்க்கையிலிருந்த சடங்குகள் மாந்தரைச் சமூக
வயமாக்கும் கருத்தியல் செயல்பாடுகளைச் செய்து வந்துள்ளன.: என்பார் ராஜ்கவுதமன். இத்தகைய சமூக முக்கியத்துவம் வாய்ந்த சடங்குகளைப் பற்றி ஆராய்ந்த அர்னால்டு வான் கென்னப் (Arnold Van Gennep)
அவற்றை ஒரு குடும்ப/சமூக/பாத்திர நிலையிலிருந்து ஒருவர் அல்லது ஒரு குழு மற்றொரு குடும்ப/ சமூக/ பாத்திர நிலைக்கு மாறிச் செல்வதற்கான சடங்குகள் (Rites of passage) என்று குறிப்பிடுவார்.
"தமிழர் மானுடவியல் நோக்கில் தமிழ்ப் பண்பாட்டில் பெண்ணுக்கு நான்கு இன்றியமையாத வாழ்க்கை வட்டச் சடங்குகள் வழியாக பூப்பு, வதுவை, மகப்பேறு, கைம்மை ஆகிய மாற்றங்கள் நிகழ்கின்றன " என்பார் பக்தவச்சலபாரதி- (தமிழர் மானுடவியல்) இந்த மாற்றங்களின் ஊடாக குமரி, மனைவி, தாய், கைம்பெண் முதலான குடும்ப/சமூக பாத்திரங்களை ஒரு பெண் ஏற்கிறாள்.

பெண்ணுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மறு உற்பத்தி அதிகாரம் கண்டு ஆண் பொறாமை அடைகிறான். அச்சம் கொள்கிறான். பெண்ணின் மறு உற்பத்தியை பெண் மூலமாக ஆண் அறிய வேண்டி இருப்பதால் தன் அதிகாரத்தை நிலைநிறுத்த தீவிரமாக சிந்திக்கிறான். தாய்வழிச் சமூக அதிகாரம் தடை செய்யப்பட்டு தந்தை உரிமைச் சமூக மேலாதிக்கம் நிலைநிறுத்த கொண்டாடப்பட்ட பெண்ணின் பூப்பு தீட்டாகி விலக்கி வைக்கப்படுகிறது. எதைக் கண்டு ஆண் அச்சப்பட்டானோ அதையே
காரணமாக்கி பூப்பு, பெண்ணின் மறு உற்பத்தி உறவு, மகப்பேறு அனைத்தும் அவள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்ட சமூகக் காரணிகளாக மாறியது.

மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தில் பெண்ணைப் பற்றி பெண்ணின் சமூகத் தகுதி
நிலையைப் பற்றி விளக்கும் போது உயிர் உற்பத்தி செய்வதிலும் சமூகத்தில் உற்பத்திச் சக்திகளை உருவாக்குவதிலும்
சுதந்திரமாகவும் சம உரிமை பெற்றும் வாழ்ந்து வந்த பெண்கள் முதலாளித்துவ போக்கினாலும் தனிச்சொத்துரிமையாலும்
துணைநிலையினரகவும் சார்பு மாந்தராகவும் மாறிப் போயினர். இம்மாற்றம் வரலாற்றி நிகழ்ச்சியில் தவிர்க்கவியலாத மாற்றமாகியது என்று விளக்குகின்றனர். தமிழ்ச்சமுதாயத்தில் நிலவும் தாய் தெய்வ வழிபாடும் கொற்றவை வழிபாடும் இதை உறுதிப்படுத்தும்.
இந்த தாய்தெய்வம் மிகப் பழமையான தெய்வம் என்பதால் "ப்ழையோள்" என்றும் மணிமேகலையில் "முதியோள் கோட்டம்": என்றும் குறிக்கப்படுவதைக் காணலாம்.

தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகவே பெண் பூப்படைதலைக் கொண்டாடும் சடங்கு பல்வேறு சமூகங்களில்
கடைப்பிடிக்கப்படுகிறது.

எனினும் இன்றைய மத நம்பிக்கைகள் , தந்தை வழி ஆணாதிக்க சமூகம், முதலாளித்துவம் அனைத்தும் பெண்ணின் பூப்புடைதல்கொண்டாட்டத்தை ஆணின் நுகர்ப்பொருள் கொண்டாட்டமாக்கி, பாலியல் உறவில் ஆணின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சட்டங்களாக்கிவிட்டது தான் உண்மை. சாதியக் கொடுமையை உணர்த்தும் தீண்டாமை, தீட்டு போன்ற சொற்கள் பெண்ணின் கொண்டாட்டத்திற்குரிய பூப்படைதலுடன் தொடர்பு படுத்தி தீட்டாகிப் போனது. பெண்ணின் பூப்படைதலும் மாதவிலக்கும் தீட்டாகிப் போனது. பெண் தீட்டாகிப் போனாள்., தீண்டத்தகாதவளாகிப் போனாள். பெண் அடிமையாகிப்போனாள். எனவே தான் பெண் பூப்படைதலைக் கொண்டாடுவதும் விளம்பரப்படுத்துவதுமான சடங்குகள் அவளை அடிமைப்படுத்தும் அடையாளங்கள் என்பதில் ஐயமின்றி ஒட்டுமொத்த பெண் விடுதலை விரும்பிகளும் பூப்பு நீராட்டு சடங்குகளை எதிர்க்கிறோம். பழமை என்பதால் பாதுகாக்கலாம்
அருங்காட்சி அகத்தில். அதைப்போல தான் பழமையான சடங்குகளும் சம்பிரதாயங்களும் நம்பிக்கைகளும். சடங்குகளின் வேர்களைத் தேடி மனித வரலாற்றை ஆய்வு செய்யலாம். தேவையற்ற சடங்குகளை ஒழிப்பதன் மூலமே நிகழ்வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளமுடியும்,.

வடநாட்டின் குளிருக்கு
கால்சராயும் பூட்சோடும் பூசாரி
மோட்டார் போட்டாகிவிட்டது
பெருமாக் கோயில் தேருக்கு
திருப்பதிக்குப் போகமுடியாவிட்டால்
தி.ந்கர் கிளையில் காணிக்கைச் செலுத்தலாம்
மூணுநாள் விரதம்
ஐயப்பனுக்குப் போதும்
அரே ராமாவில்
ஆங்கிலேய அர்ச்சகர்
இந்தோனேசியக் கோவிலில்
செருப்புப் போட்டுக் கொள்ளலாமாம்
கணேசனுக்கும்
கோழிக்கறிப் படையல்
சட்டம் எழுதியாயிற்று
எல்லா சாதியும்
கோயிலுக்கு வ்ர
என்னாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்கான பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை.
(- கவிஞர் கனிமொழி.)


துணைநின்ற நூல்கள்:-

- பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் - ராஜ்கவுதமன்.






நன்றி: www.udaru.blogdrive.com

Thursday, April 2, 2009

எப்படி சூத்திரர் பஞ்சமன் பட்டங்கள் ஒழிய வேண்டுமோ, அதுபோல்தான் திருமதி பட்டமும் ஒழிய வேண்டும்...

