Friday, May 16, 2008

தோழர் அஞ்சலிக்கு ஓர் அஞ்சல் - பி.இரெ. அரசெழிலன்

அன்புள்ள தோழர் அஞ்சலி அவர்களுக்குத் தோழமை வணக்கம். உங்களின் மடல் கிடைத்தது. அனுப்புநர் முகவரிப் பகுதியில் உங்களின் பெயரை திருமதி அஞ்சலி நாகராசன் என எழுதியிருந்ததைக் கண்டு சிறிது அதிர்ந்துதான் போனேன். நாகராசன் என்பது உங்கள் கணவர் பெயர்தான் என்பதை நான் நன்றாகவே அறிவேன். திருமணத்திற்குமுன் தாங்கள் எழுதிய மடல்களிலெல்லாம் தாங்கள் அஞ்சலி என்று மட்டும்தானே குறிப்பிட்டு வந்தீர்கள். திருமணத்திற்குப் பிறகு ஏன் இந்தத் தேவையில்லாத வால் முளைத்தது என்பது எனக்கு இன்னும் விளங்கவே இல்லை.

சமூக நடைமுறையில் உள்ள வழக்கம்தானே இது என்று நியாயப்படுத்தப் போகிறீர்களா அஞ்சலி? மேல்தட்டுப் பெண்களிடம் ஊறிப்போன நடைமுறையாகிவிட்ட இச்செயல், நடுத்தர வர்க்கத்துப் பெண்களிடமும் விரைவாகத் தொற்றிவரும் இந்நோய், தங்களையும் தொற்றிக் கொண்டதில்தான் எனக்கு வியப்பும் அதிர்ச்சியும் மேலிடுகிறது. சராசரிப் பெண்கள் இதுபோல் எழுதுவதை வேண்டுமானால் பிற பெண்கள் இப்படி எழுதுவதைப் பார்த்து நாகரிகம் என நினைத்துக் கொண்டு எழுதுகிறார்கள் என எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், தாங்கள் அப்படியான சராசரிப் பெண் அல்லவே அஞ்சலி!

பெண்களின் நிலை பற்றியும், பெண்கள் ஒடுக்கப்படுவது பற்றியும் ஆணாதிக்கச் சமூக நடைமுறை பற்றியும் விரிவாகவும் ஆழமாகவும் மணிக்கணக்கில் பேசுவீர்களே! விவாதிப்பீர்களே.

இதுவும் ஒரு ஆணாதிக்க நடைமுறைதான், பெண்ணடிமைத் தனத்தின் கூறுகளில் ஒன்றுதான் என்பதை, ஏன் அறியாமல் போனீர்கள்? உங்கள் கணவர் இந்தச் சமூகத்திற்கு "அறிமுகப்படுத்தப் படுகிறபோதோ, அறியப்படுகிறபோதோ நாகராசனாக மட்டுமே அறிமுகப்படுத்தப்படுகிறார்; அறியப் படுகிறார். ஆனால் நீங்கள் மட்டும் திருமதி அஞ்சலி நாகராசன் என்று அறிமுகப்படுத்தப்படுகிறீர்கள். திருமதி என்பதன் மூலம் நீங்கள் மணமானவர் என்பதும், உங்கள் பெயருக்குப் பின் உங்கள் கணவர் பெயரை இணைப்பதன் மூலம் நீங்கள் யாருக்கு மணமானவர் என்பதும் அறியப்பட்டு விடுகிறதே!

பெண் ஆணுக்கான போகப்பொருள் என்கிற மதவியல் கருத்துகளின் மறுவடிவம்தானே இது! ஆணாதிக்கக் கருத்தியல்களின் நவீன வெளிப்பாடுதானே இது! இன்னும் ஒருபடி மேலே போய் (Mrs. Nagarajan) திருமதி நாகராசன் என்று ஒரு பெண் தன் சுயத்தை சிந்தனையை மட்டுமல்ல தன் பெயரைக்கூடத் தொலைக்கும் அவலம் கூட நேர்ந்துவிடுகிறது. இவற்றை யெல்லாம் தாங்கள் உணராமல் போனது ஆச்சரியமே.

திருமணத்திற்கு முன்னும் பின்னும் நாகராசன்
திரு. நாகராசன்தான். ஆனால் அஞ்சலி மட்டும் திருமணத்திற்கு முன்பு செல்வி அஞ்சலியாக இருந்தவர் திருமணத்திற்குப்பின் திருமதி அஞ்சலி. ஒரு பெண் தன் பெயரைச் சொல்வதிலிருந்தே, எழுதுவதிலிருந்தே அவள் திருமணமானவரா, ஆகாதவரா என அறியப்பட வேண்டும் என்கிற அவலச் சிந்தனைக்கு ஆட்பட்டு விட்டீர்களே.

திருமணமாகாத பெண்களை “Miss” என்றும் திருமணமான பெண்களை “Mrs” என்றும் குறிப்பிடுவது பெண்களுக்கெதிரான ஆணாதிக்க நடைமுறை என உணர்ந்து கொண்ட பெண்ணியவாதிகள் மணமான, மணமாகாத பெண்கள் அனைவருக்கும் பொதுவாக Ms. என்ற பொது அடை மொழியைப் பயன்படுத்துகின்றனர். “CHAIRMAN” என்ற சொல் ஒரு ஆணை மய்யப்படுத்தி ஏற்படுத்தப்பட்ட சொல் என்பதனால் “CHAIRPERSON”என்ற சொல்லைப் பெண்ணியவாதிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இந்த அளவுக்கு பெண்ணியச் சிந்தனைகள் கூர்மைப்பட்டு வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா ? இன்னும் சில பெண்கள் இப்படிக் கூறுவார்கள், "நானாக விரும்பித்தான் என் பெயருக்குப் பின் என் கணவர் பெயரைச் சேர்த்து எழுதுகிறேன், என்னுடைய வெற்றிக்குப் பல வழிகளிலும் என் கணவர் ஒத்துழைக்கிறார்; அன்பின் வெளிப்பாடாகத்தான் இப்படி எழுதுகிறோம்'' என்று பத்தாம்பசலித்தனமாக உளறுவார்கள்.

இப்படிக் கூறுபவர்களை நோக்கி ஒன்று கேட்கிறேன்; ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பதாக நமது கதைகளும், காவியங்களும், இலக்கியங்களும், திரைப்படங்களும் கூறுகின்றனவே! பெண் எப்போதுமே ஆணுக்குப் பின்னால் ஏன் இருக்கிறாள் என்பதை பெண்கள் எப்போதாவது எண்ணிப் பார்க்கிறார்களா?

தன் வெற்றிக்கு உறுதுணையாய் இருப்பதற்காக மனைவி பெயரைத் தன் பெயரோடு இணைத்தெழுதும் ஆண்கள் உண்டா? கூறுங்கள். எங்கோ ஓரிருவர் உண்டு என்பதை நானும் அறிவேன்; விதிவிலக்குகள் விதியாகமாட்டா என்பதை உணருங்கள், யாருக்காகவும் யாரும் தங்கள் தனித்தன்மையை இழக்க வேண்டியதில்லை. கணவன் அவர் பெயரால் மட்டுமே, மனைவி அவர் பெயரால் மட்டுமே அறியப்படப்படும். தங்கள் பெயருக்குப் பின் தங்கள் கணவர் பெயரைச் சேர்த்து எழுதியது சரியானதுதான் என்றால் அதற்கான நியாயமான காரணங்களோடும், தவறென்றுபட்டால் உங்கள் பெயரை அஞ்சலி என்று மட்டுமே குறிப்பிட்டு எழுதப்படும் தங்களின் அடுத்த மடலை ஆவலோடும் எதிர்பார்க்கும்.

பி.இரெ. அரசெழிலன்

இந்தியச் சட்டமும் பெண்களின் பாலியல் உரிமையும் - கருணா மனோகரன்

இந்துச் சமூக அமைப்பில் சட்டங்களை விட மரபே கோலோச்சுகிறது. பெண்கள் மரபுக்குள் மிக ஆழமாகப் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு இம்மரபு அளவற்ற அதிகாரங்களை வழங்கி இருப்பதால் மிகக் குறைவான ஆண்களே பெண்கள் உரிமைகளைப் பேசுகின்றனர். எனவே பெண்கள் இயக்கத்தின் தெருப் போராட்டங்கள் மிகக் குறைவாகவே நடக்கின்றன. இத்தகைய நிலையில் பெண்கள் தங்கள் வாழ்நிலைப் பிரச்சினைகளில் குறைந்தபட்சம் சட்டத்தின் உதவியையாவது நாட வேண்டியிருக்கிறது. ஆனால் அந்தச் சட்டங்களின் நிலை என்ன..?

பெண்களுக்கான சட்டப்பிரிவுகளில் மிகக் கொடூரமானது 498- சட்டப்பிரிவாகும். ஒருவன் மாற்றானின் மனைவியை அப்பெண்ணின் சம்மதத்தோடு உரிமையாக்கிக் கொண்டால் அவன் மீது வழக்குத் தொடுக்க கணவனுக்கு இச்சட்டப் பிரிவு உரிமை வழங்குகிறது. இச்சட்டப்பிரிவு பெண்களின் மீதான அவர்களின் சுதந்திரத்தின் மீதான (குறிப்பாக பாலியல் சுதந்திரம்) கடுமையான அடியாகும், ஆண்களுக்குப் பெண்கள் மேல் வரம்பற்ற அதிகாரத்தை இச்சட்டப்பிரிவு வழங்குகிறது.

பெண்கள் மாற்றானை விரும்பினால் அது குடும்ப அமைதியைக் குலைக்கும் என ஒரு ஆண் நினைக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட நிலைக்கு கணவனும் அவன் சுற்றத்தாரும் காரணமாகயில்லாமல் பெண் தனித்து இத்துணிச்சலான முடிவுக்கு வந்து விடுவதில்லை. மனைவியை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் கணவன், முதல் மனைவிக்கு (குழந்தைகள் உள்பட) உயிர் வாழத் தேவையானதை மட்டும் ஜீவானம்சமாகக் கொடுத்து விட்டால் போதும் (அவள் சுயசம்பாத்தியம் இல்லாதிருந்தால் மட்டுமே) என்று சொல்லும் சட்டம் அதையே பெண் செய்தால் அவளின் வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கித் தண்டிக்கிறது.

கணவன் மனைவியைப் புறக்கணித்து விட்டு வேறொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் அல்லது அதை விடக் கொடுமையாக கெட்ட வார்த்தைகளால் வசைமாரி பொழிந்தாலும் கணவனை விட்டு மனைவி பிரிந்துபோய் விடக்கூடாது என்பதே இச்சட்டத்தின் உட்பொருளாகும். மனைவியை அடிக்கலாம், வதைக்கலாம், சித்திரவதைப் படுத்தலாம், ஆனால் கணவனை விட்டுப் பிரியக் கூடாது அல்லது தான் சாகும்வரை அவனையே கணவனாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஏற்பாட்டிற்கே இச்சட்டம் வழிவகை செய்கிறது.

பெண்களைப் பொருத்தவரையிலும் இந்து தர்மமும், மனுநீதியும் நிகழ்காலத்திலும் சட்டமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. ஒரு ஆண், அவனை மையப்படுத்தி ஒரு குடும்பம், அவனுக்கு சாதகமான இயக்கங்கள், சட்டங்கள், அவனுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும் அரசு- இப்படியாகப் பெண்கள் மீது ஆணாதிக்க சூழ்ச்சி வலை பின்னப்படுகிறது. சாதிக் குடும்பத்தைக் காப்பாற்றுவதும், அரசைக் காப்பாற்றிக் கொள்வதும் நேரடியாகவே சம்பந்தப்பட்டிருக்கிறது.

ஒரு பெண் தன் கணவனிடம் விவாகரத்து கோரும்போது, அவள் தான் இருக்கும் கணவன் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவதோடு கணவனின் சொத்துக்கள் மீதும் அவளுக்கு உரிமையில்லை என்று சட்டம் கூறுகிறது. அவளுக்குச் சட்டம் வழங்கும் உரிமை என்பது ஜீவானாம்சம் கோருவது மட்டுமே. ஜீவனாம்சம் என்பது மிக மிகச் சிறிய தொகையாக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இங்கும், இந்துக் குடும்பம் என்ற நிறுவனம் சிதையாமல் கட்டிக் காக்கப்பட வேண்டும் என்பதே சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.

கிறித்தவப் பெண்ணுக்குக் கணவனின் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கே மனைவிக்கான ஜீவனாம்சம் என்கிறது சட்டம் (1869 ஆண்டு சட்டம்) முஸ்லீம் பெண்களைப் பொறுத்தவரையில் ஜீவனாம்சம் கிடையாது என்கிறது சட்டம். அதாவது தற்கொலை செய்துகொள் அல்லது சிவப்பு விளக்குப் பகுதிக்குப்போ என்று சொல்லாமல் சொல்கிறது. இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன? பாலியல் ஒடுக்குமுறைகளே சட்டமாக இருக்கின்றன என்பதுதான். பெண்களின் பேராட்டங்களினால் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களும், ஆண்களின் கருணையையும் தயவையும் அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றன என்பதுதான்.

(பிளேவியா அக்னீஸ் எழுதிய சட்டமும் பெண்களின் பாலியல் உரிமைகளும் நூலின் முன்னுரையில் தோழர் கருணா மனோகரன்)

நன்றி* புதிய பெண்ணியம் அக்தோபர் 2006

ஆதிக்க நோக்கும்- மாறிவந்த தீர்ப்பும்--....இராசேந்திரசோழன்

அருந்தகங்களில் மகளிர் நடனமாடுவதைத் தடைசெய்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 15இல் மகாராட்டிர அரசு பிறப்பித்த மும்பை காவல்சட்டத் திருத்தத்தை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஃப்.ஐ.ரிபெல்லோ மற்றும் ஆர். தால்வி ஆகியோர் அளித்துள்ள தீர்ப்பு பெண்ணுரிமை நோக்கில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தொன்றுதொட்டு ஆணாதிக்க கருத்தியலே கோலோச்சிவரும் சமூகத்தின் ஒழுக்கவியல் கோட்பாடுகள், கட்டுத்திட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கே எனவும், பாலியல் சார்ந்த குற்றச் செயல்கள் சமூக சீர்கேடுகள் அனைத்துக்கும் பெண்களே காரணமானவர்கள் என்றும் குற்றம்சாட்டும் போக்கிற்கு பதிலடி தந்து தாங்கள் செய்யும் தொழிலால் களங்கப்படுத்தப்படாமல் கண்ணியமாக வாழ விரும்பும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாகவும் இது அமைந்துள்ளது.

இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்குலக நுழைவாயிலாகத் திகழும் நகரம் மும்பை. இங்குள்ள அருந்தகங்களில் நடனமாடிப் பிழைக்கும் நடன மங்கையர் சுமார் 75000 பேர் உள்ளதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. நடனமாடி, அதில் கிடைக்கும் வருவாயை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

சட்ட ரீதியில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நெடுங்காலமாக நடனமாடிப் பிழைத்துவந்த இவர்கள் வாழ்வில் மண்ணைப்போடும் வகையில் இந்தத் தொழில் ஒழுக்கக்கேட்டையும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளையும் உருவாக்கி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கிறது; பல குடும்பங்களை பேரிழப்புகளுக்கு இட்டுச் செல்கிறது என்று சொல்லி மராட்டிய அரசு இந்நடனங்களைத் தடைசெய்து சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

ஒரு செய்தியாகக் கேட்பதற்கு நல்லதுதானே என்பது போலத் தோன்றும் இத்தகவல் சாதாரணமானதாக எடுத்துக் கொள்ளத்தக்கதல்ல. காரணம், இதன் பின்னே சீரிய சிந்தனைக்கும், தார்மீக நியாயங்களுக்குமான பல கேள்விகள் பொதிந்துள்ளன.

1. அருந்தக நடனங்களைத் தடைசெய்து சட்டத்திருத்தம் கொண்டு வந்த துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீலுக்கு சமுகத்தின் பால் இப்படி ஒரு அக்கறையும் கரிசனமும் திடீரென்று எப்படி வந்தது?

2. நாட்டில் பொது ஒழுங்கைச் சீர் குலைத்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நிகழ்வுகள் பல இருக்க அதையெல்லாம் விட்டு, பெண்கள் தன்காலில் நின்று வாழ நேர்மையான வழியில் பொருளீட்டும் தொழில்களுள் ஒன்றாக விளங்கி வரும் இந்த அருந்தக நடனங்களின் மீது அரசு ஏன் கண் வைக்க வேண்டும்?

நடனமாடும் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இது ஒழுக்கக் கேட்டையும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது என ரெய்காட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேரவையில் பிரச்சினை எழுப்பினார் அதையொட்டியே இந்தத் தடை என்கிறது அரசு.

அருந்தகங்கள் நடத்தும் உரிமையாளர்களோ “அதெல்லாம் ஒன்றுமில்லை. அருந்தகங்களின் உரிமங்களுக்கான காலக்கெடு முடிவடைய இருப்பதையொட்டி அதன் கால நீட்டிப்புக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகியபோது அவர்கள் அருந்தக உரிமையாளர்கள் சார்பில் மொத்தமாய் 12 கோடி ரூபாய் கேட்டார்கள். ஏற்கெனவே அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமத் தொகையையும் கட்டி மாதா மாதம் காவல் துறைக்கும் மாமூல் கப்பம் கட்டி பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் தொழில் நடத்திவரும் நிலையில், இவ்வளவு பெரும் தொகைக்கு நாங்கள் எங்கே போவது என்று எங்கள் இயலாமையைத் தெரிவித்தோம். அதன் விளைவாகவே இந்தத் தடை” என்கிறார்கள்.

இதன் மீது காவல்துறை விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது. விசாரணை நடக்கட்டும். உண்மை எதுவென வெளிவரட்டும். அது நமக்கு மையப்பிரச்சினை இல்லை.

இங்கு நமக்குக் கேள்வி, இப்பெண்கள் நடன மகளிராய் இருப்பதனால்தான் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்களா அல்லது இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட நடன மகளிராய் இருப்பதுதான் காரணமாகிறதா... வேண்டுமானால் இரண்டிற்கும் தொடர்புகள், வாய்ப்புகள் சற்று கூடுதல் என்று சொல்லலாமே தவிர, பாலியல் தொழிலுக்கு நடன மகளிராக இருப்பதுதான் காரணம் என்று சொல்ல முடியுமா? நடன மகளிராய் இருக்கும் பல பெண்கள் கண்ணியம் மிக்க, மதிப்பு மிக்க வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை நடன மகளிராய் அல்லாத சிலரும் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

நடனம் என்பது ஏறக்குறைய எல்லா சமூகங்களிலும் வாழ்வின் பிரிக்க முடியாத அம்சமாக விளங்கி வந்திருக்கிறது. அரசவைகளில் திருக்கோயில்களில் பொது இடங்களில் நடனமாடுவது என்பது இந்தியத் துணைக் கண்டத்துள் உள்ள பல்வேறு தேசிய இனங்களுக்குரிய ஒரு மரபாகவே இருந்து வந்துள்ளது. இறை வழிபாட்டு நோக்கம் கொண்டதாக, அல்லது தங்களைப் புரவும் அரசர்களையோ, செல்வந்தர்களையோ மகிழ்விப்பதாக, பொது மக்களுக்கும் ஒரு பொழுது போக்கு கேளிக்கை நிகழ்வாக பலதரப்பட்டு நடனம் ஒரு பண்பாட்டு நிகழ்வாகவே இருந்து வந்துள்ளது.

காலப் போக்கில் சமூக அமைப்பில், வாழ்முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் பிற பண்பாட்டுத் தாக்கங்கள் அனைத்தும் இந்நாட்டிய மரபிலும் மாற்றங்களை ஏற்படுத்த இன்று இதன் வழி வந்தவர்களோ அல்லது இந்நாட்டியத்தைத் தொழில் முறையாகப் பயின்றவரோ இத்துறையில் ஈடுபட அது பல்வேறு பட்டுக் கிளைத்து இன்று அது அருந்தக நடனங்களாகவும் உருப்பெற்று பலபேரின் பிழைப்புக்கு வழிகோலி வருகிறது.