கட்டுரை



ஓவியா
என்னதான் செல்வம் சேர்த்தாலும் படித்து முடித்து அய். ஏ. எஸ் ஆனாலும் நீ யார் சூத்திரன்தானே? பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன்தானே? அப்படித்தானே இந்த நாட்டின் சாத்திரம் சொல்கிறது! அப்படித்தானே இந்த நாட்டின் கோவில்கள் சொல்கின்றன! நீ கட்டிய கோவிலின் கருவறைக்கு வெளியில்தானே நீ நிற்கிறாய்? இந்த மதத்தை அழிக்காமல், இந்தக் கோவில்களை அழிக்காமல் நீ எப்படி இந்த நாட்டின் மானமுள்ள குடிமகனாக உன்னை கருதிக் கொள்ள முடியும்? உன்னை இரண்டாந்தரமாக்கும் எதுவும் உன்னுடையதல்ல. அது உனது தேசமாக இருந்தாலும் சரி, ஏன் மொழியாகவே இருந்தாலும் சரி. உன்னை மானமுள்ள மனிதாக நடத்துவதற்கு தடையாக எது இருந்தாலும் தகர்த்தெறிவதே உனது கடமையாகும். இதுதான் தலைவர் பெரியார் தன் இறுதி மூச்சுள்ள வரையில் தமிழருக்கு தந்து சென்ற செய்தியும் பணியுமாகும். தன்மானம்தான் வாழ்வின் சாரம் என்று சிந்தித்தவர் பெரியார். தன்மானத்துடன் மனிதன் வாழும் வாழ்க்கையும் அதற்கான போராட்டமுமே மனிதர்களை மிகச் சிறந்த பரிணாமத்திற்கு இட்டுச் செல்லும் என்று சிந்தித்தார் பெரியார். அவருடைய மூச்சுக் காற்றும் அவ்விதமே இயங்கியது.

உண்மையில் அனைத்து பேதங்களையும் கருவறுக்கும் அடிப்படைச் சூத்திரத்தை உள்ளடக்கிய வாழ்க்கை வாய்ப்பாடாகும் இத்தத்துவம். தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல உலகின் எந்த பிரிவினரின் விடுதலைக்கும் பொருந்துகின்ற தத்துவம்தான் இது. பெண்விடுதலையையும் இதே வாய்ப்பாட்டை பயன்படுத்தியே புரிந்து கொள்ள வேண்டும். படிப்பு வேலைவாய்ப்பு சொத்துரிமை இவையெல்லாம் பெண் விடுதலைச் சமூகத்தைப் படைக்கும் பாதையின் படிக்கட்டுகள்தானே தவிர எல்லைக் கற்களல்ல. இன்று இந்த மண்ணில் பெண்ணின் வாழ்க்கை என்பது என்னவாக இருக்கிறது? பெண்ணைக் கருவிலேயே வெறுக்கும் நிலை இன்னும் தொடர்கிறது என்ற போதிலும் இந்தக் கட்டுரையில் அந்த நிலையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ‘பெண்ணுக்கு என்ன இல்லை இப்போது?’ என்று நம்மை கேள்வி கேட்கும் சமூகத்தையே நமது களமாக எடுத்துக் கொள்வோம்.

இன்று பெண் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். உண்மைதான். வேலைக்கு அனுப்புகிறார்கள். சரி. ஆனால் இந்தக் கல்வி, வேலைவாய்ப்பு இவற்றை பயன்படுத்தி பெண் தன் வாழ்க்கையை தான் வாழ அனுமதிக்கப்படுகிறாளா? திருமணம் வரை தந்தையின் பாதுகாப்பில் அதன்பின் கணவனின் கட்டுப்பாட்டில் இறுதியாக மகனின் தயவில் என்று வாழ்கின்ற விதியை இன்று வரை இந்த சமுதாயம் ஏதாவதொரு வகையிலாவது திருத்தி எழுதியிருக்கிறதா? என்ன படித்திருந்தால் என்ன? சமூகத்தில் என்ன நிலை வந்தால்தான் என்ன? இந்த வாழ்க்கை சட்டகத்திற்குள் என்ன தன்மானம் வாழ்கிறது பெண்ணுக்கு? எப்படி சூத்திரப் பட்டமும் பஞ்சமன் பட்டமும் ஒழியாமல் இந்த நாட்டின் வெகுமக்களுக்கு விடுதலை இல்லை என்று நினைக்கிறோமோ அப்படித்தானே இந்தத் திருமதிகள் பட்டம் ஒழியாமல் பெண்களுக்கு விடுதலை கிடையாது என்பதும்!