இந்த நிலையில் இதில் தவறு நிகழ்கிறது என்றால் அந்தத் தவறின் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமேயல்லாது, அந்தத் தொழிலையே தடை செய்வது என்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

ஏராளமான பெண்கள் ‘விளம்பர மாதிரிகளாக’ தோற்றம் தருகிறார்கள். இந்தத் தொழிலில் தவறு நேர்கிறது என்றால் அதற்காக விளம்பர மாதிரிகள் தொழிலையே தடை செய்து விடுவார்களா? திரைப்படங்களில் நடிக்கப்போவதில் தவறு ஏற்படுகிறது என்றால் மகளிர் திரைப்படங்களில் நடிப்பதையே தடை செய்து விடுவார்களா... இப்படிச் செய்தால் இதன் நீட்சி என்ன ஆகும், தொழிற்சாலைகளில், அலுவலகங்களில், பள்ளி, கல்லூரிகளில் ஆண் பெண் சேர்ந்து பணிபுரிவதால், கல்வி பயில்வதால் சில தவறு ஏற்படுகிறது என்பதற்காக, சேர்ந்து பணியாற்றல், சேர்ந்து பயிலுதல் என்பதையே தடைசெய்து விடுவார்களா அல்லது வேலையும் கூடாது படிப்பும் கூடாது பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கட்டும் என்பார்களா.. இப்படிச் செய்தால் இது எப்படிப்பட்ட கொடுமையான பெண்ணடிமைத் தனமாக இருக்கும்.. அது போன்றதொரு கொடுமையைத்தான் செய்திருக்கிறது மராட்டிய அரசு.

சரி. சமூக நலனில் இவ்வளவு அக்கறையோடு இவற்றைத் தடை செய்த அரசு, திடீரென்று இப்படி பணியிழப்புக்கு ஆளாகி வருவாயை இழந்து வறுமையில் வாடும் இப்பெண்களின் மறுவாழ்வுக்கு மாற்று ஏற்பாடுகள் ஏதும் செய்திருக்க வேண்டியதுதானே. முன்னறிவிப்பின்றி அவர்களை நட்டாற்றில் விடுவது போல் விட்டு விடுவதுதான் சமூக அக்கறையா...

தற்போது அப்பெண்களின் நிலை என்ன என்று அரசுக்குத் தெரியுமா...? தடையின் காரணமாக 25 பெண்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். சிலர் நண்பர்களிடமும் அண்டை அயலாரிடமும் கைமாற்று வாங்கி காலத்தை ஓட்டுகிறார்கள். சிலர் கிடைத்த ஊதியத்துக்கு வேறு வேலைகளில் சேர்ந்திருக்கிறார்கள்.

பதன்கோட்டைச் சேர்ந்த ரேகா டேவிட் சௌகான் என்னும் பெண்மணி சொல்கிறார் ‘நான் 13 வயதில் குறுஞ்சட்டை அணிந்த சிறுமியாக மும்பை நகருக்கு வந்தேன். அதிலிருந்து இங்கேயேதான் இருக்கிறேன். என் குடும்பத்தையும் நான்தான் காப்பாற்றி வந்தேன். விபத்தில் இறந்துபோன என் சகோதரியின் குழந்தைகள் இருவரையும் நான்தான் வளர்த்து வருகிறேன். விபரமறியா அக்குழந்தைகள் என்னையே அம்மா என்று அழைத்து வருகின்றன. இப்போது இக்குழந்தைகளையோ, பதன்கோட்டில் உள்ள என் பெற்றோர்களையோ காப்பாற்ற முடியாதவளாக உள்ளேன்.’

ரேகாவின் தோழியும் கணவனால் கைவிடப்பட்ட பெண்மணியுமான 21 வயது சோனியா “என் தாயாரின் மருத்துவச் செலவுக்கும், குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் வழியின்றி தவிக்கிறேன். நான் நடனமாடி வந்தபோது நாளன்றுக்கு 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை சம்பளம் பெற்றேன். தற்போது உணவகத்தில் பணிப்பெண்ணாகப் பணிபுரிகிறேன். தினம் 20 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரைதான் வருவாய் கிடைக்கிறது. உணவகத்திற்குச் சென்று திரும்ப ‘தானி’ கட்டணம் மட்டுமே தினம் 50 ரூபாய் செலவாகிறது. என்ன செய்வதென்று புரியாமலிருக்கிறேன்” என்கிறார்.

தவறான வழியில் வாழ்கிற எல்லா மகளிரும் சொல்லும் கண்ணீர்க் கதைகளைத்தானே இவர்களும் சொல்கிறார்கள் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் சரி, தவறு என்று தீர்மானிப்பது யார் என்பது ஒருபுறமிருக்கட்டும், இவர்களும் மனிதர்கள்தானே, இவர்களுக்கும் தன் மரியாதை கௌரவம் எல்லாம் இருக்கும் என்று எத்தனைபேர் ஏற்றுக் கொள்கிறார்கள்? எல்லோருக்கும் தெரிந்ததெல்லாம் இவர்களைப் பற்றிய இளப்பமான மதிப்பீடும் பார்வைகளும்தான்.

நடனப் பெண் சோனியா சொல்வது “இந்த அருந்தகத்தில் பணியாற்றும் நாங்கள் ஒரு குடும்பம் போல் கண்ணியமாய் வாழ்ந்து வருகிறோம். எங்கள் பணி ஆடுவது மட்டுமே. இதற்கு அப்பால் ஒரு பெண் என்ன செய்கிறாள் என்பது அவளது சொந்த தனிப்பட்ட பிரச்சனை. ஆனால் அரசு இந்தத் தொழிலே ஒழுக்கக் கேடானவர்களின் தொழில் என்பது போல் பார்ப்பதுதான் கொடுமை. எங்களுக்கும் தனி மரியாதை உண்டு. ஒருமுறை நடனமாடி விட்டுத் திரும்பும் போது என் துப்பட்டாவை பிடித்து இழுத்தான் என்பதற்காக ஒருவனை மேசை மீதிருந்த பீர் பாட்டிலாலேயே அடித்துவிட்டேன்” என்கிறார்.

ரேகா கேட்கிறார், “மும்பை சிவப்பு விளக்குப் பகுதி நடவடிக்கைகளையோ, திரைப்பட ஆபாச நடனங்களையோ கள்ளச் சாராய விற்பனையையோ கண்டு கொள்ளாத, கட்டுப்படுத்தாத அரசு எங்களைப் போய் ஏதோ நாங்கள்தான் சட்டம் ஒழுங்கையே சீர்குலைப்பது போல் எங்கள் பிழைப்பில் மண்ணைப் போடுவது ஏன்? உண்மையைச் சொல்வதானால் இந்தத் தடைக்குப் பிறகு தான் பலபேர் விலைமகளிர் தொழிலுக்கு போயிருக்கிறார்கள்” என்கிறார்.

இவர்கள் கூற்றையெல்லாம் முன்வைப்பதால் இந்தத் தொழிலில் வேறு எதுவுமே நடக்கவில்லை, இவர்கள் சொல்வதே உண்மை என்று வாதிடுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தவறு எங்கும், எதிலும் நடக்கலாம்தான். ஆனால் எது நடந்தாலும் நடந்த தவறைத் தான் கண்டிக்க வேண்டுமே தவிர தொழிலையே தடை செய்வது தார்மிக நெறியாகுமா?

பாலியல் ஒழுக்கம் சார்ந்த எந்த சீர்கேடானாலும் எல்லாவற்றுக்கும் பெண்கள் மீதே பழியைப்போட்டு அவர்களையே காரணமாக்குவது என்கிற அணுகுமுறை மராத்திய அரசின் நடவடிக்கையிலும் பிரதிபலித்துள்ளது. இதனால்தான் அருந்தக நடன மகளிர் சங்கம், பெண்ணுரிமை வழக்கறிஞர் வீனாகௌடாவை வைத்து வழக்கு தொடுக்க நீதிமன்றமும் சிறப்புமிக்க இத்தீர்ப்பை அளித்துள்ளது.

தீர்ப்பின் சாரமாக நீதிமன்றம் சொல்வது “நடன மகளிர் அரசின் ஆணைகளுக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருக்க முடியாது. நமது அரசமைப்புச்சட்டம் உறுதிசெய்துள்ள அடிப்படை உரிமைகள் அந்த அளவு ஒன்றும் ஊசலாட்டமானவை அல்ல. உறுதிமிக்க இந்த அடிப்படை உரிமைகள் ஒரு குடிமகன் சட்ட விரோத மற்ற எந்த ஒரு தொழிலையும் செய்து வாழ வகை செய்கிறது. அந்த வகையில் அருந்தகங்களில் நடனமாடி வாழ மகளிருக்கு முழு உரிமை உண்டு. மகளிர் அலுவலக உதவியாளராக, வரவேற்பாளராக, பணிப்பெண்களாக, பல்வேறு துறைகளிலும் ஊழியம் புரிந்து வரும்போது அவர்கள் நடனமகளிராக மட்டும் இருக்கக் கூடாது என்பதில் எந்த நியாயமும் இல்லை. இதில் தவறு ஏதும் நிகழ்கிறது என்றால், பிற எல்லா தொழில்களிலும் நிலவும் தவறுகளைக் களைய நாட்டில் என்ன சட்டங்கள் உண்டோ, அதன் வழி இந்தத் தவறையும் களையலாம். இதற்காக அருந்தக நடனங்களையே தடை செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. இது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது.”

இதனடிப்படையில் அருந்தக நடனங்கள் மீண்டும் இயங்கத் தொடங்க நடன மகளிர் வாழ்வில் மீண்டும் ஒளியேற்றப்பட்டுள்ளது. ஆனால் மராட்டிய அரசுக்கு இது பொறுக்கவில்லை. மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. பொதுவாக அரசுகளின் அணுகுமுறையே மேல்முறையீடு செய்ய வேண்டிய வழக்குகளுக்கு செய்யாமலிருப்பதும், செய்ய அவசியமில்லாத வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்வதுமே வாடிக்கையாக இருந்து வருகிறது. அதுவே இதிலும் நேர்ந்துள்ளது.

தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இதுபோன்ற பிரச்சினைகளில் சட்ட அங்கீகாரத்தை விடவும் சமூக அங்கீகாரமே முக்கியமானதாகப்படுகிறது. இன்று பெண் சார்ந்த உரிமைகளுக்கு எவ்வளவோ சட்ட அங்கீகாரங்கள் இருந்தும் அவற்றுக்கு இன்னும் போதுமான சமூக அங்கீகாரம், அதை ஏற்கும் பக்குவம் இல்லாத நிலையே நீடிக்கிறது.

இன்று பெண்கள் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து பயணிக்கிறார்கள். சாதனை படைத்து மிளிர்கிறார்கள். பெண்கள் இதுவரை புகாத துறைகளிலெல்லாம் புகுந்து பணியாற்றுவதைக் காண, தானி ஓட்டுவது, பேருந்து ஓட்டுவது, உள்ளிட்டு பல்வேறு பணிகளில் ஈடுபடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக பூரிப்பாக இருக்கிறது. இப்படிப்பட்ட பணிகள் பலவற்றிலும் பெண்கள் ஈடுபடுவதும் பெண் விடுதலைக்கான பாதைகளில் ஒன்றே. இப்படி இருக்க பெண்கள் காலம் காலமாக ஈடுபட்டு வந்த ஒரு துறையை, அதிலும் பணிவாய்ப்புகளையும் வாழ்க்கை உத்திரவாதத்தையும் தரும் ஒரு தொழிலை, அதில் கேவலம் எதுவும் இருந்தால் அந்தக் கேவலத்திலிருந்து அவர்களை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டுமே தவிர, அது சார்ந்த மலிவான மதிப்பீடுகளை மாற்ற முனைய வேண்டுமே தவிர அதைவிட்டு, பத்தாம் பசலித்தனமான பிற்போக்கான மதிப்பீடுகளுக்கே நாமும் இரையாகி அதிலேயே உழன்று அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்க முடியாது-கூடாது. இது எந்த வகையிலும் பெண்ணுரிமைக்குரிய சமத்துவ சனநாயகச் சிந்தனையுமாகாது. எனவே, இப்படிப்பட்ட மதிப்பீடுகளிலிருந்து நாம் விடுபட வேண்டும். மற்றவர்களையும் விடுபட வைக்க முனைய வேண்டும்.




Tamil Magazines
on keetru.com






















அருந்தகங்களில் மகளிர் நடனமாடுவதைத் தடைசெய்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 15இல் மகாராட்டிர அரசு பிறப்பித்த மும்பை காவல்சட்டத் திருத்தத்தை ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஃப்.ஐ.ரிபெல்லோ மற்றும் ஆர். தால்வி ஆகியோர் அளித்துள்ள தீர்ப்பு பெண்ணுரிமை நோக்கில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தொன்றுதொட்டு ஆணாதிக்க கருத்தியலே கோலோச்சிவரும் சமூகத்தின் ஒழுக்கவியல் கோட்பாடுகள், கட்டுத்திட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கே எனவும், பாலியல் சார்ந்த குற்றச் செயல்கள் சமூக சீர்கேடுகள் அனைத்துக்கும் பெண்களே காரணமானவர்கள் என்றும் குற்றம்சாட்டும் போக்கிற்கு பதிலடி தந்து தாங்கள் செய்யும் தொழிலால் களங்கப்படுத்தப்படாமல் கண்ணியமாக வாழ விரும்பும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாகவும் இது அமைந்துள்ளது.

இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்குலக நுழைவாயிலாகத் திகழும் நகரம் மும்பை. இங்குள்ள அருந்தகங்களில் நடனமாடிப் பிழைக்கும் நடன மங்கையர் சுமார் 75000 பேர் உள்ளதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. நடனமாடி, அதில் கிடைக்கும் வருவாயை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

சட்ட ரீதியில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நெடுங்காலமாக நடனமாடிப் பிழைத்துவந்த இவர்கள் வாழ்வில் மண்ணைப்போடும் வகையில் இந்தத் தொழில் ஒழுக்கக்கேட்டையும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளையும் உருவாக்கி, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கிறது; பல குடும்பங்களை பேரிழப்புகளுக்கு இட்டுச் செல்கிறது என்று சொல்லி மராட்டிய அரசு இந்நடனங்களைத் தடைசெய்து சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது.

ஒரு செய்தியாகக் கேட்பதற்கு நல்லதுதானே என்பது போலத் தோன்றும் இத்தகவல் சாதாரணமானதாக எடுத்துக் கொள்ளத்தக்கதல்ல. காரணம், இதன் பின்னே சீரிய சிந்தனைக்கும், தார்மீக நியாயங்களுக்குமான பல கேள்விகள் பொதிந்துள்ளன.

1. அருந்தக நடனங்களைத் தடைசெய்து சட்டத்திருத்தம் கொண்டு வந்த துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீலுக்கு சமுகத்தின் பால் இப்படி ஒரு அக்கறையும் கரிசனமும் திடீரென்று எப்படி வந்தது?

2. நாட்டில் பொது ஒழுங்கைச் சீர் குலைத்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் நிகழ்வுகள் பல இருக்க அதையெல்லாம் விட்டு, பெண்கள் தன்காலில் நின்று வாழ நேர்மையான வழியில் பொருளீட்டும் தொழில்களுள் ஒன்றாக விளங்கி வரும் இந்த அருந்தக நடனங்களின் மீது அரசு ஏன் கண் வைக்க வேண்டும்?

நடனமாடும் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இது ஒழுக்கக் கேட்டையும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது என ரெய்காட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேரவையில் பிரச்சினை எழுப்பினார் அதையொட்டியே இந்தத் தடை என்கிறது அரசு.

அருந்தகங்கள் நடத்தும் உரிமையாளர்களோ “அதெல்லாம் ஒன்றுமில்லை. அருந்தகங்களின் உரிமங்களுக்கான காலக்கெடு முடிவடைய இருப்பதையொட்டி அதன் கால நீட்டிப்புக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகியபோது அவர்கள் அருந்தக உரிமையாளர்கள் சார்பில் மொத்தமாய் 12 கோடி ரூபாய் கேட்டார்கள். ஏற்கெனவே அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமத் தொகையையும் கட்டி மாதா மாதம் காவல் துறைக்கும் மாமூல் கப்பம் கட்டி பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் தொழில் நடத்திவரும் நிலையில், இவ்வளவு பெரும் தொகைக்கு நாங்கள் எங்கே போவது என்று எங்கள் இயலாமையைத் தெரிவித்தோம். அதன் விளைவாகவே இந்தத் தடை” என்கிறார்கள்.

இதன் மீது காவல்துறை விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது. விசாரணை நடக்கட்டும். உண்மை எதுவென வெளிவரட்டும். அது நமக்கு மையப்பிரச்சினை இல்லை.

இங்கு நமக்குக் கேள்வி, இப்பெண்கள் நடன மகளிராய் இருப்பதனால்தான் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்களா அல்லது இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட நடன மகளிராய் இருப்பதுதான் காரணமாகிறதா... வேண்டுமானால் இரண்டிற்கும் தொடர்புகள், வாய்ப்புகள் சற்று கூடுதல் என்று சொல்லலாமே தவிர, பாலியல் தொழிலுக்கு நடன மகளிராக இருப்பதுதான் காரணம் என்று சொல்ல முடியுமா? நடன மகளிராய் இருக்கும் பல பெண்கள் கண்ணியம் மிக்க, மதிப்பு மிக்க வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை நடன மகளிராய் அல்லாத சிலரும் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

நடனம் என்பது ஏறக்குறைய எல்லா சமூகங்களிலும் வாழ்வின் பிரிக்க முடியாத அம்சமாக விளங்கி வந்திருக்கிறது. அரசவைகளில் திருக்கோயில்களில் பொது இடங்களில் நடனமாடுவது என்பது இந்தியத் துணைக் கண்டத்துள் உள்ள பல்வேறு தேசிய இனங்களுக்குரிய ஒரு மரபாகவே இருந்து வந்துள்ளது. இறை வழிபாட்டு நோக்கம் கொண்டதாக, அல்லது தங்களைப் புரவும் அரசர்களையோ, செல்வந்தர்களையோ மகிழ்விப்பதாக, பொது மக்களுக்கும் ஒரு பொழுது போக்கு கேளிக்கை நிகழ்வாக பலதரப்பட்டு நடனம் ஒரு பண்பாட்டு நிகழ்வாகவே இருந்து வந்துள்ளது.

காலப் போக்கில் சமூக அமைப்பில், வாழ்முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் பிற பண்பாட்டுத் தாக்கங்கள் அனைத்தும் இந்நாட்டிய மரபிலும் மாற்றங்களை ஏற்படுத்த இன்று இதன் வழி வந்தவர்களோ அல்லது இந்நாட்டியத்தைத் தொழில் முறையாகப் பயின்றவரோ இத்துறையில் ஈடுபட அது பல்வேறு பட்டுக் கிளைத்து இன்று அது அருந்தக நடனங்களாகவும் உருப்பெற்று பலபேரின் பிழைப்புக்கு வழிகோலி வருகிறது.

இந்த நிலையில் இதில் தவறு நிகழ்கிறது என்றால் அந்தத் தவறின் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமேயல்லாது, அந்தத் தொழிலையே தடை செய்வது என்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

ஏராளமான பெண்கள் ‘விளம்பர மாதிரிகளாக’ தோற்றம் தருகிறார்கள். இந்தத் தொழிலில் தவறு நேர்கிறது என்றால் அதற்காக விளம்பர மாதிரிகள் தொழிலையே தடை செய்து விடுவார்களா? திரைப்படங்களில் நடிக்கப்போவதில் தவறு ஏற்படுகிறது என்றால் மகளிர் திரைப்படங்களில் நடிப்பதையே தடை செய்து விடுவார்களா... இப்படிச் செய்தால் இதன் நீட்சி என்ன ஆகும், தொழிற்சாலைகளில், அலுவலகங்களில், பள்ளி, கல்லூரிகளில் ஆண் பெண் சேர்ந்து பணிபுரிவதால், கல்வி பயில்வதால் சில தவறு ஏற்படுகிறது என்பதற்காக, சேர்ந்து பணியாற்றல், சேர்ந்து பயிலுதல் என்பதையே தடைசெய்து விடுவார்களா அல்லது வேலையும் கூடாது படிப்பும் கூடாது பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கட்டும் என்பார்களா.. இப்படிச் செய்தால் இது எப்படிப்பட்ட கொடுமையான பெண்ணடிமைத் தனமாக இருக்கும்.. அது போன்றதொரு கொடுமையைத்தான் செய்திருக்கிறது மராட்டிய அரசு.

சரி. சமூக நலனில் இவ்வளவு அக்கறையோடு இவற்றைத் தடை செய்த அரசு, திடீரென்று இப்படி பணியிழப்புக்கு ஆளாகி வருவாயை இழந்து வறுமையில் வாடும் இப்பெண்களின் மறுவாழ்வுக்கு மாற்று ஏற்பாடுகள் ஏதும் செய்திருக்க வேண்டியதுதானே. முன்னறிவிப்பின்றி அவர்களை நட்டாற்றில் விடுவது போல் விட்டு விடுவதுதான் சமூக அக்கறையா...

தற்போது அப்பெண்களின் நிலை என்ன என்று அரசுக்குத் தெரியுமா...? தடையின் காரணமாக 25 பெண்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். சிலர் நண்பர்களிடமும் அண்டை அயலாரிடமும் கைமாற்று வாங்கி காலத்தை ஓட்டுகிறார்கள். சிலர் கிடைத்த ஊதியத்துக்கு வேறு வேலைகளில் சேர்ந்திருக்கிறார்கள்.