‘திருமதி’ பட்டங்கள் ஒழியாமல் ‘தேவடியாள்’ பட்டமும் ‘விதவைப் பட்டமும்’ ஒழியுமா? ஒரு நாளும் அது சாத்தியமில்லை. இந்த வார்த்தைகள் சாகாத வரையில் பெண் வாழ்க்கை என்பது விடுதலை வாழ்க்கையுமில்லை. பெண் விடுதலை என்பது ஒட்டுமொத்த இந்த மானுட வாழ்வின் மறு சீரமைப்புடன் தொடர்புடைய கருத்தியல் என்பதை புரிந்து கொள்ளாத வரையில் பெண் விடுதலை என்பதை ‘பெண் கல்வி’யாகவும் ‘பெண்ணின் வேலை வாய்ப்பாக’வும் ஏன் ‘பெண்ணின் உடை’யாகவும் கூட ஓர் எல்லைக்குள் சுருக்கிதான் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும்.

ஏன் கல்வி கற்ற பின்னும் பொருளாதார வாய்ப்பு கிடைத்த பின்னரும் பாதுகாப்புக்கு ஓர் ஆண் துணை வேண்டும் என்று பெண் நினைக்க வேண்டியிருக்கிறது?

ஏன் இன்னும் இந்த மண்ணில் திருமணத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் சிறிது கூட குறையாமல் இருக்கிறது?

பிறக்கப் போகும் பிள்ளை தனது பெயரைச் சொல்லப் போவதில்லை தனது பெயரை அதன் முதலெழுத்தாய் போடப் போவதில்லை என்று தெரிந்த பின்னரும் எதற்காக உயிரைப் பணயம் வைத்து பெண் பிள்ளை பெறுகிறாள்?

கடைசி காலத்தில் மகன் வீட்டில் ஒரு காவல் நாயைப் போல் வாழும் வாழ்க்கை நிதர்சன உண்மையாகக் கண் முன்னே விரிந்து கிடக்க இன்னும் ஏன் தாய்மை புனிதமானது என்ற பொய்யை அவள் நம்பிக் கொண்டிருக்கிறாள்?

மனிதப் பிறவியாக வாழ்வது என்றால் என்ன என்றே தெரியாத நிலையில் மனைவியாகவும் தாயாகவும் மாமியாராகவும் வாழ்வதிலேயே ஏன் இன்னும் முடங்கிக் கிடக்கிறாள்?

பெண் விடுதலைக்ககாக சிந்திப்பவர்கள் இந்த சவால் மிக்க கேள்விகளை எழுப்ப வேண்டிய காலகட்டத்தில் இன்று இருக்கிறார்கள். இந்தக் கேள்விகளை எழுப்புவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனெனில் நம்முடைய தோழர்களே அதிர்ந்து போவதை நாம் பார்க்கிறோம். இந்த கேள்விகள் பொறுப்பில்லாமல் ஏதோ கையில் கிடைத்த கல்லை எறிவது போன்றது என்றும் அவர்கள் கருதுகிறார்கள். பொதுவாக பெண்ணின் வலி என்பது பெண்களாலேயே புரிந்து கொள்ளப் படாமல் இருக்கும் ஓர் சமூகத்தில் ஆண்கள் அதை புரிந்து கொள்வார்களா? அது சாத்தியமில்லை. மேலும் இந்தக் கேள்விகள் மற்றும் இதற்கான பதில்கள் இன்று சமுகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் ஓர் அடிப்படை ஒழுங்கை கலைத்து விடுமென்றும் அதற்கான மாற்று என்ன என்பதை ஒரு கறாரான வரைபடம் போல் எழுதிக் காட்ட முடியாத பட்சத்தில் இந்தக் கேள்விகள் தங்களின் தார்மீக அடிப்படையை இழந்து விடுவதாகவும் உணரப்படுகிறது. அவர்களுடைய அந்த சமூக அக்கறை குறித்து நாம் பரிசீலிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