பதன்கோட்டைச் சேர்ந்த ரேகா டேவிட் சௌகான் என்னும் பெண்மணி சொல்கிறார் ‘நான் 13 வயதில் குறுஞ்சட்டை அணிந்த சிறுமியாக மும்பை நகருக்கு வந்தேன். அதிலிருந்து இங்கேயேதான் இருக்கிறேன். என் குடும்பத்தையும் நான்தான் காப்பாற்றி வந்தேன். விபத்தில் இறந்துபோன என் சகோதரியின் குழந்தைகள் இருவரையும் நான்தான் வளர்த்து வருகிறேன். விபரமறியா அக்குழந்தைகள் என்னையே அம்மா என்று அழைத்து வருகின்றன. இப்போது இக்குழந்தைகளையோ, பதன்கோட்டில் உள்ள என் பெற்றோர்களையோ காப்பாற்ற முடியாதவளாக உள்ளேன்.’

ரேகாவின் தோழியும் கணவனால் கைவிடப்பட்ட பெண்மணியுமான 21 வயது சோனியா “என் தாயாரின் மருத்துவச் செலவுக்கும், குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் வழியின்றி தவிக்கிறேன். நான் நடனமாடி வந்தபோது நாளன்றுக்கு 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை சம்பளம் பெற்றேன். தற்போது உணவகத்தில் பணிப்பெண்ணாகப் பணிபுரிகிறேன். தினம் 20 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரைதான் வருவாய் கிடைக்கிறது. உணவகத்திற்குச் சென்று திரும்ப ‘தானி’ கட்டணம் மட்டுமே தினம் 50 ரூபாய் செலவாகிறது. என்ன செய்வதென்று புரியாமலிருக்கிறேன்” என்கிறார்.

தவறான வழியில் வாழ்கிற எல்லா மகளிரும் சொல்லும் கண்ணீர்க் கதைகளைத்தானே இவர்களும் சொல்கிறார்கள் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் சரி, தவறு என்று தீர்மானிப்பது யார் என்பது ஒருபுறமிருக்கட்டும், இவர்களும் மனிதர்கள்தானே, இவர்களுக்கும் தன் மரியாதை கௌரவம் எல்லாம் இருக்கும் என்று எத்தனைபேர் ஏற்றுக் கொள்கிறார்கள்? எல்லோருக்கும் தெரிந்ததெல்லாம் இவர்களைப் பற்றிய இளப்பமான மதிப்பீடும் பார்வைகளும்தான்.

நடனப் பெண் சோனியா சொல்வது “இந்த அருந்தகத்தில் பணியாற்றும் நாங்கள் ஒரு குடும்பம் போல் கண்ணியமாய் வாழ்ந்து வருகிறோம். எங்கள் பணி ஆடுவது மட்டுமே. இதற்கு அப்பால் ஒரு பெண் என்ன செய்கிறாள் என்பது அவளது சொந்த தனிப்பட்ட பிரச்சனை. ஆனால் அரசு இந்தத் தொழிலே ஒழுக்கக் கேடானவர்களின் தொழில் என்பது போல் பார்ப்பதுதான் கொடுமை. எங்களுக்கும் தனி மரியாதை உண்டு. ஒருமுறை நடனமாடி விட்டுத் திரும்பும் போது என் துப்பட்டாவை பிடித்து இழுத்தான் என்பதற்காக ஒருவனை மேசை மீதிருந்த பீர் பாட்டிலாலேயே அடித்துவிட்டேன்” என்கிறார்.

ரேகா கேட்கிறார், “மும்பை சிவப்பு விளக்குப் பகுதி நடவடிக்கைகளையோ, திரைப்பட ஆபாச நடனங்களையோ கள்ளச் சாராய விற்பனையையோ கண்டு கொள்ளாத, கட்டுப்படுத்தாத அரசு எங்களைப் போய் ஏதோ நாங்கள்தான் சட்டம் ஒழுங்கையே சீர்குலைப்பது போல் எங்கள் பிழைப்பில் மண்ணைப் போடுவது ஏன்? உண்மையைச் சொல்வதானால் இந்தத் தடைக்குப் பிறகு தான் பலபேர் விலைமகளிர் தொழிலுக்கு போயிருக்கிறார்கள்” என்கிறார்.

இவர்கள் கூற்றையெல்லாம் முன்வைப்பதால் இந்தத் தொழிலில் வேறு எதுவுமே நடக்கவில்லை, இவர்கள் சொல்வதே உண்மை என்று வாதிடுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தவறு எங்கும், எதிலும் நடக்கலாம்தான். ஆனால் எது நடந்தாலும் நடந்த தவறைத் தான் கண்டிக்க வேண்டுமே தவிர தொழிலையே தடை செய்வது தார்மிக நெறியாகுமா?

பாலியல் ஒழுக்கம் சார்ந்த எந்த சீர்கேடானாலும் எல்லாவற்றுக்கும் பெண்கள் மீதே பழியைப்போட்டு அவர்களையே காரணமாக்குவது என்கிற அணுகுமுறை மராத்திய அரசின் நடவடிக்கையிலும் பிரதிபலித்துள்ளது. இதனால்தான் அருந்தக நடன மகளிர் சங்கம், பெண்ணுரிமை வழக்கறிஞர் வீனாகௌடாவை வைத்து வழக்கு தொடுக்க நீதிமன்றமும் சிறப்புமிக்க இத்தீர்ப்பை அளித்துள்ளது.

தீர்ப்பின் சாரமாக நீதிமன்றம் சொல்வது “நடன மகளிர் அரசின் ஆணைகளுக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருக்க முடியாது. நமது அரசமைப்புச்சட்டம் உறுதிசெய்துள்ள அடிப்படை உரிமைகள் அந்த அளவு ஒன்றும் ஊசலாட்டமானவை அல்ல. உறுதிமிக்க இந்த அடிப்படை உரிமைகள் ஒரு குடிமகன் சட்ட விரோத மற்ற எந்த ஒரு தொழிலையும் செய்து வாழ வகை செய்கிறது. அந்த வகையில் அருந்தகங்களில் நடனமாடி வாழ மகளிருக்கு முழு உரிமை உண்டு. மகளிர் அலுவலக உதவியாளராக, வரவேற்பாளராக, பணிப்பெண்களாக, பல்வேறு துறைகளிலும் ஊழியம் புரிந்து வரும்போது அவர்கள் நடனமகளிராக மட்டும் இருக்கக் கூடாது என்பதில் எந்த நியாயமும் இல்லை. இதில் தவறு ஏதும் நிகழ்கிறது என்றால், பிற எல்லா தொழில்களிலும் நிலவும் தவறுகளைக் களைய நாட்டில் என்ன சட்டங்கள் உண்டோ, அதன் வழி இந்தத் தவறையும் களையலாம். இதற்காக அருந்தக நடனங்களையே தடை செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. இது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது.”

இதனடிப்படையில் அருந்தக நடனங்கள் மீண்டும் இயங்கத் தொடங்க நடன மகளிர் வாழ்வில் மீண்டும் ஒளியேற்றப்பட்டுள்ளது. ஆனால் மராட்டிய அரசுக்கு இது பொறுக்கவில்லை. மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. பொதுவாக அரசுகளின் அணுகுமுறையே மேல்முறையீடு செய்ய வேண்டிய வழக்குகளுக்கு செய்யாமலிருப்பதும், செய்ய அவசியமில்லாத வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்வதுமே வாடிக்கையாக இருந்து வருகிறது. அதுவே இதிலும் நேர்ந்துள்ளது.

தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இதுபோன்ற பிரச்சினைகளில் சட்ட அங்கீகாரத்தை விடவும் சமூக அங்கீகாரமே முக்கியமானதாகப்படுகிறது. இன்று பெண் சார்ந்த உரிமைகளுக்கு எவ்வளவோ சட்ட அங்கீகாரங்கள் இருந்தும் அவற்றுக்கு இன்னும் போதுமான சமூக அங்கீகாரம், அதை ஏற்கும் பக்குவம் இல்லாத நிலையே நீடிக்கிறது.

இன்று பெண்கள் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து பயணிக்கிறார்கள். சாதனை படைத்து மிளிர்கிறார்கள். பெண்கள் இதுவரை புகாத துறைகளிலெல்லாம் புகுந்து பணியாற்றுவதைக் காண, தானி ஓட்டுவது, பேருந்து ஓட்டுவது, உள்ளிட்டு பல்வேறு பணிகளில் ஈடுபடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக பூரிப்பாக இருக்கிறது. இப்படிப்பட்ட பணிகள் பலவற்றிலும் பெண்கள் ஈடுபடுவதும் பெண் விடுதலைக்கான பாதைகளில் ஒன்றே. இப்படி இருக்க பெண்கள் காலம் காலமாக ஈடுபட்டு வந்த ஒரு துறையை, அதிலும் பணிவாய்ப்புகளையும் வாழ்க்கை உத்திரவாதத்தையும் தரும் ஒரு தொழிலை, அதில் கேவலம் எதுவும் இருந்தால் அந்தக் கேவலத்திலிருந்து அவர்களை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டுமே தவிர, அது சார்ந்த மலிவான மதிப்பீடுகளை மாற்ற முனைய வேண்டுமே தவிர அதைவிட்டு, பத்தாம் பசலித்தனமான பிற்போக்கான மதிப்பீடுகளுக்கே நாமும் இரையாகி அதிலேயே உழன்று அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்க முடியாது-கூடாது. இது எந்த வகையிலும் பெண்ணுரிமைக்குரிய சமத்துவ சனநாயகச் சிந்தனையுமாகாது. எனவே, இப்படிப்பட்ட மதிப்பீடுகளிலிருந்து நாம் விடுபட வேண்டும். மற்றவர்களையும் விடுபட வைக்க முனைய வேண்டும்.


நன்றி* புதிய பெண்ணியம் அக்தோபர் 2006

தாலி என்னும் மோசடி - வி.சி.வில்வம்

பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணத்தில் ‘தாலி’ என்கிற அடிமைச் சின்னம் கிடையாது. பண்டையத் தமிழர் திருமணங்களிலும் தாலி என்பது இல்லை. இடையில் ஏற்பட்ட தவறான பழக்கமே இது. தாலி கட்டுவதன் அவசியத்தை பழமைவாதிகளே உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

தாலி என்பது புனிதச் சின்னம். ஒரு பெண்ணுக்குத் திருமணம் முடிந்துவிட்டது என்பதற்கான அடையாளம். தாலி என்பது பெண்ணுக்குப் பாதுகாப்பு என்பதும் அவர்களின் வாதம்.

தாலி என்பது அடிமைச் சின்னமே தவிர வேறல்ல. ஐம்பது காசு மதிக்கத்தக்க மஞ்சள் கயிறும் ஐந்து கிராம் தங்கத்தையும் தவிர அதில் வேறெதுவும் கிடையாது. அந்தத் தாலி எந்தவிதத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பைத் தருகிறது என்பது புரியாததாகவே இருக்கிறது.

சாலையில் செல்லும்போது கழுத்தில் தாலி உள்ளவர்களை எல்லாம் கிண்டல் செய்யாமல் இருக்கிறார்களா? இருபொருள் படப் பேசாமலிருக்கிறார்களா? அல்லது பாலியல் வன்முறைக்கும் பாலுறவு வன்கொடுமைக்கும் அவர்களை ஆட்படுத்தாமல் இருக்கிறார்களா? இவற்றிற்கெல்லாம் பழமைவாதிகளின் பதில் என்ன?

தாலி அணிவது ஒழுக்கத்தின் சின்னம் என்று சொன்னால் வெளிநாடுகளில் தாலி என்பதே கிடையாது. தாலி அணியாத அப்பெண்கள் ஒழுக்கம் இல்லாதவர்களா? இன்னும் சொல்லப் போனால், வெளிநாடுகளில் இரவு நேரங்களில் பெண்கள் தனிமையில் சென்று வரக்கூடிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தப் புண்ணிய(?) பூமியில் அந்தப் புனிதச் சின்னத்தைக் கழுத்தில் மாட்டிக் கொண்டாலும் சரி, எங்குமே அப்பெண்கள் தனியே சென்றுவர முடியாது என்பதுதான் சோகம். சமயங்களில் புனிதம் என்றும் பாதுகாப்பு என்றும் கருதப்படுகிற அந்த ‘அடிமைச் சின்னத்தையே’ கொள்ளையடித்துப் போய்விடும் நிகழ்ச்சிகள் தான் ஏராளமாக நடக்கின்றன. பிறகென்ன புனிதம் என்றும் பாதுகாப்பு என்று பசப்பு வசனங்கள்?
தாலி என்பது அடங்கிப் போவதற்கும், அச்ச மூட்டுவதற்கும், அடிமைப்படுத்துவதற்குமேயன்றி வேறெதற்கும் இல்லை. திருமணம் ஆனதற்கு ‘தாலி’தான் பெண்களின் அடையாளம் எனில், ஆண்களுக்கு என்ன அடையாளம் இருக்கிறது?

கணவனை இழந்த பெண்களுக்கு வெள்ளைச் சேலை உடுத்தி, பூ, பொட்டை மறுத்து, ‘விதவை’ என்னும் பெயர்சூட்டி வெளியில் போய்வர அனுமதி மறுக்கிறோம். ‘முண்டச்சி’ என்கிற கொச்சைத் தன்மான பட்டத்தைக் கொடுத்து அவர்களைக் காண்பதே அபசகுனம் என்கிறது மூடத்தனத்தில் ஊறிய சமூகம். இதேபோன்று மனைவியை இழந்த ஆண்களுக்கு ஏதாவது பெயர் இருக்கிறதா? மேற்குறிப்பிட்டது போன்று கொடுமைகள் நிகழ்கிறதா?

ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி நியாயம். இதென்ன அநியாயம்? கணவன் இறந்தால் தாலியைக் கழற்ற மாட்டார்கள்- அறுத்தெறிவார்கள். பொட்டை அழிப்பார்கள்; பூவை இழுப்பார்கள்; வளையலை உடைப்பார்கள். கணவன் இறந்து போன வேதனையில் இருக்கும் பெண்ணை அலங்கோலப்படுத்தி துன்புறுத்திக் கொடுமை செய்வார்கள். காட்டுமிராண்டிக் காலத்தில் செய்துவந்த பழக்கங்களைக் கணினிமயக் காலத்திலும் செய்கிற பைத்தியக்கார மனிதர்கள்.

எந்தத் தாலியைப் புனிதம், அடையாளம், பாதுகாப்பு என்று கருதி வந்தார்களோ அந்தத் தாலியையே அறுத்தெறிவதற்கும் காரணம் என்ன? கணவன் இருக்கும் வரை சுமப்பது இறந்த பின் அறுப்பது. ஆக அந்தப் பெண் கணவனைச் சார்ந்து வாழவே பயிற்றுவிக்கப்படுகிறாள். கணவன் இறந்த பிறகு அப்பெண்ணுக்கு எதுவுமே இருக்கக் கூடாது. அழகான பெண்ணை அலங்கோலமாக்கி மூலையில் அமரச் செய்து விடுவார்கள். அப்பெண் யார்மீதும் ஆசை வைத்து விடக்கூடாது; அப்பெண்ணின் மீதும் யாரும் ஆசை வைத்து விடக் கூடாது. அவளது இன்ப வாழ்க்கை முடிவடைந்தது என்பதற்கான ஏற்பாடே இது.

இம்மூடத்தனமான ஏற்பாடுகளை முறியடிக்கத் தமிழ்ப் பெண்கள் அணி திரள வேண்டும்.

நன்றி ‘நாளை விடியும்’


நன்றி* புதிய பெண்ணியம் அக்தோபர் 2006

பெரியாரியப் பெண்ணியமும் மணியம்மையும் -ருத்ரன்

‘பெரியார் திரைப்படம் : ஒரு பெரியாரியப் பார்வை' என்னும் எனது நூலின் மீதான தோழர் முழுமதியின் திறனாய்வு, ‘‘ஒரு பெரியாரியப் பெண்ணியப் பார்வை'' என்னும் தலைப்பில், கடந்த இதழில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

நூலில் இடம்பெற்ற, ‘பெரியார்' திரைப்படம் குறித்த எனது விமர்சனங்களை ஏற்றுக் கொண்ட அத்திறனாய்வு, பெரியாரியச் சிந்தனையாளர்களுக்கு அவசியமான நூலென பரிந்துரை செய்திருந்தது. இதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், திறனாய்வின் மய்யப்புள்ளியான மணியம்மை குறித்த கருத்துக்கள் பற்றி, எனது கருத்துக்களைப் பதிவு செய்தாக வேண்டும்.

மணியம்மையின் பெருமைகளாக, ‘23 வயதில் பெரியாரின் தொண்டர் ஆனவர் ; ‘மிசா' காலத்தில் அமைப்புக்குத் தலைமைத் தாங்கியவர் ; மனோபலமும் கொள்கைப் பிடிப்பும் கொண்டவர் ; சாதி ஒழிப்பு, தமிழ்மொழி உரிமை, ‘இராவணலீலா', இந்திரா காந்திக்குக் கருப்புக் கொடி ஆகிய போராட்டங்களை நடத்தி கைதானவர்'' என்று எழுதி, மணியம்மையை, ‘‘மகத்துவம் வாய்ந்த பெண்மணியாக'' அறிவிக்கும் தோழர் முழுமதி, தலித் தோழரின் மாட்டுக் கொட்டகையின் சாண நாற்றத்தை சகித்துக் கொள்ளத் தேவையற்ற மேட்டுக்குடிப் பெண்ணாகவும், உடல் வேட்கையை முதன்மைப்படுத்திக் கொள்ளும் சராசரிப் பெண்ணாகவும் அடையாளப்படுத்துவது முரண்பாடானதாகும்.

இந்த சுய முரண்பாடு, தோழர் முழுமதி, தனது திறனாய்விற்கு அடிப்படையாகக் கொண்ட கருத்தியலிலிருந்து உருவாகியிருக்கிறது. அவர், மணியம்மையை அரசியல் ரீதியாக அணுகாமல், தனிமனித உணர்வு ரீதியாக அணுகியிருக்கிறார். எனவே, திறனாய்வுக்கான தளம் மாறுபட்டதால், அதன் வழி பெறப்பட்ட முடிவுகளும் அவ்வாறே அமைந்திருப்பதில் ஆச்சரியமில்லை.

இதற்கு, ‘‘மணியம்மையாரின் உணர்வு ரீதியிலான பிழையினை முப்பதாண்டுகள் கழித்தும் மறக்க முடியவில்லை என்பதை என்னவென்று சொல்வது? எப்படித்தான் ஏற்பது?'' என்னும் தோழர் முழுமதியின் வினாக்களையே சான்றாகக் கொள்ளலாம்.

தோழர் முழுமதியின் கருத்துப்படி இத்தகையப் புரிதலுக்கு வரலாம்: 23 வயதில் பெரியார் தொண்டராகி, ஆறு ஆண்டுகளுக்குள் பெரியாரின் நம்பிக்கையைப் பெற்ற மணியம்மை, 1949ல் பெரியாரை மணந்துகொண்டு பல வருடங்கள் ஆன நிலையில், கிராமச் சூழலுக்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்ள முடியவில்லை அல்லது தேவையில்லை; தலித் விவசாயக் கூலியின் வாழ்நிலையை உள்வாங்கிக் கொள்ளவும் இயலவில்லை அல்லது அவசியமில்லை!

ஆனால், திரைப்படக் காட்சி, ஒரு கற்பனைக் காட்சி என்று விளக்கவும், அக்காட்சி அமைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை என்று உணர்த்தவும், காட்சியை முன்வைத்து எழுதப்பட்ட நூலின் கருத்துக்களில், மணியம்மை மீது திரைப்படக்காட்சி கடந்த விமர்சனம் எதுவும் இடம்பெறவில்லை. இருப்பினும், ‘‘மணியம்மையாரைச் சாடித் தீர்க்கிறார்'' என்னும் தோழர் முழுமதியின் குற்றச்சாட்டிலிருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை.

ஏனெனில், ‘பெரியார்' திரைப்படம் மற்றும் எனது நூல் ஆகிய இரண்டு பரப்புகளுக்கும் அப்பால், தோழர் முழுமதியின் திறனாய்வுப் பரப்பு விரிகிறது. அதற்குக் காரணமாக, ‘‘மணியம்மையார் மதிப்பிற்குரியவர், போற்றுதலுக்குரியவர் என்பதில் நமக்கு அன்றும் இன்றும் ஏன் என்றுமே மாற்றுக்கருத்து வருவதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை'' என்னும் அவரது உறுதியான முன்முடிவு செயலாற்றுகிறது.