‘பெண்ணின் சுதந்திரம்’ குடும்ப அமைப்பை புறக்கணித்து வாழ அவர்களுக்கு வழங்கப்படும் உரிமை என்பது ‘குழந்தை வளர்ப்பு’ ‘முதியோர் பாதுகாப்பு’ என்பவற்றை கேள்விக்குள்ளாக்கி விடும் என்ற அச்சம் நிலவுகிறது, பெண்ணுக்கு இப்போது புதிதாக அறிமுகமாகியிருக்கும் சுதந்திர வெளியை பயன்படுத்தி அவர்கள் முதலில் எடுத்த நடவடிக்கையே கூட்டு குடும்பத்தை விட்டு வெளியேறி தனிக் குடும்பங்களை நிறுவியதுதான். இன்று தனிக்குடும்ப கலாச்சாரம் என்பது நிலைநிறுத்தப்பட்டு விட்டது. இந்த மாற்றம் என்பது பெரும்பாலும் பெண்கள் தரப்பிலான நடவடிக்கையாக அமைந்திருப்பதும் உண்மைதான். இதனால் பாதிக்கப்பட்டிருப்பது குழந்தைகளும் முதியோர்களும் என்ற விளைவினை இன்று பலரும் முன்னெடுத்து விவாதிக்கிறார்கள். இப்போது புதிய தலைமுறை திரைப்பட இயக்குனர்களின் சிறப்பு கவனத்தையும் இந்த பிரச்சனை பெற்றிருக்கிறது. இதில் இவர்கள் யாரும் பார்க்க மறுக்கிற சில விசயங்களை நாம் முன்வைத்தாக வேண்டியிருக்கிறது.

பெற்றவர்களை வளர்த்தவர்களைப் பிரிவது அவர்கள் தனிமையிலும் இயலாமையிலும் இல்லாமையிலும் வாடும் போது பாராமுகம் காட்டுவது குற்றம் என்ற பொதுப் புத்தியை ஆணுக்கும் பெண்ணுக்கும் நாம் கட்டமைக்க வேண்டியிருக்கும்போது வளர்த்தவர்களை விட்டுப் பிரிந்து போவதுதான் வாழ்க்கை என்ற நியதியை பெண்ணுக்கு மட்டும் ஏன் ஏற்படுத்தியிருக்கிறீர்கள்? தனது தாய் தகப்பனை பிரிய வேண்டியது பெண்ணுக்கு தர்மம். ஆனால் அதே செயற்பாடு ஆணுக்கு மட்டும் அதர்மம் என்ற விதியை எழுதியது யார்? இந்த அடிப்படையான அதர்மத்தை இன்னும் மறைத்துக் கொண்டே கூட்டுக் குடும்பத்தின் பெருமையைப் பேசும் யாருக்கும் ஏன் குற்றவுணர்வு எழுவதில்லை என்பது நமக்கு வியப்பாக இருக்கிறது. கூட்டு வாழ்க்கை என்பது வேறு கூட்டுக் குடும்பம் என்பது வேறு. கூட்டு வாழ்க்கையை நாமும் பேணவே விரும்புகிறோம். ஆனால் ஆணின் தலைமையிலான கூட்டுக் குடும்பம் கூட்டு வாழ்க்கைக்கான அமைப்பே அல்ல என்பதுதான் நாம் வலியுறுத்தும் உண்மையாகும்.