அதனால்தான், உழைக்கும் மக்களின் வறுமை, வியர்வை, சுகாதாரமற்ற, வாழ்நிலை போன்றவற்றை மணியம்மை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்னும் கொள்கை சார்ந்த எனது விமர்சனத்தை, குளிப்பது, சுத்தமான ஆடை அணிவது, முகம் கழுவுவது ஆகிய அன்றாட வெளித்தூய்மை செயல்களோடு ஒப்பிடுகிறார், தோழர் முழுமதி.

தனது நிலைப்பாட்டிற்கு எதிராக இயங்கிய, பெரியாருக்கு நெருக்கமான இரண்டாம் நிலைத் தலைவர்களை, பெரியார் மூலமாகவே படிப்படியாகக் கழகத்தைவிட்டு மணியம்மை நீக்கியதையும், பெரியாரின் மரணத்துக்குப் பிறகு அத்தகைய செயற்பாடு தீவிரமடைந்ததையும் வரலாறு சொல்கிறது. இவ்வாறு, பெரியார் இயக்கத்தை அழித்த துரோக வரலாற்றை அம்பலப்படுத்தும் முகமாக, தோழர் வே.ஆனைமுத்து எழுதி 1.1.1997ல் பெரியார் நூல் வெளியீட்டகத்தாரால் பதிப்பிக்கப்பட்ட, ‘தந்தை பெரியார் மறைவுக்குப்பின் பெரியார் கொள்கைகளுக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம் : அசைக்க முடியாத வரலாற்று ஆவணச் சான்றுகளுடன்' என்னும் நூலிலிருந்து சில மேற்கோள்கள் எனது நூலில் எடுத்தாளப்பட்டன.

மேலும், அந்த விமர்சனத்தின் இறுதியில், ‘‘வே.ஆனைமுத்துவின் கருத்துக்கள் பெரியாருடன் மணியம்மை மற்றும் வீரமணி ஆகியவர்கள் பழகிய விதத்தினையும் அதனால் பெரியார் பட்ட பாட்டினையும் சான்றுகளாக முன்வைத்துள்ளன'' (பக்கம்-48) எனவும் எழுதப்பட்டது.

ஆனால், ‘‘தன்னை விடவும் வயதில் 42 ஆண்டுகள் பெரியவரான ஒரு முதியவரைக் கொள்கை வேகத்தோடு கைப்பிடிக்கும் ஓர் இளம்பெண் காலம் முழுதும் ஆண்வாடையே படாமல் இருந்திருக்க வேண்டும்'' என்று எனது நூல் வலியுறுத்து வதாக தோழர் முழுமதி சொல்கிறார். இது, முழுமையைப் பார்க்காமல் பகுதியைப் பார்க்கும் போக்காகும்.

ஆகவேதான், ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தின் வீழ்ச்சி பற்றி அக்கறையோடு ஆய்வுக்குட்படுத்தும் எனது எழுத்துக்களை, மணியம்மை என்னும் பெண்ணின் தனிமனித உணர்வுகள், முக்கியமாக பாலுணர்வு மீதான, ‘‘ஒற்றைச் சார்புப் பார்வை'' என்பதாக தோழர் முழுமதி புரிந்துகொள்கிறார். அதனால்தான், மணியம்மையின் அரசியல் பிழைகளையும், அவரது நடவடிக்கைகளால் பெரியார் இயக்கத்துக்கு ஏற்பட்ட பின்னடைவையும் கணக்கில் கொள்ளாமல், அவரது உடல் வேட்கையை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று தோழர் முழுமதி கருதுகிறார்.

அதன் தொடர்ச்சியாக, எந்தவொரு தனிமனிதரை விடவும் இயக்கம் பெரிது என்னும் புரிதலிலிருந்து எழுதப்பட்ட எனது கருத்துக்களை, ‘‘மணியம்மையாரின் குணாதிசயத்தையும், மேன்மையையும், ஒழுக்கத்தையும் கேள்விக்குட்படுத்தி அசிங்கப் படுத்துவது தேவையற்றது'' என தோழர் முழுமதி விமர்சிக்கிறார்.

ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதாகத் திராவிடர் கழகம் தடம் மாறியதையும், சமூகப் பணிகளுக்காக பெரியாரால் திரட்டப்பட்ட சொத்துக்கள் சுயநல வெறியர்களின் கைகளில் சிக்கி, ஆடம்பரங்களாக அணிவகுப்பதையும் நடுநிலையோடு திறனாய்வு செய்யும் எவரும், மணியம்மையைக் கேள்விக்குட்படுத்துவதைத் தவிர்க்க முடியாது.

இங்கே, பெண்ணா? ஆணா? என்பது முக்கியமல்ல ; பொதுநலனா? தன்னலனா? என்பதே முக்கியமாகும். மட்டுமின்றி, மணியம்மை ஒரு இளம்பெண் என்பதால் அவரது சுயஉணர்வுகளின் அடிப்படையில் விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதானது, அனுதாபத்தைக் கோரும் பெண்ணடிமைத் தனப்பண்புக் கூறேயாகும்.

ஆகவே, கட்டுப்பாடற்ற பாலுறவு உரிமைதான் பெண் விடுதலை என கருதிக்கொண்டு, பெண் உடல் மொழி என்னும் ஆபாசங்களைக் கவிதைகளாக எழுதிவரும் நவீன பெண் கவிஞர்கள் சிலரைப் போன்று, பெண்ணியத்தைச் சுருக்கிப் பார்க்கவும் கொச்சைப்படுத்தவும் முடியாது. ஏனெனில், ‘‘கண்டதே காட்சி கொண்டதே கோலம் எனும் பொறுப்பற்ற வாழ்முறை கொண்ட ஆண்களை'' எதிர்த்துப் போராடி, அவ்வாழ் முறையை மாற்றுவதுதான் பெண்ணியக் கருத்தியலே தவிர, அதே சீரழிந்த வாழ்முறையில் பெண்களையும் விழச் செய்வதல்ல.

ஒரு பெண்ணின் பாலியல் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்னும் கருத்தின் அடிப்படையில், மணியம்மையின் பாலுணர்வுக்கு மதிப்பளித்தாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில், ஒரு மக்கள் தலைவரின் மனைவியாக அறியப்பட்டவர் மணியம்மை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதனால், பெண்ணியத்தைக் கவுரவப்படுத்துகிற முறையிலும், பெண்விடுதலையை முன்நகர்த்தும் வகையிலும் மணியம்மை போன்றவர்களின் பாலுணர்வு செயற்பாடுகள் அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஏனெனில், சமூகத்திற்கு முன்னுதாரணமாக வாழ முன்வந்தவர்கள், கள்ளத் தனத்தைக் கடைப்பிடிக்கக் கூடாது.

ஆகவே, மணியம்மை, தனது இயற்கையான பாலியல் உணர்வுக்காக, கண்ணியமான-நேர்மையான வழிகளைக் கண்டிருக்க வேண்டும். அதற்கு, தமிழ்ச் சமூகத்தின் இணையற்ற பெண்விடுதலைப் போராளியான பெரியார் அனுமதி வழங்கியிருப்பார் என்பதை மறுக்க முடியாது. ஆனால், பெரியாருக்குப் பிறகு, தனது தலைமைக்கான முன்னுரிமைக்கான எவ்வித பாதிப்பும் நேர்ந்துவிடக் கூடாது என்பதே மணியம்மையின் பிரதான திட்டமாக இருந்தது.

அதன் பொருட்டு, அரசியலிலும் தனிவாழ்க்கையிலும் தனது பொருந்தா செயற் பாடுகளை எதிர்த்தவர்களையும், தான் தலைமை ஏற்பதற்குத் தடையாக இருப்பார்கள் எனக் கருதியவர்களையும் திட்டமிட்டு தி.க.விலிருந்து நீக்கியது மட்டுமின்றி, அந்த முன்னுரிமையை இழக்காத வகையில் எச்சரிக்கையாக நடந்து கொண்டார், மணியம்மை. எனவே, மணியம்மையின் பாலியல் உணர்வு பற்றிப் பேசுமபோது, அவரது அரசியல் லட்சியத்தையும் இணைத்தே பார்க்க வேண்டும். அப்போதுதான் அவரது உணர்வுகளை அவரே கேவலப்படுத்திக் கொண்ட உண்மையைப் புரிந்துகொள்ள முடியும்.

தோழர் வே.ஆனைமுத்துவின் நூல் குறித்து, ‘‘இவ்வாறெல்லாம் செய்திகளை இறைத்து நூல் ஒன்றை உருவாக்கி இருப்பது, புதியதோர் அமைப்பினைத் தொடங்குவதற்கும், அதற்கு வலு சேர்ப்பதற்கும் மிகவும் தேவையான ஒன்று என ஆனைமுத்து அவர்கள் கருதி இருக்கக் கூடும்'' என்கிறார், தோழர் முழுமதி. ஆனால், உண்மை வேறுவிதமாக இருக்கிறது.

16-11-1975ல் தி.க.விலிருந்து நீக்கப்பட்ட வே.ஆனைமுத்து, 8-8-1976ல் உருவாக்கிய பெரியார் சமஉரிமைக்கழகம் என்பதே, காலப்போக்கில் மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியாகப் பரிணமித்தது. அதன் பிறகே, ‘பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்' நூல் 1997ல் அதாவது, தனிக்கட்சி தொடங்கப்பட்டு ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பின்பே வெளியிடப்பட்டது.

எனவே, அந்நூல் வெளியிடப்பட்டதன் நோக்கம், ‘‘புதியதோர் அமைப்பினைத் தொடங்குவதற்கும், அதற்கு வலு சேர்ப்பதற்கும்'' அல்ல என்பதும், மாறாக, மணியம்மை மற்றும் வீரமணியின் பெரியாரிய எதிர் அரசியலைப் புதிய தலைமுறைக்குச் சொல்லி விழிப் புணர்வூட்ட வேண்டும் என்பதேயாகும் எனவும் தெளிவாகிறது.

எனவே, தோழர் வே.ஆனைமுத்துவின் நூலில் உள்ள கருத்துக்கள், தோழர் முழுமதி சொல்வதைப் போன்று ‘‘அய்யா ஆனைமுத்துவின் அக்கால ஊகங்கள்'' அல்ல ; ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் தமிழக வரலாறு என்பதே உண்மையாகும். அதனால்தான், அந்நூலினை, வீரமணி குழுவினரால் இன்றுவரை மறுக்க முடியவில்லை.

மேலும், மணியம்மை மீதான எனது விமர்சனங்களுக்கு, தோழர் வே.ஆனைமுத்து மற்றும் தோழர் நாத்திகம் ராமசாமி ஆகியவர்களையே, ‘‘முழுமையாகச் சார்ந்திருக்கிறேன்'' என்பது தோழர் முழுமதியின், ‘‘சோகம்''. அதனால்தான், ‘‘காலச் சூழலுக்கேற்ற கருத்துக்களின் போதாமையினால் தோழருக்கு சறுக்கல் நிகழ்ந்திருக்கிறது'' என்னும் முடிவுக்கு வருகிறார்.

ஆனால், காலத்திற்கேற்றவாறு கருத்துக்கள் மாறலாம் ; கடந்தகால வரலாற்று நிகழ்வுகள் மாறாது என்பதைத் தோழர் முழுமதி உணரவில்லை. மட்டுமின்றி, அவரே, ‘‘இருபெரும் பெரியாரியத் தொண்டர்கள்'' என்று அடைமொழியிடும் இருவரிடமிருந்தும், மணியம்மைக் குறித்த செய்திகளைப் பெறுவதும், நம்பகத் தன்மையுடன் அவைகளைச் சார்ந்திருப்பதும் பொருத்தமானது தானே!

கடந்த ஆண்டு நடைபெற்ற தோழர் நாத்திகம் ராமசாமியின் மகன் திருமண அழைப்பிதழில் அவரது சாதிப்பெயர் அச்சிடப்பட்டிருந்தது என்னும் செய்தியை, இப்போதுதான் தோழர் முழுமதியின் வழி அறிகிறேன். அது உண்மையாக இருக்குமேயானால், அச்செயல் விமர்சிக்கத்தக்கதே! ஆனால், அதற்காக, தோழர் நாத்திகம் ராமசாமி பதிவு செய்யும் மணியம்மை மற்றும் வீரமணி குறித்த நினைவுக் குறிப்புகளையும், பெரியார் வரலாற்றினையும், பெரியாரியக் கருத்துக்களையும் புறக்கணித்து விட முடியாது. தோழர் முழுமதி சொல்வதைப் போன்று, ‘‘எப்போதுமே நாம் முழுமையான மனிதர்கள்'' என்கிற கனவுலகு எதிர்பார்ப்புகளைச் சுமந்தது கிடையாது''.

இறுதியாக, பெரியாரியப் பெண்ணியப் பார்வை என்பது, பெண்களின் அகஉணர்வுகளுக்கு அங்கீகாரம் அளிப்பது மட்டுமல்ல; அனைத்து அடிமைச் சிந்தனைகள் மற்றும் ஆதிக்க அடக்குமுறைகள் ஆகியவைகளிலிருந்து விடுதலைப்படுத்துவது மாகும். மட்டுமின்றி, பெண்களின் முன்னுள்ள சமூகக் கடமை களையும், அவைகளை நிறைவேற்றுவதற்கான பல்வேறு தியாகங்களையும் அறிவுறுத்துவதுமாகும்.

எனவே, மக்கள் விடுதலைக்கான போராட்டக் களத்தில், உயிர், உடலுறுப்புகள், உடைமைகள், வாழ்க்கை, உறவுகள் ஆகியவற்றைத் தியாகம் செய்வதைப் போன்றே, பாலுணர்வை புறந்தள்ளிவிட்டு பயணப்பட்ட எண்ணிறைந்த பெண்களும் ஆண்களும் நேற்றும் இருந்தனர் ; நாளையும் இருப்பர்.

இந்நிலையில், பாலுணர்வின் அடிப்படையில் பெண்களின் மீது பரிவு காட்டப்பட வேண்டும் என்று சொல்வது, பெண்கள் பலவீனமானவர்கள் என்று கருதி, பெண்களை இழிவு படுத்துவதாகும் ; பெரியாரியத்திற்கு எதிரானதாகும் ; பெண் விடுதலை உள்ளிட்ட மானுட விடுதலைக்காகப் போராடும் பெண் போராளிகளைக் கொச்சைப்படுத்துவதாகும்.

சுருக்கமாக, மனித இனத்தில் பாலுறவு தவிர்க்க முடியாதது என்பதைப் போலவே, அதற்கான கட்டுப்பாடுகளும் சமூக ஒழுங்குகளும் அவசியமாகும். இது, மணியம்மை உள்ளிட்ட அனைத்து பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொருந்தக் கூடியதே!


நன்றி* புதிய பெண்ணியம் பிப்பிரவரி 2008

சாமியே ஐயப்பா, முற்போக்கு என்பது பொய்யப்பா!

ஜெயலலிதா நீண்டகாலம் ஆள்வதற்கு ஜோதிட ஆலோசனைகள் தந்து பரிகாரம் செய்ய வைத்தவர் கேரள ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர். கண்ணகி சிலை இடிப்பு, பழனி முருகன் சிலை மாற்றம், முதுமலை யானைகள் முகாம் முதலியவை பணிக்கர் மூலம் நடந்த கைங்கரியங்கள் என்று கூறப்படுகின்றது. நாடறிந்த ஒரு ஊழல் தலைவியின் ஆட்சியை நீட்டிப்பதற்கு "மந்திர' ஆலோசனை வழங்கிய பணிக்கரின் யோக்கியதை எத்தகையதாக இருக்கும் என்பதை வாசகர்கள் அதிக விளக்கமின்றியே புரிந்து கொள்ளலாம். அப்பேற்பட்ட பணிக்கர் சபரிமலை குறித்து ஒரு பிரச்சினையை எழுப்பியிருக்கிறார்.

சாதாரண மக்கள் தமது வாழ்க்கைப் பிரச்சினைக்கு ஜாதகப்பலன் பார்த்து பரிகாரம் செய்வது போல கடவுளுக்கு பார்ப்பதை கேரளத்தில் தேவப்பிரஸ்னம் என்கிறார்கள். அப்படி பணிக்கர் தலைமையிலான ஜோதிடர்கள் சபரிமலை ஐயப்பனுக்கு தேவப்பிரஸ்னம் பார்த்தபோது ஐயப்பன் கோபமாக இருப்பது தெரிந்ததாம். அந்தக் கோபத்திற்கு முக்கியக் காரணம் ஐயப்பனை யாரோ ஒரு ஸ்தீரி ஸ்பரிசத்துவிட்டது தானாம். உடனே நடிகைகள் ஜெயமாலாவும், சுதாசந்திரனும் பல ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் ஐயப்பனைத் தொட்டதாகத் தாமே முன்வந்து ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கோரினர். ""என்னை காங்கிரசு தலைவர்கள் பலவிதமாகப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டார்கள்'' என்று அறிக்கை விட்ட நடிகை மாயா, சத்தியமூர்த்தி பவனையே சந்திக்கு இழுத்ததைப் போல இவர்கள் ஐயப்பனின் "பிரம்மசர்யத்தையே' கேலிக்குள்ளாக்கி விட்டனர்.

""இது சபரிமலையின் புகழைக் கெடுக்க பணிக்கர் செய்யும் சதி'' என சபரிமலை பூசாரிகளும், சபரிமலையின் பாரம்பரியம் கெட்டுப் போய்விட்டதாக எதிர் கோஷ்டியினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். நடிகைகள் தொடும்போது அதைக் கள்ளத்தனமாக அனுபவித்த ஐயப்பனோ குத்துக்காலிட்டபடி தேமே என்று அமர்ந்திருக்கிறார். உண்மையில் இந்தப் பிரச்சினை சபரிமலையின் வருமானத்தை அனுபவிக்கும் இரு கோஷ்டிகளுக்கிடையிலான மோதலில் அடங்கியிருக்கிறது. சபரிமலையின் ஆண்டு வருமானம் 200 கோடி ரூபாய். இந்த வருமானத்தை அரசு, அதிகார வர்க்கம், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, மற்றும் பூசாரிகள் ஆகியோர் ஆடம்பரமாக அனுபவிக்கின்றனர். இந்தப் பங்குச் சண்டைதான் ஐயப்பன் கோபம் என்றும் சதி என்றும் எழுந்திருக்கிறது.

இந்தப் பங்காளிச் சண்டையில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதுதான் கண்டனத்திற்குரியது. ஒரு கோவிலுக்கு பெண்கள் வரக்கூடாது என்றும் வந்தால் தீட்டு, பாவம் என்றும் ஒரு மதம் சொல்லுகிறது என்றால் அந்த மதம் நிச்சயமாக காட்டுமிராண்டிகள் மதமாகத்தான் இருக்க முடியும். பக்தர்கள் குறிப்பாக பெண் பக்தர்கள் இதற்கெதிராக போர்ப் பிரகடனம் செய்து போராடுவது அவசியம். அல்லது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஐயப்பனை ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் மட்டும் தரிசிக்கலாம் என்றாவது மாற்றியமைக்க வேண்டும். விரதம் என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தி, அதையே ஆண்மையின் வீரசாகசமாகச் சித்தரித்துக் கொண்ட இந்த வெட்கம் கெட்ட வழிபாட்டு முறை பெண்கள் மூலமே "கவித்துவ நீதி'யை சந்தித்திருக்கிறது. இனியாவது பக்தர்கள் சிந்திக்கட்டும்.

இந்தப் பிரச்சினையில் கேரளாவை ஆளும் மார்க்சிஸ்டுகள் ""சாமியே ஐயப்பா முற்போக்கு பொய்யப்பா'' என்று சரணம் பாடுகிறார்கள். தீட்டுப்பட்ட ஐயப்பனுக்கு இரண்டு மாதம் பரிகாரச் சடங்கு செய்து கோபத்தைத் தணிப்பதாகவும், ஜெயமாலா தொட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தப் போவதாகவும் மார்க்சிஸ்டு மந்திரிகள் அறிக்கை விடுகிறார்கள். ""வருமானத்தைக் குலைக்க சதி'' என்று பதறுகிறார்கள். உண்டியலைக் குறி வைத்து சதி செய்தது ஏழுமலையானாகவோ, பழனி ஆண்டவனாகவோ இருக்கும் பட்சத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவைப்படும். ஐ.எஸ்.ஐ சதி என்றால் இன்டர்போலை அழைக்க வேண்டியிருக்கும்.

ஜெயமாலா கதை, ஏட்டு முதல் எஸ்.பி. வரை ஜெயலட்சுமி கதை போல நீள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அல்லது தேசநலன் மற்றும் தெய்வ நலன் கருதி இந்த தேவரகசியம் கமுக்கமாக அமுக்கப்படவும் வாய்ப்புண்டு. எவ்வாறாயினும், ஆன் மீக மோசடிகளை அம்பலப்படுத்துவதில் ஆத்திகர்களுக்கு உள்ள திறமை நாத்திகர்களுக்கு இல்லை என்ற உண்மையை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும்.

நன்றி* புதிய கலாச்சாரம்