ஒரு தலைமையின் கீழ் உள்ள அடிமைகளின் கட்டமைப்பே குடும்பம், பறவைகளின் சராணாலயமும், மிருகக் காட்சி சாலைகளும் ஒரே அமைப்பல்ல அல்லவா? குடும்பத்தைக் காப்பாற்ற நினைப்பதும் கூட்டு வாழ்க்கையை காப்பாற்ற நினைப்பதும் ஒன்றல்ல என்பதற்கு நிறைய உதராணங்களைக் கூற முடியும். உதாரணமாக, இப்போது ஒரு புதிய சட்டத்தை முன்மொழிய இருக்கிறார்களாம். அது என்னவெனில் வயதான தாய் தந்தையரை புறக்கணிக்கும் மகன்களுக்கு சிறைத் தண்டனை தர இருக்கிறார்களாம். அது சரி. ஆனால் முன்பாவது பெண்ணை படிக்க வைக்கும் செலவு இல்லை. இப்போது படிக்கவும் வைத்து வரதட்சணையும் கொடுத்து திருமணம் முடித்து வைக்கும் பெற்றோர்களைப் பராமரிக்கும் கடமை பெண்ணுக்கு இல்லை என்று விதி செய்து வைத்திருக்கும் பண்பாட்டையும் அந்த பண்பாட்டை இன்றும் பராமரிக்கும் இந்த சட்டங்களையும் நீதித் துறை அமைப்பையும் எப்படி தண்டிப்பது என்று எங்களுக்கு தெரியவில்லை.

இது ஒரு புறமிருக்கட்டும். இந்த சட்டத்தின் நோக்கம்தான் என்ன? முதியோர்களை பாதுகாப்பதா இல்லை குடும்ப அமைப்பை பாதுகாப்பதா? முதியோர் பாதுகாப்புதான் நோக்கம் என்றால் இந்த அரசு என்ன செய்ய வேண்டும்? முதியோர் இல்லங்களை நிறுவி அந்த பாராமரிப்புக்கான செலவுத் தொகையை மகன் ஊதியத்திலிருந்து அரசே வசூலித்துத் தர வேண்டும். அப்போதுதான் முதியோர் பாதுகாப்பு என்ற நோக்கம் நிறைவேறும். அதை விடுத்து எவன் வெறுத்து ஒதுக்கினானோ மறுபடியும் அவன் நிழலிலேயே மீண்டும் அந்த முதியோர்களை வாழ விடுவதா அவர்களுக்கான பாதுகாப்பைப் பெற்றுத் தரும்? அந்த வாழ்க்கையில் அவர்களுக்கு என்ன தன்மானம் இருக்கும்? இங்குதான் இந்தக் கட்டுரையின் துவக்கத்தியில் கூறியிருக்கும் வார்த்தைகளை நாம் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறோம். தன்மானமுள்ள வாழ்க்கையை இந்த குடும்ப அமைப்பு பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்குமே தொடர்ந்து தருவதில்லை. ஆக இந்த சட்டங்கள் மூலமாக இந்த அமைப்பு மீண்டும் தன்னை காப்பாற்றிக் கொள்ள எத்தனிக்கிறதேயல்லாமல் மனிதர்களுக்கான பாதுகாப்பான தன்மானம் நிரப்பிய வாழ்க்கை குறித்த சிந்தனை இன்னும் மலராமல்தானிருக்கிறது. இது ஒருபுறமிருக்க இப்படி சட்டம் போட்டுதான் இந்த அமைப்பை காப்பாற்ற வேண்டுமென்றால் வாழ்வதற்கான ஒரே வழி இதுதான் என மயங்குவதில் என்ன இருக்கிறது?

அடுத்து குழந்தை வளர்ப்பை எடுத்துக் கொள்வோம். காட்டுமிராண்டி நிலையிருந்த போது மனிதனின் வாழ்க்கை விலங்குகளோடு போராடுவதில் கழிந்தது. இன்று மனிதன் இருக்கும் திசையிலேயே விலங்குகள் இல்லை. இன்றும் மனிதன் போராடிக் கொண்டிருக்கிறான். யாருடன்? சக மனிதர்களுடன்தான். இனத்தினால் பிரிந்திருப்பது ஒருபுறமிருக்கட்டும். ஓர் இனமாகக் கூட ஒன்றுபட முடியாமல் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு விரோதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு என்ன அடிப்படைக் காரணம்? தனி உடமையை பேணும் பொருட்டு தோன்றிய அடிமை அமைப்பான குடும்ப அமைப்பில் சுய நலமிக்கவர்களாக குழந்தைகள் வளர்க்கப்படுவது இதில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது என்றுதான் நமக்கு தோன்றுகிறது. இங்கு குழந்தைகளுக்கான பொதுப்புத்தியே ‘தான்’ ‘தனது’ என்பதாக அமைந்து போவது தவிர்க்க இயலாதாக இருக்கிறது.

குழந்தைகள் பொது சமூகக் கூடங்களில்தான் வளர்க்கப்பட வேண்டும். தனி நபர்களாகிய தாய் தந்தையர் பொறுப்பில் குழந்தைகள் வளரும் வரையிலும், பொது உடமை சிந்தனை வேர்களை நாம் குழந்தைகளிடம் ஏற்படுத்தவே முடியாது. நாம் என்னதான் ‘சனநாயகப் படுத்துகிறோம்’ ‘ஆண்களைத் திருத்துகிறோம்’ என்றாலும் குடும்பம் என்பது அடிப்படையில் தனி உடமைக்கான ஓர் அமைப்புதான். பொது வெளியை அங்கீகரிக்காது எனவே முதியோர் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் வளர்ப்பு இரண்டு முகாமையான நோக்கங்களுக்குமே இந்த குடும்ப அமைப்பு தகுதி வாய்ந்த பொருத்தப்பாடுடையது அல்ல. மாறுபட்ட வடிவங்களில் மனித வாழ்க்கையை அங்கீரிக்கிற பக்குவத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சமூகம் என்பதை பலமானவர்கள் பலமில்லாவர்கள் என்று புரிந்து கொள்ளாமல் வேறுபட்ட திறன்களும் வல்லமைகளும் உடையவர்கள் என்ற புரிதலை வளர்ப்பது குறித்தும் எல்லோரும் அவரவர் வழியில் வாழ்வதற்கான பொதுத்தளமாக சமூக வாழ்க்கையை மறு கட்டமைப்பு செய்வதை நோக்கியும் நாம் சிந்திக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக இயல்பாகவே உருவாகி வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்கிற இயக்கங்களை உருவாக்கினாலே சிறந்த செயல்பாடாகும். அந்த அடிப்படையில் நமது தோழர்கள் தங்கள் வாழ்க்கையில் அமைப்புகளில் கீழ்க்காணும் செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டு பணி யாற்ற வேண்டியதை தங்கள் இயக்க செயல்பாடுகளில் ஒன்றாகவே கருத வேண்டும்.

குழந்தைகள் மற்றும் முதியோர் பராமரிப்பில் ஆக்க பூர்வமாகக் கவனம் செலுத்துவது

அதற்கான அமைப்புகளை ஏற்படுத்துவது அல்லது அம்மாதிரியான அமைப்புகளுக்கு உதவுவது

அந்த இல்லங்களை அனாதை இல்லங்கள் என்று கொச்சைப்படுத்தாமல் சிறந்த வாழ்விடங்கள் என்ற சமூக மரியாதையை ஏற்படுத்தித் தருவது.

“வீட்டுக்கு ஓர் அடுப்பங்கரை என்பதும் ஒவ்வொரு ஆம்பிளைக்கும் ஒரு பொம்பிளை என்பதும் அடியோடு ஒழிந்து போக வேண்டும்” என்றார் பெரியார். அந்த வார்த்தைகளை ஆழ்ந்து சிந்திப்பதே நமக்கு பல உண்மைகளை விளக்கும்